வியாழன், ஜனவரி 12

வெறும் பதிவு என்ன வெங்காயத்துக்கு? - ஆதவன் தீட்சண்யா

தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபுவின்
"பிறிதொரு பொழுதில்" - கட்டுரைத்தொகுப்புக்கான முன்னுரை

தனது அறிவு, திறமை, கல்வி, ஆர்வங்கள் வழியாக சொந்த வாழ்வை பொருளாதாராரீதியாக மேம்படுத்திக் கொள்வதே இங்கு வாழ்வின் ஆகப்பெரும் லட்சியமாக முன்னிறுத்தப்படுகிறது. அதற்காக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கையாளப்படும் கீழ்த்தரமான உத்திகள் யாவும் முன்னேறுவதற்கான வழிகள் எனக் கொண்டாடப்படுகின்றன. சம்பாதனை, சொத்து, சொகுசுகள், பிரபலம், அதிகாரம் மட்டுமே வாழ்க்கை என்கிற இந்த செக்குமாட்டுத்தனத்தை புறந்தள்ளுவதற்கு ஒரு மனோதிடம் தேவைப்படுகிறது. அவ்வாறு விலத்தியடித்துவிட்டதற்கு பிறகு மேற்கொள்ளும் புதிய வாழ்வில் ஒன்று நீங்கள் துறவியாகலாம் அல்லது அரசியல் ஊழியராகலாம். துறவியானவர் எவற்றையெல்லாம் துறந்திருக்கிறார் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, அவர் அவருக்காக மட்டுமே வாழ்கிறவராக தேங்கிப்போய்விடுகிறார். அந்தவகையில் அவர் சுயநலத்தை முன்னிறுத்தி அலைகிறவர்களுக்குள் ஒரு தனிவகையானவர். மற்றபடி எவ்வகையிலும் வேறுபட்டவரில்லை. மட்டுமல்ல, வாழ்க்கை முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் மனத்துணிவற்று ஒதுங்கி தப்பித்துப்போகிறவருமாகிறார். இந்த அம்சங்களிலிருந்துதான் ஓர் அரசியல் ஊழியரது வாழ்க்கை வேறுபடுகிறது.

ஆனால் துறவைப்போலவே அரசியலும் வெகுவாக பாழ்பட்டுப் போயிருக்கிறது  என்கிற புகாரில் நூறுசதவீதத்திற்கும் மேலான உண்மை இருப்பதுபோல ஒரு தோற்றமுள்ளது. சாமியார்களை துறவிகளென தப்பர்த்தம் செய்துகொள்வது போலவே மக்களை அதிகாரம் செய்து பொறுக்கித் தின்று வயிறு வளர்ப்பதே அரசியல் என்று தவறாக விளங்கிக்கொண்டதனால் வருகிற புகாரிது. நாம் சொல்கிற அரசியல் என்பது மக்களுக்கு ஊழியம் செய்வது. அதாவது ஒடுக்கப்படுகிற, அதிகாரமற்ற, சமகால வாழ்வுக்குரிய வாய்ப்புகள் மறுக்கப்படுகிற மக்களைத் திரட்டி அரசியல்படுத்திப் போராடுவதும் முன்னேறுவதுமாகும். அதற்காக தனது அறிவு ஆற்றல் அனைத்தையும் முழு விருப்பத்துடன்  எவ்வித ஆதாயத்திற்காகவும் அல்லாமல் செலவிடுவது. அதன்பேரில் தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளை தாங்கிக்கொள்வது. அந்த அர்த்தத்தில் ரமேஷ்பாபு ஓர் அரசியல் ஊழியர். மாணவப்பருவம் தொட்டு இவ்வாழ்வை அவர் விரும்பி தேர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.

களப்பணி என்பது ஊர்ஊருக்கு அலைவதல்ல. பாதுகாப்பான அரங்குகளில் அல்லது மேடையில் ஏறி மக்களுக்கு எதிர்த்திசையிலிருந்து உரைவீச்சோ உபன்யாசமோ நிகழ்த்துவதுமல்ல. குறிப்பிட்ட ஊரில் / ஊரின் குறிப்பிட்ட பகுதியில் மக்களோடு கலந்துறவாடி அவர்களது பிரச்னைகளைக் கண்டறிந்து அவர்களது மொழியில் கோரிக்கைகளை உருவாக்கி அவற்றை அடைவதற்கான சக்திமிக்கப் போராட்டங்களை உடனிருந்து நடத்துவது என்பதே களப்பணி. இந்த நிகழ்முறையினூடாக மக்களை அமைப்பாக்குவதும் களப்பணியின் ஓரம்சம். இந்த அனுபவங்களை எழுத்தாக்கியதன் மூலம் ரமேஷ்பாபு களப்பணிக்கு கூடுதல் பரிமாணத்தை வழங்கியிருக்கிறார்.

