வியாழன், டிசம்பர் 11

மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யா




நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை: நந்தஜோதி பீம்தாஸ்

மீசை என்பது வெறும் மயிர்
சந்திப்பு/ நேர்காணல்/ நாவல் சுருக்கம்
  - ஆதவன் தீட்சண்யா


 பக்கம்: 176, விலை: ரூ. 130 /-
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை - 600 083
தொலைபேசி : 044 24896979

‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலுக்கான முதற் பதிப்புரை

உலகெங்கும் மக்கள் தமது சொந்த வாழிடங்களை விட்டு பெயர்ந்தோடிக் கொண்டிருக்கிறார்கள். ஊர், நாடு, கண்டம் என்று அவர்கள் நீங்கிவருகிற நிலப்பரப்புகளின் பரந்த கடல்களையும் நெடிய மலைகளையும் பனி, மழை, வெயிலுக்கூடாக அவர்கள் இரவும் பகலுமாய் நடந்தே கடக்கின்றனர். பாலைவனங்களில் பொசுங்கிய பாதங்களில் கசியும் ரத்தம் கொண்டு அவர்கள் புதிய பெருவழிகளை வரைந்தபடி விரைகிறார்கள். உடலும் மனமும் சோர்ந்து வீழும் இடங்களில் அபயம் கேட்டு இரைஞ்சும் அவலம் இன்று குடிமைச் சமூகத்தின் பெருந்துயராகியுள்ளது.

பிறந்த மண்விட்டு குடிமக்கள் அகலும் சமூகச்சூழல் நிலவுவதை ஒரு அவமானமாகக் கருதாத அரசுகள் இன்றைய நாகரீகச் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. மனிதகுலம் உயர்த்திப் பிடிக்கும் மாண்புகளை வெட்டிச்சாய்க்க வந்த கோடாரிகளென இவ்வரசுகள் நீடிக்கும் ஒவ்வொரு கணமும் உலகம் கடும் அச்சுறுத்தலைச் சந்திக்க வேண்டியுள்ளது. எந்தக் கூருணர்வும் இல்லாதவராலும்கூட வெறுக்கத்தக்கதாய் இழிவுற்றிருக்கும் இச்சமூகங்களில் சுயமரியாதையுடன் வாழவிரும்பும் ஒருவர் எதிர் கொள்ளும் இடர்ப்பாடுகள் அச்சமூட்டுகின்றன.

சகமனிதரோடு இணங்கி வாழ்வது குறித்த பன்னாட்டு பிரகடனங்களிலும் கூட்டறிக்கைகளிலும் கையொப்பமிட ஆர்வம் காட்டுகிற பலநாடுகள், அவற்றை தமது சொந்த மண்ணில் செயல் படுத்திட விருப்புறுதி கொண்டிருப்பதில்லை என்கிற கடும் குற்றச் சாட்டுகள் வெளிப்படையாகக் கிளம்பியுள்ளன. மொழி, இன, நிற, பாலின, பிரதேசப் பாகுபாடுகளுக்கு முடிவுகட்டும் தமது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும் அரசுகள், இப்பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் மக்கள்திரளை அடக்கியொடுக்குவதன் மூலம் பிரச்னையின் ஒரு தரப்பாக மாறிவிடுகின்றன. இப்போக்கின் ஆகக்கேவலமான உதாரணம் இலங்கை என்றால் அதை விடவும்  தாழ்ந்திருக்கிறது இந்தியா.

வேறு கலாச்சாரம் கொண்டோர் அண்டை அயலாராக வசிப்பதை விரும்பாதவர்கள் பற்றிய பன்னாட்டு கணக்கெடுப்பு ஒன்றில் ஜோர்டானியருக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தை இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். அந்தளவுக்கு மற்றமை மீதான வெறுப்பையும்   சகிப்பின்மையையும் இந்தியர் கடைபிடிப்பதற்கான காரணம் அங்குள்ள சாதியமே. ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிற இந்தியாவின் சாதி முறையானது, அறியப்பட்டுள்ள பாகுபாடுகளின் வடிவங்களுக்குள் அடங்காத ஒன்றாக இருந்து அச்சுறுத்துகிறது. மொழி, இன, நிற, பாலின, பிரதேசப் பாகுபாடுகளுக்கு எவ்விதத்திலும் குறையாத இந்தச் சாதிப் பாகுபாடு மற்றும் அதன்பேரிலான கொடிய ஒடுக்கு முறை குறித்து சர்வதேச சமூகம் போதுமான அளவில் தலையீடு செய்யவில்லை என்பதே உண்மை.  இப்பாகுபாட்டை சர்வதேச அரங்கில் ஒரு விவாதப்பொருளாக முன்னிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதில் அரசும் சாதியத்தின் ஆதரவாளர்களும் இணைந்து நிற்கும் தருணங்களே அதிகம்.

