சனி, ஜூலை 2

ஐந்தாம் திசை தேடி அலையும் கதைகள் -ஆதவன் தீட்சண்யா



ஷோபாசக்தியின் கதைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு அம்ருதா பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் "முத்துக்கள் பத்து" தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை
ருவரது ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் என்னவாக இருந்தாலும் அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா இல்லையா என்பதைக் கொண்டே மதிப்பிடுகிற வினோத அளவுமானியொன்று நீண்ட காலமாக இங்கு புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த அளவுமானியினால் மதிப்புக் குறைக்கப்பட்ட சரியாகச் சொல்வதென்றால் அவமதிப்பு செய்யப்பட்ட ஆளுமைகளுடைய பட்டியலின் தலைவரிசையில் ஒரு பெயர் தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறதென்றால் அது ஷோபாசக்தியினுடையதாகத்தான் இருக்கும். பெரும்போக்கிற்கும் அதிகாரத்திற்கும் எதிராக உண்மையைப் பேசும் அவரது அரசியலை ஒம்பாத கருத்தியல் எதிரிகள், அவரது அரசியலை எதிர்கொள்ள முடியாதபோது எழுத்தையும் அவரது எழுத்தை எதிர்கொள்ளமுடியாதபோது அரசியலையும் அவதூறு செய்வதற்காக இடையறாது இயங்குகின்றனர். உண்மையைச் சொல்வதென்றால் அவரது அரசியல் தான் எழுத்து, எழுத்துதான் அரசியல். அவதூறுகளால் நிலைகுலையாத அந்த  அரசியலின் கலைவெடிப்பாக இத்தொகுப்பிலுள்ள கதைகளைச் சுட்டமுடியும்.

காலத்தைப் பிரதிபலிப்பதான பாசாங்கில் பொதுப்புத்திக்குள் தேங்கி அதையே நியாயப்படுத்தும் குப்பைகள் தமிழில் சிறுகதைகளாக மலிந்திருக்கின்றன. காலத்தைக் குறுக்கீடு செய்யும் கதைகள் வெகு சொற்பம். வாழ்வில் அரிதாகிப் போன மென்மையான தருணங்களை நெக்குருக எழுதி இந்தச் சமூகம் எவ்வெப்போதும் நல்லவிதமாகவே இருக்கிறது என்று பிரமைக்குள் ஆழ்த்தும் மோசடிகளுக்கும் பஞ்சமில்லை. இப்போது தேவைப்படுவதெல்லாம், வாழத்தகாததாய் இந்தச் சமூகம் ஒவ்வொரு நொடியிலும் பாழ்பட்டு வருவதை அப்பட்டமாகச் சொல்லி அதுகுறித்த உணர்வுகளைத் தூண்டச் செய்யும் எழுத்துகளே. லட்சக்கணக்கான வருடங்களின் பரிணாம வளர்ச்சியில் எட்டிய மனித நிலையை அதனிலும் கீழான நிலைக்கு தாழ்த்தி வரலாற்றைப் பின்னோக்கிச் சுழற்றும் குரூரங்களை அம்பலப்படுத்துவதன்றி எழுத்துக்கு வேறென்ன   இலக்கு இருக்க முடியும்? சமகாலப் பிரச்னைகளை கதைக்குள் பேசத்தொடங்கினால் கலையமைதி குலைந்துவிடும் என்கிற சால்ஜாப்பை சொல்லி வெகுகாலத்திற்கு தப்பித் திரிய முடியாது. சமகால வாழ்வினை அதன் சகல பரிமாணங்களோடு கதையாக மாற்றித் தருவதற்கான சவாலை எதிர்கொண்டு அதற்காக உழைப்பதன் வழியே கண்டறியும் நுட்பங்களுடன் எழுதக் கோருகிறது காலம். காலத்தின் அத்தகைய கோருதலை உணர்ந்த ஒரு குரல் ஷோபாசக்தியினுடையது. அவர் சொல்கிறார்-