உலகமயமாக்கம் என்பது பசப்பான அடைமொழிகளுடன் அமலாகிக் கொண்டிருக்கும்  அப்பட்டமான கொள்ளை என்பதன்றி வேறில்லை. அது அரசு  மற்றும் உள்ளூர் அடியாள்பட்டாளத்துடன் இந்த நாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் மக்களின் பாரம்பரிய வாழ்வாதரங்களையும் ஒருசேர சூறையாடி வருகிறது. கடற்கரையை பன்னாட்டு நிறுவனங்கள் கோலோச்சும் ஒரு திறந்தவெளிச்சந்தையாக  மாற்றும் அரசின் ‘வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள்’ கடும் அழிமானங்களை உருவாக்க வல்லது. கடல்சார் பூர்வகுடிகளான மீனவச்சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் கடல்வளம், கடற்கரை மீது  அவர்களுக்குரிய பாரம்பரிய உரிமைகளையும் பறிக்கக்கூடியது. இதுகுறித்து நேரடியாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலான ரமேஷ்பாபுவின் கட்டுரை கடலை விடவும் கொந்தளிப்பானதாக கடற்கரை மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
சிறப்பு பொருளாதார மண்டலம், தொழிற்பூங்கா போன்றவை தொழிலாளர்களை மனிதநிலைக்கும் கீழாக தாழ்த்திச் சுரண்டிவருகின்றன. தொழிலாளர்களின் குறைந்தபட்ச அடிப்படைத்தேவைகள் கூட அங்கு நிறைவேற்றப்படுவதில்லை. பணிப்பாதுகாப்பு, வேலைநேரம், ஊதிய நிர்ணயம், படிகள், சீருடை, மருத்துவம், காப்பீடு உள்ளிட்ட சட்டப்பூர்வ உரிமைகள் நலச்சட்டங்கள் எதுவும் இந்த தொழிற்பேட்டைகளுக்குள் அமலாவதில்லை. விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் கூட உரிய சிகிச்சையோ நிவராணமோ வழங்கப்படுவதில்லை. இத்தகயை சுரண்டலுக்கு எதிராக சங்கம் சேரவும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பார்கள். வடக்கிலும் சிலர் வாழ்கிறார்கள் தெற்கிலும் சிலர் வாழ்கிறார்கள், தொழிலாளர்களைப் பொறுத்தவரை எல்லா இடங்களிலும் சுரண்டப்படுகிறார்கள் என்பதே உண்மை. அதிகபட்சம் நாளொன்றுக்கு மிஞ்சும்   60 - 80 ரூபாய்க்காக  ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து அல்லலுறும் வட இந்தியத் தொழிலாளர்களின் அவலவாழ்வை ரமேஷ்பாபு சீற்றத்துடன் பதிவு செய்திருக்கிறார். அவர்களை  அணிதிரட்டுவதன் அவசியத்தையும் அதிலுள்ள இடர்ப்பாடுகளையும் உணர்ந்து தாங்கள் செய்த தலையீடுகளையும் தற்காலிக வெற்றிகளையும்  பகிர்வதன் மூலம் அது வெறும் பதிவாக சுருங்காமல் ஒரு செயலறிக்கையாகவும் செயலுக்கு தூண்டும் அறிவிக்கையாகவும் உருக்கொள்கிறது. நல்லதுதான், வெறும் பதிவு என்ன வெங்காயத்துக்கு? 

அண்ணாந்தபடியே சென்னையைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களை சமநிலைக்குத் திருப்பி கண்மட்டத்திலும் அதற்கு கீழும் உள்ள சென்னையை  பார்க்கவைக்கிறது இதிலுள்ள ஒரு கட்டுரை. கிராமப்புறங்களிலிருந்து நெட்டித் தள்ளப்படும் அடிநிலை மக்கள் கெட்டும் பட்டணம் சேர் என்று இம்மாதிரியான பெருநகரத்திற்கு வந்து எவ்வகையாக எங்கு வாழ்கிறார்கள் என்பது குறித்த கவனத்தை அது கோருகிறது.

எவ்வளவு கழிசடைத்தனமான கருத்தோட்டம் உள்ளவர்களையும் - அவர்கள் பிரபலமாய் இருக்கும் பட்சத்தில் எவ்வித விமர்சனமுமின்றி கட்டித்தழுவி உச்சிமுகர்ந்து நட்புகொள்ளும் மலினமான மனநிலையோடு சிலர் அலைவார்கள். அப்படியான பிரபலங்களுக்கு கறிசோறாக்கிப் போட்டு பீடா மடித்துக் கொடுப்பதிலேயே அவர்கள் பிறவிப்பயனை எய்திவிடுவார்கள். இருக்கப்பட்டவர்களுக்கு விருந்து வைத்துவிட்டு, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் நெஞ்சம் என்று வள்ளலார் ரேஞ்சுக்கு நெக்குருகிப் போகிறவர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. ஆனால் ரமேஷ்பாபுவின் மனமோ பேப்பர் பொறுக்கி ஜீவனம் கழித்து சாலையோரங்களிலும் பாலத்தடியிலும் தலைசாய்க்கும் ஒரு முதியவரோடு சகவாசம் கொள்ளவே அவாவுகிறது. முதியவரின் வசிப்பிடத்தில் நிகழ்ந்த நீண்டதொரு உரையாடல் முற்றுப்பெற்ற நள்ளிரவில் அவருடன் தேநீர் அருந்தும் ஆசை கிளர்கிறது. இந்தப் பிச்சைக்காரன் வாங்கிக் கொடுப்பதை குடிக்கமாட்டீங்களா என்றதுமே பதறிப்போய் முதியவரின் தேநீர் உபசாரத்தை ஏற்று திரும்பிவந்து எழுதப்பட்ட கட்டுரை உங்களது கரிசனம் எவர் பொருட்டு என்கிற கேள்வியை நம் ஒவ்வொருவரிடமும் எழுப்புகிறது. 

வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கவேமாட்டேங்குது என்று புலம்புகின்ற நேரத்தில் எதையாவது வாசிப்பது / எழுதுவது நல்லது. தனது பணிகளின் ஒரு பகுதியாக வாசிப்பையும் எழுத்தையும் ரமேஷ் கைக்கொண்டிருப்பதன் அடையாளமாக இத்தொகுப்பிற்கு சலீமா, சிலம்பு, நந்தன் குறித்த கட்டுரைகள் கிடைத்துள்ளன. மொழியும் சொல்லிப்போகும் பாங்கும் எழுப்பும் கேள்விகளும் குறுக்கீடுகளுமாக இழைந்து  சலீமா கட்டுரை, புனைவுக்கு மிக நெருக்கமாக வந்து சேர்ந்திருக்கிறது. ரமேஷ்பாபுவுக்குள்ளிருந்து வெளிப்பட எத்தனிக்கும் புனைவெழுத்தாளரின் தத்தளிப்பினாலும்கூட இது நேர்ந்திருக்கலாம். அவனையும் எழுதவிடுங்கள் தோழர்.