இனவெறிக்கெதிரான டர்பன் மாநாட்டுத் தீர்மானத்தில் சாதியைப்பற்றி ஒருவார்த்தையும் இடம்பெறாமல் தடுப்பதில் வெற்றியடைந்துவிட்ட இறுமாப்பிலிருக்கும் இந்தியாவின் ஆட்சியாளர்களது  நிம்மதியைக் குலைப்பவராக இருக்கிறார்  நந்தஜோதி பீம்தாஸ். சாதி இழிவுக்காளாகி அதன் காரணமாக தன் பதின்ம வயதில் பிறந்தமண்ணை விட்டு வெளியேறிய அவர் நாட்டை விட்டும் பின் அகன்றார். மீன்பிடி கப்பலொன்றின் சமையற்கட்டில் சிற்றாளாகச் சேர்ந்து பல நாடுகளுக்கும் சுற்றியலைந்த அவர் தனது பின்னிளமைக் காலத்தில் புனைவிலக்கியம் எழுதத்தொடங்கியவர். இந்தியாவுக்குள்ளிருந்து பட்ட அவமானங்களும் வெளியே நின்று பார்ப்பதால் கிடைக்கிற முழுப்பரிமாணமும் அவரது எழுத்தின் தனித்துவமாக இருக்கின்றன.

வல்லரசுக் கனவில் மிதக்கும் ஒருநாடு தன் சொந்தமக்களில் ஐந்திலொரு பங்கினரை என்னவாக நடத்துகிறது என்று குற்றப் பத்திரிகை தயாரிக்க இவரது எழுத்துக்களையே முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளலாம். நாடுகளுக்கிடையிலான போர்களில் கொல்லப் படுகிற அப்பாவி மக்களைக்காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையிலான தன் சொந்த மக்களை அன்றாடம்  கொன்று குவிக்கிற இந்தியாவின் அஹிம்சாவாதம் என்கிற போலித்தனம் மீதான கண்டனமாக விரியும் இவரது எழுத்துகள் மனிதவுரிமைக்கான போராட்டத்திற்கு உந்துவிசையாக இருக்கும் என நம்புகிறோம். தலைக்கு விலைவைத்து கொல்லப்பட்ட பௌத்தர்களின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டதால் கிடைத்திருக்கும் அஹிம்சை வேடத்தைக் கலைத்து இந்தியாவின் சுயரூபத்தை வெளிக்கொணரும் கடப்பாடு கொண்ட அவரது எழுத்துகள், இலக்கியத்தின் நோக்கம்தான் என்ன என்கிற கேள்விக்கு தகுமானமிக்க பதிலாகவும் விளங்குகின்றன.

நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை என்ற பொதுத் தலைப்பின் கீழ் புலம்பெயர் எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களை வெளிக்கொணரும் எமது திட்டம் திரு.நந்தஜோதி பீம்தாஸ் அவர்களிடமிருந்து தொடங்குவதைப் பெருமையாகக் கருதுகிறோம். பீம்தாஸின் நூல்களை வெளியிட்டுவரும் ஈஜின் நிலவறை நூலகத்தின் வழிகாட்டுதலோடு, அவரது வேறுபல நூல்களையும் பதிப்பிக்கவிருக்கும் எமக்கு வாசகர்கள் துணைநிற்பார்கள் என நம்புகிறோம்.

- ஃப்யூமி கெஃப்ளர்
வெளியீட்டுப் பிரிவுச் செயலாளர், “Otherside”
                                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...