‘நமது சூழலில் இலக்கியமும் தீவிர நேரடி அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பகுத்துப் பார்க்க முடியாதவாறு ஒன்றில் ஒன்று கலந்திருக்கின்றன.  அதிகார சக்திகளின் எந்தவொரு மக்கள்விரோத செயலுக்கும் நாம் உடனுக்குடன் எதிர்வினைகள் செய்ய வேண்டும். அதிகாரச் சக்திகளின் நிழலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நின்று நாம் எழுதுவதைவிட எழுதாமல் சும்மாயிருந்து மதுவருந்தி மாய்வதே மேலானது என்பது எனது உறுதியான கருத்து. ஒரு புனைவு எழுத்தாளன் அரசியல் எழுத்தில் ஈடுபடும்போது அவனுடைய படைப்பாற்றல் திசைதிருப்பப்படுகிறது என்றொரு கருத்தும் இலக்கிய எழுத்துலகில் காலம்காலமாய் ஒருசாராரால் பரப்பப்பட்டு வருகிறது. நமது சகமனிதன் கொல்லப்படும்போது, சமூக இழிவில் வாழும்போது, அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கும் போது அதைக் குறித்துப் பேசாமல் படைப்பாவது மயிராவது! நம் ஒவ்வொரு எழுத்தும் நமது சகமனிதருக்காகத் துயருறுவதே இன்றைக்கான புலம் பெயர்ந்தோர் இலக்கியமாக இருக்க வேண்டும். கொண்டாட்டத்தையும் காதலையும் நம் அடுத்த தலைமுறை எழுதட்டும். அதற்கான முன்நிபந்தனையாக நாம் உண்மையை எழுதவேண்டும். அதாவது துயரை எழுதவேண்டும். ஏனென்றால் நம் காலத்தில் உண்மை என்பது துயராய் இருக்கிறது...’

இவ்வளவு தீர்க்கமான அரசியல் பார்வை கொண்ட இவரது பெரும்பாலான கதைகள் தனி ஈழத்திற்கான போராட்டத்துடன் தொடர்புடையவை.  அதேவேளையில், தனி ஈழ ஆதரவு தனி ஈழ எதிர்ப்பு என்று தொடங்கி பின்னாளில் புலி ஆதரவு புலியெதிர்ப்பு என்பதாக குறுக்கப்பட்ட ஈரெதிர் தட்டை நிலைகளிலிருந்து விலகி நிற்பவை. தமிழர்கள் தனிஈழம் கோருவதற்கு இருபதாண்டுகளுக்கும் முன்பிருந்தே தமிழர்கள் மீது இலங்கை அரசப்படையாலும் சிங்கள இனவாதிகளாலும் நிகழ்த்தப்பட்டு வரும் கூட்டுப் படுகொலைகள், வன்முறைகள், பாலியல் சித்திரவதைகள், சொத்தழிப்பு, காணிபறிப்பு, கல்விமறுப்பு ஆகியவற்றை கண்டும் கேட்டும் கொதிக்கும் உள்ளம் அவருடையது. சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையும் அதற்கெதிராக தொடங்கப்பட்ட போராட்டமும் வடகிழக்கின் தமிழர்களை மட்டுமல்லாது, மலையகத் தமிழர்கள், தமிழ்பேசும் முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று இலங்கையின் குடிமக்கள் ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்வையும் என்னவாக  சிதைத்திருக்கிறது என்பதை காட்டிச் செல்லும் இவரது கதைகள் நமது முன்முடிவுகளை பொலபொலவென உதிரச் செய்பவை. வீரம், மானம், ஆயுதம், போர், மனிதவுரிமை மீறல், பேச்சுவார்த்தை, சமாதானம், அதிகாரப்பகிர்வு, புலப்பெயர்வு  என்று வெறும் சொற்களாக நம்மை வந்தடைகிறவற்றுக்குப் பின்னே அழித்தொழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் உயிர்களின் வாதையை பெருங்குரலெடுத்துப் பேசுபவை.

