புதன், ஜனவரி 14

எங்கே அந்த காசு கண்ணன்? - ஆதவன் தீட்சண்யா

பெருமாள் முருகன் காலச்சுவடு பத்திரிகை மற்றும் பதிப்பகத்திற்கென அறிவுரீதியாக பெரும் பங்களிப்பு செய்துவருபவர். அதன் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருப்பவர். தனது அநேக நூல்களை காலச்சுவடு பதிப்பகத்திற்கு வெளியிடக் கொடுத்து வருமானம் ஈட்டித்தந்தவர். இந்துத்துவ மற்றும் சாதியவாதிகளால் தற்போது பிரச்னைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் அவரது மாதொரு பாகன் நாவலை வெளியிட்டிருப்பதும்கூட காலச்சுவடுதான். இப்படி தன் வாழ்நாளின் பெரும்பகுதியை காலச்சுவடுக்கு அவர் ஒப்புக்கொடுத்திருக்க, அவருக்காக ஏதேனும் காலச்சுவடு ஏதாவது செய்திருக்கிறதா என்கிற கேள்வியை இத்தருணத்தில் எழுப்புவது அவசியமாகிறது.

மாதொரு பாகன் தொடர்பில் பெருமாள் முருகனுக்கு அச்சுறுத்தலும் நெருக்கடிகளும் அதிகமான நிலையில் அது ஊடகச்செய்தியானது. இதையொட்டி பதிப்பாளர் என்கிற முறையில் ஊடகங்கள் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னதைத் தவிர இவ்விசயத்தில் காலச்சுவடு கண்ணன் வேறு ஏதாவது செய்திருக்கிறாரா என்று தேடினால் எதுவுமே இல்லை எனச் சொல்லலாம். அவரது முகநூல் பக்கத்தில் போய் பார்த்தால் அவர் யார்யாருடனோ இளித்துக் கொண்டிருக்கிற படங்கள்தான் இருக்கின்றனவேயன்றி பெருமாள் முருகன் என்றொரு எழுத்தாளன் எதிர்கொண்டிருக்கும் பிரச்னை பற்றி யாதொரு தகவலும் இல்லை. பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் இயக்கங்கள் பற்றியோ அல்லது இது குறித்து அவருடைய கருத்தாகவோ எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் இப்படியொரு பிரச்னை நடந்துகொண்டிருப்பதாக யூகிப்பதற்கான எந்தவொரு தகவலும் தடயமும் இல்லை. இன்று காலையில்தான் பொதுமனு ஒன்றில் அவர் கையெழுத்திட்டிருக்கும் சுட்டி பதிவேறியிருக்கிறது. கருத்துரிமைக்கான போராட்டம் தொடரும் என்று கட்டுரையோ தலையங்கமோ எழுதி கணக்கு காட்டலாம் என நினைக்கிறார் போலும்.

காலச்சுவடு கண்ணனின் வலைப்பின்னலும் தொடர்புகளும் பலரும் அறிந்தவைதான். தனக்கு தலைவலி என்றால் ஊரே தைலம் தேய்த்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல அடித்துப் புரண்டு கருத்தைத் திணிக்கிற அவரது சாமர்த்தியமும்கூட நாமறிந்ததுதான். ஆனால் இதையெல்லாம் ஏன் பெருமாள் முருகன் விசயத்தில் பயன்படுத்தி அவரை காப்பாற்ற முன்வரவில்லை என்பதே நம் கேள்வி.

புதுமைப்பித்தன் பெயர் விவகாரத்தில் நீதிமன்றம் போகத்தெரிகிறது. போனில் திட்டியவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கிட போலிசை ஏவத் தெரிகிறது. நூலகங்களுக்கு வாங்கப்பட்டு வந்த காலச்சுவடு நிறுத்தப்பட்டதுமே கருத்துரிமைக்கு ஆபத்து என்று கதறிக்கொண்டு கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு நடத்த முடிகிறது. மாதொரு பாகன் சர்ச்சைக்குள்ளானதும் கூடுதலாக விற்குமென எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான பிரதிகளை அச்சடித்து தயார்நிலையில் வைத்துக் கொள்ளத் தெரிகிறது. புத்தகச்சந்தையின் வருகையாளர்களை ஈர்ப்பதற்காக வெளியீட்டு விழாக்களை நடத்த முடிகிறது. ஆகவே பெருமாள் முருகனுக்காக  ஒரு இயக்கத்தை நடத்துவார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்துபோயினர். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பெருமாள் முருகனையும் பதிப்பாளர் கண்ணனையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது தனது வழக்கறிஞரை மட்டும் அனுப்பிவிட்டு புத்தகம் விற்கப் போய்விட்டார் கண்ணன். அந்த வழக்கறிஞர் பாஜகஜக ஆள் என்றொரு தகவல். எனது கட்சிக்காரர் என்று ஒரு வழக்கறிஞர் சொல்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருப்பதாக இவ்விடத்தில் தோன்றுகிறது. தைரியமாக வாருங்கள், நான் சொன்னால்  ரகளை செய்கிற இந்துத்துவவாதிகள் கேட்டுக் கொள்வார்கள் என்று அந்த வழக்கறிஞர் அழுத்திச் சொன்னதை நம்பியே பெருமாள் முருகன் உடன்வரத் தயாராக இருந்த நண்பர்களையும் மாணவர்களையும்  தடுத்துவிட்டு தனியாக போய் அவர்களிடம் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வருகின்றன.

தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் துயரத்தின் வெடிப்பாக பெருமாள் முருகன் வெளியிட்ட கடிதம்கூட கண்ணனின் வியாபார மனதை உலுக்கவில்லை. பெருமாள் முருகனுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து குறைந்தபட்சம் இந்த புத்தகச்சந்தையிலிருந்து அவர் தன்னையும் தனது பதிப்பகத்தையும்  வெளியேற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அல்லது எழுத்தாளர் இல்லாமல் என்ன புத்தகம் என்ன புத்தகச்சந்தை என்று தனது தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி புத்தகச்சந்தையை ஒருநாளாவது மூடுவதற்கு முயற்சித்திருக்க வேண்டும். மேற்சொன்ன எதையுமே அவர் செய்யமாட்டார் என்பது ஒருபுறமிருக்க, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளர்களும் கலைஞர்களும் பத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களும் 13.1.15 மாலை நடத்திய அமைதிப் போராட்டத்திலும் கூட அவர் பங்கெடுக்கவில்லை.

எழுதுவதற்கு பெருமாள் முருகன், ஏச்சும் பேச்சும் வாங்குவதற்கு பெருமாள் முருகன், போராடுவதற்கு கருத்துரிமைவாதிகள். கல்லா கட்ட கண்ணனும் காலச்சுவடும். தேசமே தீப்பிடித்து எரிந்தாலும் சாம்பலை விற்று சம்பாத்தியம் நடத்து என்கிற கவிதை வரி கண்ணனுக்கும் காலச்சுவடுக்கும் மிகச்சரியாய் மறுபடியும் பொருந்தி நிற்கிறது. காலச்சுவடை சுருக்கி காசு என்றும், அது காலச்சுவடு அல்ல காலச்செவிடு என்றும் இலக்கிய வட்டாரத்தில் புழங்கும் பகடிகள் உண்மைதான் என்பதும் மறுபடி நிரூபணமாகியுள்ளது.

4 கருத்துகள்:

  1. "காலச்சுவடு " ஒரு பதிப்பகம் ! "சுரா" வின் பெயரைச்சொல்லி கல்லா கட்டும் பதிப்பகம் ! முற்போக்காளன் என்று சன்னமாக ஒருமுத்திரை குத்தக்கூடாதா என்று செம்மலருக்கு கடிதம் எழுதியவர் "சுரா "! எந்த பதிப்பாளர் எழுத்தாளரை மதித்திருக்கிறார் ! பதிப்பகங்கள் printing industry ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது தோழா ! வாழ்த்துக்களூடன் ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  2. பக்கத்திற்கு பக்கம் தனிநபர் உரிமை, ஜனநாயகம் என்றெல்லாம் பேசுவார்கள். செயல்பாட்டில் ஆனால் சுத்தமாக இல்லை. அங்கு வேலைபாக்க வேண்டுமென்றால் நல்ல அடிமையாக இருக்கவேண்டும் இல்லயெல் நடிக்கவேண்டும். எனக்கு இரண்டுமே சுத்தமாக வராது. நல்லவேளை அங்கெ வேலையை விட்டபின் நான் பதிப்பகதுறைக்கு திரும்பவில்லை. திரும்பியிருந்தால் ஆப்பு நிச்சயம். நான் காலச்சுவடில் வடிவமைப்பாளராக வேலை பார்த்தவன். நிறைய பேசலாம்போல தோன்றுகிறது. எதற்கும் நாவை அடக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. திருச்செங்கோட்டில் (அரசியல்சட்டத்தின் அடிப்படை நெறிகளுக்கு எதிரான) அரசுநிர்வாக சமரசம் என்ற பெயரில் நடந்த கட்டைப்பஞ்சாயத்து முடிந்த உடனேயே சென்னைக்கண்காட்சியில் பெருமாள்முருகனின் நூலை விற்பனை செய்யக்கூடாது என பபாசி முடிவுசெய்கின்றது; போலீஸ் ஒவ்வொரு ஸ்டாலிலும் தேடுகின்றது என்பதையும் நண்பர்கள் முகநூலில் பதிவு செய்கின்றார்கள்.
    எழுத்தாளனும் எழுத்தை அச்சடிப்பவனும் ஒரேமதிரியாக சிந்திக்க வேண்டியதில்லை என்பதை பபாசி நிரூபிக்கின்றது; பூப்புனித நீராட்டுவிழா, நீத்தார் நினைவாஞ்சலி...போன்ற விசயங்களை அச்சடிக்கின்ற அச்சகத்தார்கள் பபாசியை விடவும் உண்மையில் நேர்மையானவர்கள்; தாங்கள் தொழில் நடத்துவதாக வெளிப்படையாகவே சொல்கின்றார்கள், அதில் சத்தியம் இருக்கின்றது (ஜனவரி 15 என் முகநூலில் பதிந்தது).
    20 அன்று வள்ளுவர்கோட்டம் ஆர்ப்பாட்டத்தில் கண்ணனிடம் நேரடியாகவே நான் கேட்டேன்: ‘அரசு நூலை தடை செய்யாதபோது விற்பதில் உங்களுக்கு என்ன தடை?’ அவர் பதில்: விற்றால் தனக்கு ஆபத்து என்று பெருமாள்முருகன் சொல்கின்றார்.
    இக்பால்

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...