31. 12. 2016 / ஒசூர்

புதன், ஜனவரி 4

கேவலர்கள் - ஆதவன் தீட்சண்யா

காட்டேரியும் கழுகும் நரியும் புலியும்  
அஞ்சியொடுங்கும் கொடியோரென
மிருகக்கூட்டத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை
தத்தெடுத்திருக்கும் அரசாங்கம் 
அவர்களிடத்தில் கொடுத்திருக்கிறது
அதிகாரத்தையும் ஆயுதங்களையும் 

ஒழுங்கீனங்களையும் உற்பாதங்களையும்
ஊரெங்கும் பரப்பி  
குற்றங்களின் கிடங்கில் புழுத்து நெளியும் அவர்களது
ரத்தநாளத்தில் நிறைந்திருப்பதோ
சாக்கடையும் நஞ்சும் 

வலியோரிடம் இரந்தும் எளியோரிடம் பறித்தும்
வயிறுவளர்க்கும் கேவலத்திற்கு
படிப்பெதற்கு பயிற்சிதானெதற்கு

பாலுறுப்புகளாலான வசைச்சொற்களை மட்டுமே  
மொழியறிவாய் கொண்ட அவர்கள்
மனித உடலில் குறிகளையே தேடியலைகிறார்கள்

அவிழ்த்துக் காட்டத்தான் போகிறார்கள் என்றான பிறகு 
சீருடையோ வேறுடையோ வீண்
அம்மணமாகவே இருக்கட்டும்

அறுத்தெடுக்கத் தோதாயிருக்கும் எங்களுக்கு.

4.1.2017



செவ்வாய், ஜனவரி 3

மாண்புமிகு இரும்பு ஆண்மணி – ஆதவன் தீட்சண்யா

ருடத்தின் கடைசிநாள். முடியப்போகும் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் என்று எதையெதையோ தொலைக்காட்சிகள் தொகுத்து கொட்டிக்கொண்டிருந்தன. வரவிருக்கும் புத்தாண்டை வரவேற்கும் விதமான சிறப்பு நிகழ்ச்சிகளும் களைகட்டியிருந்தன. பிரபலமான நடிகநடிகையரும் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களாக ஒரு காலக்கணக்கை வைத்துக்கொண்டு அது முடிந்ததாகவும் தொடங்குவதாகவும் கொண்டாடுவதைப் பார்க்க எனக்கு அபத்தமாக இருந்தது. தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு வெளியே போய்வரலாம் என்று கிளம்பும் போதுதான் ‘இன்னும் சற்று நேரத்தில் தொலைக்காட்சிகளில் தோன்றி நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றவிருக்கிறார்’ என்கிற ‘‘பிரேக்கிங் நியூஸ்’’ திரையில் மின்னத் தொடங்கியது.

லிபரல்பாளையம் பிரதமர்களிலேயே மாண்புமிகு இரும்பு ஆண்மணி மிகவும் வித்தியாசமானவர். அதற்கு காரணம் அவரை வளர்த்தெடுத்த ராஷ்ட்டிரீய சர்வநாஸ்தி சபை. அலங்காரமான பெயரை வைத்துக்கொண்டு நாட்டை நாஸ்தியாக்கும் போலித்தனத்திற்கு பதிலாக, நாட்டை நாஸ்தியாக்கத்தான் போகிறோம் என்பதை பெயரிலேயே உணர்த்திவிடும் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டி அச்சபையை மக்கள் மிருகபலத்தோடு வெற்றிபெறச் செய்திருந்தார்கள். மிருகபலம் கொண்ட ஓர் ஆட்சி மனிதத்தன்மையோடு நடக்காது என்கிற உலகறிந்த உண்மையை லிபரல்பாளையத்திலும் மெய்ப்பிக்கப் பொருத்தமானவர் என்பதால் சபை அவரை பிரதமராக்கியது. முடிவுகள் எடுப்பதில் உறுதியாகவும், முடிவுகளை செயல்படுத்துவதில் அதைவிட உறுதியாகவும் இருக்கக்கூடியவர் என்பதை எடுத்தயெடுப்பில் பொளேரென உணர்த்தும்விதமாக அவருக்கு இரும்பு மனிதர் என்கிற பட்டத்தை சூட்டுவதே சபையினரின் விருப்பமாயிருந்தது. ஆனால் அந்தப்பட்டம் ஏற்கனவே அண்டை நாடான இந்தியாவில் வல்லபாய் படேல் என்கிற தலைவரை குறிக்கின்றபடியால் வேறோரு பொருத்தமான பட்டப்பெயரை உருவாக்குவதில் அவர்கள் தீவிரமாக முனைந்திருந்தார்கள். அவரது பட்டாப்பட்டி டவுசரின் அளவான 86 இன்ச் என்பதை மையப்படுத்தி ‘அகன்ற இடுப்பன்’ என்கிற பெயரும்கூட பரிசீலனைக்கு வந்தது. ஆனால் இறுதிப்படுத்தப்பட்டதென்னவோ ‘இரும்பு ஆண்மணி’. பிரிட்டனின் மார்கரெட் தாட்சர், இந்தியாவின் இந்திரா காந்தி, குனிஞ்சாங்குப்பத்தில் முதல்வராயிருக்கும் போதே மர்ம மரணமடைந்த முதல்வர் ஒருவர் ஆகியோர் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட மரபை அடியொட்டி எங்கள் பிரதமர் ‘மாண்புமிகு இரும்பு ஆண்மணி’ ஆனார். அப்போதிருந்து உலகத்தின் ஒரேயொரு இரும்பு ஆண்மணி எங்கள் பிரதமர் மட்டுமே. இரட்டை அர்த்தத்தில் கேலியாக சித்தரிக்கும் பல கதைகள் உருவாவதற்கான கெடுவாய்ப்பை எண்ணி வேறு யாரும் இரும்பு ஆண்மணி என்கிற பெயரை வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது இவ்விடத்தில் தேவையற்றதோர் உண்மை. எப்படியாயினும்  அவருக்கே அவரது உண்மையான பெயர் நினைவிலில்லாமல் போனது.  