காட்டுமிராண்டிகாலத்திலும்கூட கையாளப்படாத, மனிதமாண்புகளுக்குப் புறம்பான அவமதிப்புகளும் வன்முறைகளும் சித்திரவதைகளும் அதிகாரத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரங்களின் பூமியாக இருக்கிறது இலங்கை.   ஊனமுற்ற தன் காலிலிருந்து வெட்டியெடுத்து திணிக்கப்பட்ட சதைத்துண்டை விழுங்க நேர்ந்தவர்களும், சற்றே அசைந்தாலும் சதைகளை குத்திக் கிழித்துவிடும்படியாக முட்கம்பிகளால் பின்னப்பட்ட முக்கோண வடிவ கரப்புக்குள் நாட்கணக்கில் ஆடாமல் அசையாமல் தூக்கமும் உணவுமின்றி அடைக்கப்பட்டவர்களும், உடம்பெல்லாம் பல் பதிந்த காயங்களோடு பிணமாக கண்டெடுக்கப்படும் பச்சிளம் பாலகிகளும் ஷோபாவின் கதைகளின் வழியே அதற்கு சாட்சியமாய் வந்து நம்மை பதகளிக்க வைக்கிறார்கள். அரச பயங்கரவாதத்தை எதிர்த்து உருவான இயக்கங்கள் சந்தேகத்தின் பேராலும் யூகங்களின் பேராலும் பயங்கரவாதத்தின் அஞ்சத்தக்க வடிவங்களை தமது சொந்த மக்கள்மீதே பிரயோகிப்பதைக் கண்டு விம்மி வெடிக்கும் நெஞ்சோடு பேசும் இக்கதைகள் தன்னியல்பாகவே பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் வெளிப்பட்டிருப்பவை.  நாலாப்புறமும் அடைபட்ட நிலையில் ஐந்தாம் திசை தேடியலைந்த அந்த மக்கள் மார்பிலே ராணுத்தின் குண்டுகளையும் முதுகிலே இயக்கத்தவர்களின் குண்டுகளையும் தாங்கிச் சாக நேரிட்டதற்காக நியாயம் கேட்பவை. அவரே ஓரிடத்தில் சொல்வது போல ‘இந்த யுத்தத்தில் நானுமொரு முன்னைய பங்காளி என்ற வகையிலும் இந்த யுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்தும் என் கருத்துகளையும் யுத்த எதிர்ப்புக்குரலையும் ஒலித்துக் கொண்டுதானிருப்பேன். காதுள்ளவர் கேட்கட்டும்.’

***
இலங்கை பிரிட்டிஷாரின் காலனியாக இருந்த காலத்தில் அவர்களோடு நெருக்கமும் அரசதிகாரத்தில் செல்வாக்கும் பெற்றிருந்த யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகள் 1875 முதலே பிரிட்டனுக்கும், மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற பிரிட்டிஷாரின் மற்ற காலனி நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று பொருளீட்டி வருவதில் ஆர்வம் காட்டினர்.  இலங்கையின் பொருளாதாரத்தை மணியார்டர் பொருளாதாரம் என்கிற புதுவகைமையால் சுட்டுமளவுக்கு அவர்களது பணப்போக்குவரத்து பெருமளவினதாய் இருந்திருக்கிறது. தமது பெண்கள் மிலேச்சர்கள் நடத்தும் மிஷனரி கல்விக்கூடங்களுக்கு படிக்கப் போய் கலாச்சாரம் பாழ்படுவதை தடுப்பதற்காக இவர்கள் கொடுத்த நிதியாதாரத்திலிருந்துதான் யாழ்ப்பாணத்தில் சைவப்பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 1929 பிப்ரவரியில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட மலாயன் பென்சனர் சங்கத்தில் 1962ஆம் ஆண்டு 2030 பேர் ஆயுட்கால உறுப்பினர்களாக பதிந்திருக்கிறார்கள் என்கிற விவரத்தைப் பார்க்கும் போது அதுவரைக்காலமும் அவர்கள் பிறநாடுகளுடன் வைத்திருந்த தொடர்பை அறிய முடிகிறது. இதேபோல 1960களில் பிரிட்டன் அரசு அறிவித்திருந்த சிறப்புத்திட்டம் ஒன்றின்கீழ் அநேக யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் தேசிய சுகாதாரத்துறையில் மருத்துவப் பணியாளர்களாகவும் வேறுபல வெள்ளைக்காலர் உத்தியோகஸ்தர்களாகவும் சேர்ந்துள்ளனர்.