இரும்பு ஆண்மணி என்கிற பெயரில் உள்ள உறுதித்தன்மை அவரது நடப்பில் இல்லாமல் போனதை நாடு வெகுசீக்கிரத்திலேயே கண்டுகொண்டது. சற்றே சூடேற்றி தேவைப்பட்ட விதத்தில் பலராலும் வளைக்கப்பட முடிந்தவராகியதன் மூலம் அவர் இரும்பு என்பதற்கு அவக்கேடான புதிய அர்த்தத்தை பெற்றுத் தந்திருந்தார். தனது சுயரூபம் அம்பலப்படுவதை சமாளிப்பதற்காக இரும்பு ஆண்மணி அவ்வப்போது இவ்வாறு தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பொதுவாக அவர் ஆற்றும் உரையை மக்கள் மிக கவனமாக காதைப் பொத்திக் கொண்டு கேட்டு ரசித்தார்கள். அவரது பேச்சைவிடவும் அங்கசேஷ்டைகளும் முகபாவங்களும் ரசிக்கும்படியாய் இருப்பதும் இதற்கொரு காரணம். மேடையிலிருந்து இறக்கிவிடப்பட்டதொரு நடிகர் உளவியல் சிக்கலுக்கு ஆளாகி எப்போதும் நடித்துக்காட்டியபடியே இருப்பது போன்றதோர் உணர்வை அவரது அங்கசேஷ்டைகளும் முகபாவங்களும் ஏற்படுத்தின. இப்படியான ஏற்பாடுகள் பலமாக இருந்தாலும், அவரது உரையில் பெரும்பாலும் உப்புச்சப்பில்லாத விசயங்களே இடம் பெற்றன. புதிதாக வாங்கிய துணிமணிகளை நாட்டுமக்களிடையே போட்டுக்காட்டி அபிப்பிராயம் கேட்பதுபோல அபத்தமாகவும்கூட ஆகிவிடுவதுண்டு. ஆகவே என்னத்த பேசிவிடப்போகிறார் என்கிற அசிரத்தையோடும் இன்றைக்கு எவ்வளவு கேலிக்குரிய விதமாக தோன்றப்போகிறாரோ என்கிற குறுகுறுப்புடனும்தான் நான் உட்பட பலரும் அந்த ‘பிரேக்கிங் நியூஸ்’ அறிவிப்பை பார்த்துக்கொண்டிருந்தோம்.

திரைப்படத்தில் கதாநாயகனை முதன்முதலாக காட்டும்போது ஒலிக்கும் பின்னணி இசையையும் ஒளிக்கோலங்களையும் நினைவூட்டும் விதமான காட்சியமைப்புக்கிடையே பிரதமர் மாண்புமிகு இரும்பு ஆண்மணி திரையில் தோன்றினார். எல்லாவற்றையும் எய்திவிட்டதற்கு பின்னான ஒருவகை நிறைவும் துறவும் கலந்த மனநிலைக்கு இசைவாக இருந்தது அவரது முகப்பொலிவு. எவ்வித உரைக்குறிப்புமின்றி நெடுநேரம் பேசும் வழக்கத்தையுடைய அவர் இன்றைக்கு கையிலே ஓர் அறிக்கையை வைத்திருந்தார். ‘மகிழ்ச்சிமிக்க புதிய லிபரல்பாளையம் புத்தாண்டில் பிறக்கும் என்று ஏற்கனவே நாட்டு மக்களுக்கு கொடுத்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் நான் இரும்பைப்போல உறுதியாயிருக்கிறேன். அதன்பொருட்டு நான் இந்தக் கணமே பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறேன். நன்றி. வணக்கம்...’ அறிக்கையை வாசித்து முடித்ததும் மண்டியிட்டு தரையை முத்தமிட்ட அவர் சரேலென அரங்கை விட்டு வெளியேறிய நிலையில் தொலைக்காட்சியின் திரை வெறுமையில் உறைந்தது.

*

இரும்பு ஆண்மணி  இப்படியொரு முடிவை அறிவிப்பார் என்று தாங்களே எதிர்பார்க்கவில்லை என்று ராஷ்ட்டிரீய சர்வநாஸ்தி சபையினர் கூறிக்கொண்டாலும் அவர்களுக்கு தெரியாமல் அவர் எச்சிலைக்கூட விழுங்கமாட்டார் என்றே மக்கள் பேசிக்கொண்டார்கள். இந்தளவுக்கு விசுவாசமான அடிமையை இவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட்டோமே என்கிற துக்கத்தில் தொண்டையடைத்துப் போன தொழிலதிபர்கள் சிலர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சைகையால் பதில் சொன்னார்கள். இப்படி சாகாக்களுக்கும் சகாக்களுக்கும் தெரிவிக்காமல் இரும்பு ஆண்மணி ஏன் பதவி விலகினார், அதற்கு பிறகு எங்கே போனார் என்பது குறித்து ஆளாளுக்கு யூகத்தில் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்த வேளையில் அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கடைசிச் செய்தி இதுதான்: பூலோகத்தில் இனி நான் பார்க்கக்கூடிய நாடோ நகரமோ எதுவுமில்லாத விரக்தியில் மேலோகம் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்.

கடைசி வாக்கியத்திலிருந்த அவரது வேண்டுகோளை நிறைவேற்றியே தீர்வது என்பதில் லிபரல்பாளையத்து குடிமக்களாகிய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

*


இரும்பு ஆண்மணி வந்துகொண்டிருப்பதாக ஒற்றர்கள் மூலம் கிடைத்த செய்தி கேட்டு மேலோகத்தின் கதவு அவசரமாக அடைக்கப்பட்டது. யார்விட்ட சாபமோ இப்படியாகிவிட்டதே என்று தன்னைத்தானே நொந்தபடி இப்போது திறப்பார்களா அப்போது திறப்பார்களா என்று நெடுநாட்களாக அங்கேயே நின்று கிடந்தார் இரும்பு ஆண்மணி. காத்திருப்பதன் கொடுமை தாளாது அவர் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தார். ஆனால் எக்காரணம் கொண்டும் அவரை உள்ளே விடுவதில்லை என்பதில் மேலோகத்தவர்கள் உறுதியாயிருந்தார்கள். இரும்பு ஆண்மணி இங்கு வந்தும் தங்களை கொல்லக்கூடும் என்கிற அச்சத்தில் அவர்கள் கதவடைத்தது சரிதான் என்றே நான் கருதுகிறேன். உங்கள் வீட்டுக்கு கதவிருக்கிறதா?

ஞாயிறு, ஜனவரி 1

ஏன் தோழர்களே இப்படி அடிபட்டுச் சாகிறீர்...? - ஆதவன் தீட்சண்யா


மக்களை வாட்டிவதைக்கும் மோடுமுட்டியின் செல்லாக்காசு திட்டம் தோல்வியடைந்துவிட்டதை அம்பலப்படுத்தி  31.12.2016 அன்று ஏ.டி.எம். முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய DYFI, CPIM தோழர்கள் பள்ளிக்கரணை போலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள இவ்வேளையில் 2010 ஜூலையில் எழுதப்பட்ட இக்கட்டுரை சட்டென நினைவுக்கு வந்தது.
நடுரோட்டில் தள்ளி அடித்து உதைத்து மண்டையைப் பிளந்து குண்டுக்கட்டாகத் தூக்கி போலிஸ்காரர்கள் வேனுக்குள் வீசுகிறார்கள். அப்போதும்கூட கோஷம் என்ன வேண்டிக் கிடக்கிறது இந்த மார்க்சிஸ்ட்டுகளுக்கு? தூக்கிக்கிட்டுப் போனாலே அய்யோ அம்மா கொல்றாங்களே அய்யய்யோ கொல்றாங்களே என்று கூப்பாடு போட பழகியிருக்க வேணாமா இந்நேரத்தில்? அல்லது அப்படி தூக்கிவீசுவதை லைவ்வாக படம்பிடித்து திரும்பத்திரும்ப ஒளிபரப்பி அனுதாபத்தை கிளறிவிட்டு வாக்குகளாக மாற்றி ஆட்சியைப் பிடிக்கத் தோதாக ஏழெட்டு தொலைக்காட்சி குடும்பங்கள் அல்லது குடும்பத் தொலைக்காட்சிகளையாவது இந்த மார்க்சிஸ்ட்டுகள் கைவசம் வைத்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. இப்படி எந்த முன்னேற்பாடுமே இல்லாத இவர்களை யார் போராடச் சொன்னது? ஊடகங்களை சரிக்கட்டி ஆதரவாக வைத்துக்கொள்ளத் தெரியாத இவர்கள் போராடுவதையெல்லாம் எப்படி ஒரு நியூஸ் என்று வெளியிட முடியும்? வெறும் நியூசென்சாக பாவித்து ஒதுக்கித்தள்ளத்தான் முடியும். (அதனால்தான் 12.07.2010 அன்று உத்தபுரம் தலித்துகள் மீதான கொடுமைகளை எதிர்த்துப் போராடிய மார்க்சிஸ்டுகள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் பற்றிய செய்தியை பல நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் வெளியிடவே இல்லை. வெளியிட்ட தினமணியோ பொதுமக்களுக்கு அவதி என்று புலம்பியிருக்கிறது. நாலைந்து சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அவர்களோடு அணிதிரண்டு வந்திருக்கிற ஆயிரக்கணக்கான மக்களையெல்லாம் பொதுமக்கள் என்று ஒப்புக்கொள்ள தினமணிக்கு கிறுக்கா பிடித்திருக்கிறது? அவர்கள் போராட்டக்காரர்கள். போராட்டக்காரர்களை பொதுமக்கள் என்று சொல்வது பத்திரிகை தர்மத்துக்கே இழுக்கென்று இந்த மார்க்சிஸ்ட்டுகள் எப்போதுதான் விளங்கிக் கொள்ள போகிறார்களோ? தெரியாவிட்டால் தினமணியிடமாவது கேட்டால், மிஸ்டர் அண்ட் மிஸஸ் பொதுஜனம் பொதுவில் புணர்ந்து பொதுவிலேயே பெற்றெடுத்து பொதுவிலேயே வளர்ந்தும் வாழ்ந்தும் வருகிற அந்த பொதுஜனத்தின் புகைப்படத்தை வெளியிட்டுத் தொலைக்கும்).

அ தொடங்கி ஃ வரைக்கும் எத்தனையோ கட்சிகள் இருக்கு இந்தநாட்டில். அவையெல்லாம் இப்படி போராடிக்கொண்டா இருக்கின்றன? அவ்வப்போது அறிக்கைகள் விடுவது, ஆளுயர கட்அவுட்கள் வழியாக மக்களுக்கு காட்சி தருவது, பிரம்மாண்டமான விழா, மாநாடு, பேரணி என்று எதையாவது நடத்தவது என்று இருந்தாலே இங்கு போதுமானது. அல்லது தலைவருக்கு பிறந்தநாள் விழா எடுத்து தலைவர் பிறந்ததையே சாதனையாக முன்னிறுத்தியதையெல்லாம் இந்த மக்கள் ஏற்காமலா போய்விட்டார்கள்? அதையெல்லாம் விட்டுவிட்டு கட்சி என்றால் போராடத்தான் வேண்டும் என்று ஏன் இந்த மார்க்சிஸ்டுகள் மட்டும் தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? அவசியமேயில்லை. சுதந்திரத்துக்கப்புறம் காங்கிரஸ் கட்சி எதற்காவது போராடியிருக்கா? இல்லையே, திண்டுமீது ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு காரியக்கமிட்டி கூட்டம் நடத்தியே அந்தக் கட்சியெல்லாம் இத்தனைக்காலம் நீடிக்கவில்லையா? அதுகளைப் பார்த்து ஏன் அடக்கஒடுக்கமா கட்சி நடத்தத் தெரியவில்லை இந்த மார்க்சிஸ்டுகளுக்கு?

அதுவுமில்லாமல், போராடத் தேர்ந்தெடுத்த நேரமும் சரியில்லை. செம்மொழி மாநாட்டின் வெற்றியை எப்படியாவது கொண்டாடியே தீர்வது என்று முதல்வரும் அவரது குடும்பமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழைக் காப்பாற்றுவார்களா கேவலம் தமிழர்களைக் காப்பாற்றுவார்களா? போதாக்குறைக்கு ஜெயலலிதா வேறு சும்மாயிருக்காமல், வரும் தேர்தலில் வெற்றிபெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றப் போவதாக அறிக்கைவிட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவிட்டார். நாம் ஆட்சி நடத்துகிற லட்சணத்தால் அப்படியொரு நிலை உருவாகிவிடுமோ என்ற பயத்தில் அந்தக் கட்டிடத்தை இடித்து நிரவி கழுதைபூட்டிய ஏரால் உழுது எள் விதைப்பதா அல்லது வேறு எதுவும் செய்யலாமா என்று யோசித்து கடைசியில் அதை செம்மொழி மையத்திற்கான அலுவலகமாய் மாற்றுவதென்று தீர்மானித்த கருணாநிதி அதற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த வளாகத்திற்குள் புத்தகங்களை எங்கே வைப்பது பூச்செடியை எங்கே வைப்பது என்ற கொள்கை முடிவுகளையெல்லாம் ஒரு முதல்வர் என்ற முறையில் அவர்தானே எடுத்தாக வேண்டியுள்ளது? அப்புறம் மைனாரிட்டி திமுக அரசு என்று ஜெயலலிதாவால் நொடிக்கொரு தடவை இடித்துரைக்கப்படும் அவமானத்திலிருந்து மீள்வதற்காக எப்படியாவது மெஜாரிட்டியாக்கிக் காட்டுகிறேன் பார் என்று எல்லாக்கட்சியிலிருந்தும் பிள்ளை பிடிக்கிற வேலையையும், அதற்காக அவரைப் பாராட்டி நடத்தப்பட வேண்டிய விழாவுக்கான எற்பாடுகளையும் அவரே பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படி அதிமுக்கிய வேலைகளில் இருக்கிற ஒரு முதல்வர் இந்த மார்க்சிஸ்ட்டுகளின் போராட்டத்தையோ தலித்துகளின் கோரிக்கைகளையோ உடனே எப்படி கவனிக்க முடியும்?