இப்படி உலகின் பல நாடுகளிலும் பல்கிப் பெருகியிருந்த யாழ்ப்பாண மேட்டுக்குடிகளுடன் தொடர்பிலிருந்த சொந்தபந்தங்கள், இலங்கையில் இனமோதல்கள் அதிகரிக்கத் தொடங்கியதும் அந்தந்த நாடுகளுக்கு எளிதாக புலம் பெயர்ந்து போய்விட்டனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காகவும், உயிர்வாழும் எளிய ஆசையினாலும் சொந்த மண்ணைத் துறந்து அகதிகளாக வெளியேற நேர்ந்த பலர் அடைந்த துன்பதுயரங்கள் கொடூரமானவை.  யாழ்ப்பாணத்தின் தெருவில் நிறுத்தி நாலுசுற்று சுற்றிவிட்டால் வீட்டுக்குப் போகும் வழி தெரியாமல் முழித்து தடுமாறக் கூடியவர்கள் என்று ஷோபாசக்தியால் குறிப்பிடப்படும் அந்த வெள்ளந்திகள் எத்தனையோ காடுமலை கண்டங்கடல்களைத் தாண்டி ஏதேதோ நாடுகளின் எல்லைக்கம்பிகளில் முதுகுத்தோல் குத்தி ரத்தம் சொட்டச்சொட்ட கள்ளத்தனமாக புகும்படியாக அவர்களை வாழ்க்கை வெருட்டியிருக்கிறது. இந்திய வம்சாவளித் தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று பழித்து மகிழ்ந்த சமூகத்தில் பிறந்தவர்கள், உலகின் ஏதாவதொரு நாட்டின் எல்லையை பதுங்கிப்பதுங்கி கடக்க நேரிட்ட அவலம் ஒரு வரலாற்று முரண்தான்.

இலங்கைப்படையினர் வடக்கை விட கிழக்கிலேயே அதிகமான கூட்டுப் படுகொலைகளை செய்திருந்த போதும், வடக்கே நிகழ்த்திய தமிழர்விரோத அட்டூழியங்களுக்கு சற்றும் குறையாவண்ணம் கிழக்கிலும் நிகழ்த்திய போதும், கிழக்கின் மக்கள் பெருமளவில் புலம் பெயராமல் தாயகத்திலேயே இருக்க, வடக்கிலிருந்தோ புலப்பெயர்வு இன்றும் தொடர்கிறது.   புலம் பெயர்ந்து செல்வதற்கும் சென்ற பின் தங்குவதற்கு இடமும் வயிற்றுப்பாட்டுக்கு வேலையும் அகதிக்கார்டு பெறுவதற்கான அல்லாட்டமுமாகிய தொடர்முறையின் ஒவ்வொரு கட்டமும் தமிழர்களே தமிழர்களுக்கு எதிராய் நிகழ்த்தும் சுரண்டல் ஏமாற்று களவு வஞ்சகங்களால் நிரம்பியது. ஒரு சாண் வயிற்றை நிரப்பவும் தலை சாய்த்து தூங்க ஓர் இடத்துக்கும் மனிதகுலத்தைத் தவிர வேறெந்த சீவனும் இவ்வளவு அல்லலையும் இழிவையும் சந்திக்கிறதா என்கிற துயரம் மிக்க கேள்வியை அங்கதமாய் எழுப்புகிறார் ஷோபாசக்தி.

எல்லாவற்றையும் இழந்து பல்லாயிரம் மைல்கள் ஓடிவந்த அவர்கள் சுமந்துவந்த இரண்டில் ஒன்று உயிர், மற்றது சாதி. அவர்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட இரண்டும் ஒரே பெறுமதி கொண்டவை என்பது வருந்தத்தக்க உண்மை. தாழ்ந்த சாதிக்காரனைக் காதலிக்கும் மகளை எரித்துக் கொல்லும் பெற்றோர்களும், தந்தையின் இறுதிச்சடங்கை செய்யும் தருணத்தில்கூட  தங்களை கரையார் என்று பிறர் தாழ்வாக நினைத்துவிடக்கூடாதெனச்  சினக்கும் மகன்களும் நிரம்பியதாக இருக்கிறது புலம்பெயர் இலங்கைத் தமிழ்ச்சமூகம். சாதியாச்சாரம் அனுமதிக்காத வேலைகளைச் செய்துகொண்டும் சாதியாச்சாரத்துக்குப் புறம்பான உணவை உண்டபடியும் புழங்கத்தகாதவையென சாதி சொல்லும் இடங்களிலெல்லாம் புழங்கிக்கொண்டும் இருக்கிற அவர்கள் சாதிப்புனிதம், சைவத்தூய்மை காக்கப்போவதாக கூறிக்கொண்டு மெனக்கிடுவதில் உள்ள முரண்களைக் கண்டு ஷோபாவுக்கு ஏற்படும் பரிதாபமும் கோபமும் பகடியாக வெளிப்படாத கதைகளே இல்லையெனலாம்.