சரி ஆளுங்கட்சிதான் அப்படியென்றால் எதிர்க்கட்சி மட்டும் சும்மாவா இருக்கிறது? என்னதான் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தினாலும் கொங்குமண்டலம் இன்னமும் எங்கள் கோட்டைதான் என்று காட்டுகிற தேவை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. ஆகவே அது பிபிரரம்ம்மமாண்ண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி முடிப்பதில் முனைப்பாயிருந்தது. நேற்று நடந்த அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா உத்தபுரம் பிரச்னை பற்றியோ மார்க்சிஸ்டுகள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் பற்றியோ ஒரு சொல்லும் உதிர்க்கவில்லை. இப்படியான பிரச்னையிலெல்லாம் வாய் திறந்து ஆதிக்கசாதிகளின் மனஸ்தாபத்தை சம்பாதித்துக் கொள்ளவா அவர் பங்களாவில் ரூம் போட்டு யோசித்து கட்சி நடத்துகிறார்? காட்டில் ஆயிரம் மிருகங்கள் இருந்தாலும் எலிக்குப் பூனையும் பூனைக்கு எலியும்தான் எதிரிகள் என்று எல்லோருக்கும் தெரிந்த பழமொழிதான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் பொருந்துகிறது. இரண்டில் எது எலி எது பூனை என்பதில் மட்டும் அவ்வப்போது காட்சிப்பிழைகள் தெரியுமெயன்றி உண்மையில் இரண்டுமே ஒன்றுதான்.

போகட்டும், போராடித்தான் தீர்வோம் என்றால் எதற்காகப் போராடுவது என்பதில் ஒரு தெளிவு வேண்டாமா இந்த மார்க்சிஸ்டுகளுக்கு? போயும் போயும் சாதிப்பிரச்னைக்குள் தலையைக் கொடுக்கலாமா? அப்படித்தான் தலையைக் கொடுத்தார்களே, அதிலாவது கொஞ்சம் சாமர்த்தியத்தோடு ஆதிக்கசாதிக்காரர்கள் பக்கம் நிற்கவேண்டும் என்று தோன்றியதா இவர்களுக்கு? அங்கே போய் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம் என்று ஏன் அடம் பிடிக்க வேண்டும்? பிரச்னை வரும்போது “மண்ணா இருந்தா நிலம், ஒன்னா இருந்தா நலம்”னு எதையாவது உளறித் தள்ளிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல் இந்த தலித்துகளை தலையில் தூக்கிவைத்து ஆடினால் மற்ற சாதிக்காரர்களின் மனம் எவ்வளவு கொந்தளிக்கும்? கடைசியில் இப்ப என்ன ஆச்சு? போலிஸ்காரன் உதைக்கிறான், அவனோடு போட்டோ எடுக்க வந்தவனும் உதைக்கிறான். காங்கியனூரில் உதைக்கிறான், செட்டிப்புலத்தில் உதைக்கிறான், மதுரையில் உதைக்கிறான், நாளைக்கு மன்னார்குடியிலோ மணப்பாறையிலோ கூட உதைவாங்க வேண்டிவரும்.

மற்ற கட்சிக்காரனெல்லாம் சட்டை மடிப்பு கலையாமல் மக்களுக்கு அருந்தொண்டாற்றிக் கொண்டிருக்கும் போது இந்தக் கம்யூனிஸ்டுகள் மட்டும் ஏன் ஊரூருக்கு உதை வாங்கிச் சாகவேண்டும்? அதுவும் யாரெல்லாம் உதைபடுகிறார்கள் என்று பாருங்களேன்? தொண்டர்கள் அடிஉதை வாங்கலாம். அதற்காகத்தான் அவர்கள் பெரும்பாலான கட்சிகளில் பயன்படுத்தப்படுவது மரபு. இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளில் என்னடாவென்றால் தலைவர்களும் உதைபட வேண்டியிருக்கிறது. சரி அதைக்கூட ஒத்துக்கொள்ளலாம். மற்ற கட்சிகளின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் எல்லாம் தொகுதிக்குள்ளேயே வராமலிருக்கும்போது இந்த கட்சிகளின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மட்டும் என்ன வெங்காயத்துக்கு தெருவுக்குத்தெரு வரவேண்டும்? நத்தையைப் தூக்கி மெத்தையில் போட்டாலும் அது செத்தைக்குள் நெண்டுவதற்குத்தானே ஓடும் என்று மற்ற கட்சிக்காரர்கள் இவர்களை இளக்காரம் பேசுவதைக் கேட்டாவது திருந்தக்கூடாதா? கத்த புத்தி செத்தாத்தான் போகும் என்று சொல்வது இவர்களுக்குத்தான் பொருந்தும்போல.

மக்களுக்கு எப்பவும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அதையெல்லாம் தீர்க்கப் போராடுகிறேன் என்று ஒரு மக்கள் பிரதிநிதி கிளம்பிவிடணுமா என்ன? காண்ட்ராக்ட் எடுத்தோமா கமிஷன் வாங்கினோமா என்று இருப்பதுதான் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகு. அல்லது கல்லூரி தொடங்கி பிற்காலத்தில் கல்வித்தந்தையாக முயற்சிக்கலாம். பினாமி பெயர்களில் சொத்து சேர்க்கலாம். கம்பனி தொடங்கலாம். ஊரிலுள்ள புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப்போடலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு லாட்டரியில் லட்சரூபாய் பரிசு கிடைத்தால் தங்கத்தில் திருவோடு செய்துகொள்வேன் என்று சொன்னாராமே யாரோ ஒரு பிச்சைக்காரர், அதைப்போல இந்தக் கம்யூனிஸ்டுகள் எங்களை எம்.பி, எம்.எல்.ஏ ஆக்கினாலும் தெருவில் கிடந்துதான் போராடுவோம் என்று சொன்னால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? காங்கியனூரில் லதா வயிற்றில் மிதி வாங்கியதைப் பார்த்தே நன்மாறனும் மகேந்திரனும் ரங்கராஜனும் சுதாரித்து மதுரையில் ஜகா வாங்கியிருக்க வேண்டாமா? இந்த மாதிரி அக்கப்போரெல்லாம் எதுக்கு என்றுதான் எஸ்சாயிட்டேன் என்று சந்தடிசாக்கில் கோவிந்தசாமி சொன்னாலும் சொல்வார். பார்த்துக்குங்க.

ஏதோவொரு சமூகக்கடமையை ஆற்றிவிட்டோம் என்று சுயதிருப்தி கொள்வதற்கும், பிரபலமாவதற்கும், பரபரப்பாக இயங்குவதாக காட்டிக்கொள்வதற்கும் இங்கு எவ்வளவோ எளிய வழிமுறைகள் இருப்பதை இத்தனை வருடங்களாக கட்சி நடத்தும் இவர்கள் இன்னமும் அறிந்திருக்கவேயில்லை. ஆளில்லாத களத்தில் அட்டைக் கத்தி வீசி வீராதி வீரன் வெண்ணெய்வெட்டி சூரன் என்று பட்டம் கட்டிக்கொள்ள துப்பில்லாத தலைவர்களை வைத்துக்கொண்டிருக்கிற இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருகாலத்திலும் விளங்கப்போவதேயில்லை.

கம்யூனிஸ்டா இருந்தால் போராடணும் என்பதும்கூட அவர்களது பழமைவாதத்தையே காட்டுகிறது. தானும் ஒரு கம்யூனிஸ்ட்தான் என்று சொல்லிக் கொள்கிற கருணாநிதி போராடிக்கொண்டா இருக்கிறார்? போலி கம்யூனிஸ்ட்கள் என்று சிலரை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதன் மூலமாகவே தங்களை உண்மையான கெட்டிச்சிவப்பு கம்யூனிஸ்டுகள் என்று நம்பிக்கொண்டிக்கிறவர்கள் கழுத்தில் சயனைடு குப்பியைக் கட்டிக்கொண்டா போராடுகிறார்கள்? பென்சில் சீவக்கூட இதுவரை பிளேடு எடுக்காதவர்களெல்லாம் இப்போது தாங்களும் மாவோஸ்ட்தான் என்று அலட்டிக்கொள்கிற புதுமோஸ்தரையும் கூட நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இது எதுவுமே இல்லாமல் இணையதளம் ஒன்றைத் தொடங்கி சகட்டுமேனிக்கு எல்லாரையும் விமர்சனம் செய்துவிட்டு தம்மை முழுப்புரட்சியாளர்களாக கருதிக் கொண்டிருக்கிற என்னைப் போன்றவர்கள் எத்தனை பேரில்லை? இவர்களில் யாரைப்போலாவது இருந்துவிட்டுப் போகாமல் எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் மறியல் உண்ணாவிரம் ஊர்வலம் என்று போரட்டம் நடத்தி புண்ணாக்கிக் கொள்கிறீர்கள் உடம்பை என்று இந்த மார்க்சிஸ்ட்டுகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்குமாறு எல்லாம் வல்ல மார்க்சையும் இன்னபிற நமது குலசாமிகளையும் வேண்டிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தான் இப்படியென்றால் தலித்துகளின் தலைவர்களும் சும்மா இல்லை. சாதியை ஒழிக்க விரும்புகிற ஒருவர் தனது சொந்த சாதிக்கு துரோகம் செய்தாகணும் என்று ஆதிக்கசாதிக்காரர்களிடம் வெகுகாலமாக சொல்லிப் பார்த்தார்கள். இவங்க அறிவுரையை யாருமே கேட்கவில்லை. அந்த ஆதங்கத்தில் சரி, நம்ம வார்த்தையை நாமாச்சும் மதிப்போம்னு அவங்க அந்த வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். திருமாவளவன் இலங்கைத் தூதரகத்தை மூடச் சொல்லி குரல் கொடுப்பாரா அல்லது உத்தபுரம் பிரச்னையை தீர்க்காமல் சிக்கலாக்கிக் கொண்டிருக்கும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை மூடச்சொல்லி குரல் கொடுப்பாரா? அவர் என்ன தசாவதானியா அல்லது சதாவதானியா ஒரே நேரத்தில் ஒன்பது பிரச்னைக்கு குரல் கொடுக்க? ஈழப்பிரச்னையில் அவர் டிராமாவளவனாகிவிட்டார் என்ற புலிக்குட்டிகளின் குற்றச்சாட்டியதிலிருந்து மீள்வதற்கு அவர் இப்படி என்னமும் செய்யத்தானே வேண்டியிருக்கிறது? தவிரவும் உத்தபுரம் தலித்துகள் தேவேந்திரர்கள். ஆதிதிராவிடருக்கான கட்சியை நடத்தக்கூடிய திருமாவளவன் தேவேந்திரர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அநியாயம்? நீங்கள் ஏன் தலித்துகளுக்காக குரல் கொடுக்கக்கூடாது என்று வன்னியர் சங்க ராமதாசிடமோ அல்லது சேதுராமனிடமோ கேட்பது எந்தளவிற்கு அபத்தமோ அதுபோன்றதுதான் இதுவும். அப்படியானால் கிருஷ்ணசாமியாவது தனது சொந்த ரத்தங்களுக்காக குரல் கொடுக்கலாமே என்ற கேள்வி வரலாம். தலித் விடுதலை என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த திருமாவளவன் எதற்கு உள்ளூரில் வம்பு என்று தமிழ் தமிழன் என்று பொத்தம்பொதுவாகப் பேசிக்கொண்டு சாமர்த்தியமாக கட்சி நடத்தும்போது நான் மட்டும் இளிச்சவாயனா இதிலெல்லாம் தலையிட என்பதுதான் அவரது இப்போதைய நிலைப்பாடு. ஆனால் அதற்காக அவர் உத்தபுரம் பிரச்னையில் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல முடியாது. அங்கிருக்கிற தீண்டாமைச்சுவர் இயல்பான ஒன்றுதான் என்றும் அங்குள்ள ஆதிக்கசாதியினரை கண்ணியமானவர்கள் என்றும் அங்குள்ள எல்லாச் சாதியினரும் இணங்கி வாழ்வதாகவும் நற்சான்றுப் பத்திரம் வழங்கிய அவரிடம் மீண்டும் எதை எதிர்பார்க்கிறீர்கள்? உத்தபுரம் தலித்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை எதிர்த்து சீமான் நெடுமாறன் திருமா போன்றவர்ளை பேசவைக்க எளிதான ஒரு வழியும் இருக்கிறது. அதாவது முதலில் உத்தபுரத்தை பெயர்த்துக் கொண்டு போய் இலங்கையின் வடபகுதியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு, அங்குள்ள ஆதிக்கசாதியினரை சிங்களவர்கள் என்றும் தலித்துகளை தமிழர்கள் என்றும் ( சும்மா ஒரு பேச்சுக்குதான், மற்றபடி தலித்துகளை எவன் தமிழன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறான்? ) சொல்லிவிட வேண்டும். அதற்குப்பிறகு பாருங்கள், கழுத்து நரம்பு புடைக்க இந்தத் தலைவர்கள் எப்படி பேசுவார்கள் என்று.