போர்ச்சூழலை காரணம் காட்டி தாயகத்திலும் புகலிடத்திலும் மறுக்கப்பட்டு வந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை  விடாப்பிடியாக ஏந்திப் பிடிக்கும் போராட்டத்தில் இணைந்துநின்று  எழுதப்பட்டவை இக்கதைகள் என்பதை கவனத்தில் கொள்க. அந்தப் பாரம்பரியம் அணையவிடாமல் சுடர்ந்ததன் தொடர்ச்சியிலேயே இப்போது போருக்குப் பிந்தைய இலக்கியம் என்கிற புதுவகைமை உருவாகி வருகிறது. முப்பதாண்டுகாலம் மறுக்கப்பட்ட  கருத்துரிமையை மீட்டுக் கொண்ட வேகம் கொப்பளிக்க, தங்களது வாழ்வில் போர் ஏற்படுத்தியிருக்கும் இழப்புகள் குறித்த ஒப்பறிக்கை போல பெருக்கெடுத்துவரும் இப்படைப்புகள் ஷோபாசக்தியின் தலைமுறையினர் தமது படைப்புகள் வழியே இதுவரைகாலமும் முன்வைத்த நியாயங்களுக்கும் எழுப்பிய கேள்விகளுக்கும் வலுசேர்ப்பவை.

***

இலங்கையிலிருந்து வெளியேறி கனகாலம் கடந்துவிட்ட நிலையிலும் தாயகத்தின் மக்களோடும் அங்குள்ள அரசியல் சூழலோடும் உயிரோட்டமான தொடர்புகளைப் பேணி அவரளவுக்கு எழுதியவர் என்று அவரையேதான் சொல்லமுடியும். தாயகத்திற்கு திரும்பும் வாய்ப்பை இழந்திருக்கிற அவர் இலங்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அசைவையும் ஒவ்வொரு நொடியிலும் உன்னிப்பாக கண்டாற்போல அவதானித்து அவர்களது மொழியில் எழுதுவதைக் காணும் போது அவரது உடலும் உயிரும்தான் புலம்பெயர்ந்திருக்கிறதேயன்றி அவரது ஆன்மா இன்னமும் அந்த மண்ணில்தான் உளைந்து அலைகிறது என்று நினைத்துக் கொள்வேன். இத்தொகுப்பின் கதைகளை வாசிக்கும்போது நீங்களும் அவ்வாறே நினைப்பீர்கள் என நம்புகிறேன். 

தீபன் படத்தின் நாயகனென்று சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அவர் ஆக்காட்டி இதழில் “இறைக்கிற கிணறுதான் சுரக்கும். இலக்கியம், சினிமா, இசை, நாடகம் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புள்ள கலைகள்.  இந்தக் கலைகளின் சங்கமம்தானே சினிமா. எனது இலக்கியப் பரிச்சயம் நான் பங்கெடுக்கும் சினிமாவுக்கும் எனது சினிமாப் பரிச்சயம் நான் எழுதும் இலக்கியத்திற்கும் உறுதுணைகளாகவே அமையும். தவிரவும் நான் சினிமாவில் பங்கெடுப்பது என்பது எப்போதாவது ஒருமுறைதான் நிகழும் செயல். இலக்கிய வாசிப்பும் எழுத்தும் இல்லாமல் எனக்கு ஒரு நாளில்லை…” என்று சொல்லியிருக்கிறார். இலக்கிய வாசிப்புக்காகவும் எழுத்துக்காகவுமே உதிக்கிற அவரது ஒவ்வொரு நாளிலிருந்தும் புதிய கதைகள் நமக்கு கிடைப்பதாகுக. 

23.10.15

மேற்கோள்கள்:
1.முப்பது நிறச் சொற்கள், ஷோபாசக்தியின் கட்டுரைகள், கருப்புப்பிரதிகள் வெளியீடு
2. ஆக்காட்டி – கலை இலக்கிய இருமாத இதழ், 2015 ஜூலை -ஆகஸ்ட்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...