இந்தக் கட்டுரையை முடிக்கும் தருவாயில் உத்தபுரம் தலித்துகளின் பிரச்னை, மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் குறித்து கருணாநிதி வாய் திறந்திருக்கிறார். ஒரு பொய்யை இவ்வளவு விரிவாகச் சொல்ல முடியுமா என்ற வியக்கவைக்கும் வகையில் அவரது அறிக்கை பத்திரிகைகளில் நீண்டு நெளிகிறது. ஏன் இந்த ஆளின் மூக்கை கடித்தாய் என்று ஒருவரிடம் விசாரிக்கப்பட்டதாம். அந்த நபர் தன் மூக்கை தானே கடித்துக்கொண்டு என்மீது பழிபோடுகிறார் என்று பதில் சொன்னாராம் குற்றம்சாட்டப்பட்டவர். அதெப்படி ஒருவர் எப்படி தன் மூக்கை தானே கடித்துக்கொள்ள முடியும்? அவருக்கு அவர் மூக்கு எட்டாதே என்று அடுத்தக்கேள்வியில் மடக்கப்பார்த்தாராம் விசாரித்தவர். ஆமாம் ஐயா முதலில் அவருக்கு அவர் மூக்கு எட்டவில்லைதான், பிறகு ஸ்டூல் மீது ஏறிநின்று கடித்துக்கொண்டார் என்று பதிலுரைத்தாராம். இப்படித்தான் இருக்கிறது கருணாநிதியின் அறிக்கை. உத்தபுரத்தில் எந்தப் பிரச்னையுமேயில்லை, இந்த மார்க்சிஸ்டுகள் வீணாக தலித்துகளைத் தூண்டிவிட்டு மோதவிடுகிறார்கள். மதுரையில் அவர்களை போலிஸ் தாக்கவேயில்லை, தடியடியே நடத்தவில்லை என்றெல்லாம் வெகுசரளமாக பொய்யுரைத்திருக்கிறார். தடியடியும் நடக்கவில்லை தாக்குதலும் நடக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சியினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் தங்களைத்தாங்களே தாக்கிக் கொண்டார்களா? கருணாநிதி தீக்கதிரை நம்பவேண்டாம், குறைந்தபட்சம் சன்/ சன் இன் லா தொலைக்காட்சியில் வெளியானதையாவது நம்பக்கூடாதா? உத்தபுரத்தில் எல்லாச்சாதியினரும் ஒற்றுமையாக வாழ்வதாகவும், தீண்டாமைச்சுவரை தான் இடித்துத் தள்ளிவிட்டதாகவும், ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சி திமுக அரசுக்கு கெட்டப்பெயரை உருவாக்கவேண்டும் என்ற உள்நோக்கோடு திட்டமிட்டே செயலாற்றுகிறதென்றும், தலித்துகளை தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கிறதென்றும் குற்றம்சாட்டி இருக்கிறார். திமுக அரசின் பெயரைக் கெடுக்க வெளியிலிருந்து யாரும் வரணுமாக்கும்? நல்ல தமாஷ்தான்.

சுவற்றில் 15 அடி மட்டும்தான் இடிக்கப்பட்டது. எஞ்சிய சுவர் இன்னும் இறுமாப்போடும் சாதித்திமிரோடும் செஞ்செவிக்க நின்று கொண்டிருக்கிறது. 15 அடியை இடித்து உருவாக்கப்பட்ட பாதையையும்கூட தலித்துகள் பயன்படுத்த முடியாதபடி அங்கு பதற்றமான சூழலை ஆதிக்கசாதி வெறியர்கள் தொடர்ந்த உருவாக்கியுள்ளனர். தலித்துகள் பகுதியில் நிழற்குடை அமைக்கத் தேவையான தொகையை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கிய பின்னும் அதை நிறைவேற்ற மறுக்கிறது மாவட்ட நிர்வாகம். அரசமர வழிபாட்டுரிமையும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இப்படி எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படவில்லை. ஆனால் தலித்துகள் நிம்மதியாக இருக்கிறார்கள்... மற்ற சாதியினரெல்லாம் அவர்களோடு கொண்டான் கொடுத்தான் உறவோடு இருக்கிறார்கள்... என்ற ரீதியில் அவர் உண்மைகளைத் திரித்து விஷமத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பொறுத்திருங்கள் நண்பர்களே, உத்தபுரம் என்ற கிராமமும் மதுரை என்ற நகரமும் தமிழ்நாட்டுக்குள்ளேயே கிடையாது என்ற அறிக்கையை அவர் நாளை வெளியிடக்கூடும்.

(இடதுசாரிகளை - குறிப்பாக- மார்க்சிஸ்ட் கட்சியைத் தாறுமாறாக தாக்கவேண்டும் என்று இணையதளங்களில் வளர்த்தெடுக்கப்படும் மரபுக்கியைந்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது ) 


இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...