சனி, மார்ச் 18

ஒசூர் : தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலம் - ஆதவன் தீட்சண்யா

"ஒசூர் எனப்படுவது யாதெனின்" தொடர், scroll.in என்ற இணைய இதழில் வெளியான எனது நேர்காணல் (http://scroll.in/article/815373/interview-there-is-no-political-idea-this-is-what-happens-when-a-society-has-been-sedated) ஆகியவற்றால் உந்தப்பட்ட பத்திரிகையாள நண்பர் ஒருவர் தான் பணியாற்றும் நாளிதழுக்காக என்னிடம் எடுத்த நேர்காணல் இது. மிக நீண்ண்ண்ண்ண்ட பரிசீலனைக்குப் பிறகு இதை வெளியிடவியலாது என்கிற தகவல் அவருக்கு சொல்லப்பட்டதை  மிகுந்த சங்கடத்துடனும் வருத்தத்துடனும் பகிந்துகொண்டார்.  அதனாலென்ன, நீங்கள் வாசியுங்கள்...
1.     ஒசூர் எந்தக் காலகட்டத்தில் எந்தச் சூழலில் தொழில் நகரமாக மாறியது? ஒசூர் மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி கூறுங்கள்?

ஒசூர் என்பது குறிப்பிட்ட ஓர் ஊரின் பெயராக குறுகாமல் நிலவியல்தன்மை, தட்பவெப்பம், வாழ்நிலை மற்றும் பண்பாட்டு ஒருமையால் பிணைந்துள்ள ஒரு வட்டாரத்தின் பொதுப்பெயராக விரிந்துள்ளது. தற்போதைய ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய முன்று வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய இந்நிலப்பரப்பு கடல்மட்டத்திலிருந்து 3300 அடி முதல் 4500 அடி வரையான உயரத்தில் அமைந்த மலைப்பகுதி. மிதமான வெப்பமும் கடுங்குளிரும் கணிசமான மழைப்பொழிவும்  எங்கு பார்த்தாலும் ஏரிகள் நிறைந்த நீர்வளமும் கொண்ட பகுதி இது. பல்வேறு தமிழக மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்திருந்த போதிலும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியின் பெரும்பாலான மக்கள் தெலுங்கு அல்லது கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள். புதிய ஊர் என்பதை குறிக்கும் ஒச ஊரு என்கிற கன்னடச்சொற்களே ஒசூர் என மருவியது. 

திப்புவின் ஆளுகையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை கைப்பற்றிய பிரிட்டிஷார், தங்கள் நாட்டின் தட்பவெப்பமே நிலவும் இப்பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து எனச் செல்லப் பெயரிட்டு கொண்டாடினர். அப்போதைய சேலம் மாவட்டத்தின் தலைநகராக ஒசூர் மாற்றப்பட்டதற்கும் இதுவே காரணம். தங்களது உணவுத்தேவைக்கான புன்செய் தானியங்கள், மலர்வகைகள், மல்பரி ஆகியவற்றை பாரம்பரியமாக விளைவித்துவந்த இப்பகுதி மக்கள் காலப்போக்கில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் பீட்ருட் பீன்ஸ் காலிஃபிளவர் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிச் சாகுபடிக்கு மாறினர். 1824 ஆம் ஆண்டு ஒசூர் மத்திகிரியில் தொடங்கப்பட்ட குதிரைப்பண்ணை பிறகு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பண்ணைகளில் ஒன்றாக மாறி உள்ளூர் மக்களில் பலருக்கும்  வேலை வாய்ப்பளித்து வந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்தொட்டு இப்பகுதியில் பணியாற்றுவதற்கென்று  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் தங்களது பணிக்காலத்தின் முதற்கட்டத்தை இங்கேதான் தொடங்கவேண்டியிருந்தது. தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்து தட்பவெப்பம், மொழி, பண்பாட்டுச்சூழல், வாழ்க்கைத்தரம் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட இப்பகுதியில் பணியாற்றுவதை கடும் தண்டனையாகவே இவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இங்கிருந்து மாற்றலாகிப் போனால் போதும் என்கிற கவலையால் பீடித்திருந்த இவர்களில் பலரும் உள்ளூர் சமூகத்தோடு ஒன்றாமலே இருந்திருக்கிறார்கள்.

***

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கென 1971ல் உருவாக்கப்பட்ட சிப்காட் நிறுவனம், ராணிப்பேட்டைக்கு அடுத்தபடியாக தனது இரண்டாவது தொழிற்பேட்டையை ஒசூரில் 1974 ஆம் ஆண்டு 1236 ஏக்கரில்  தொடங்கியது. (பிறகு 1980ல் 457 ஏக்கர், 1997ல் 179 ஏக்கர், 2004ல் 239 ஏக்கர் என விரிவடைந்தது.) மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சியோட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கை இதுவென சொல்லிக் கொள்ளப்பட்டாலும் பெங்களூருக்கு அருகாமை என்பதே ஒசூர் தேர்வானதற்கு முக்கிய காரணம். உள்கட்டமைப்பு வேலைகள் நிறைவடைந்து அடுத்துவந்த சில ஆண்டுகளில் ஒசூர் நகரத்திலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை ஆகிய ஊர்களுக்கான சாலைகளின் இருமருங்கிலும் ‘குண்டூசி முதல் குட்டி விமானம் வரை’ செய்வதற்கான நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உருவாகின. ஆயினும் இவற்றில் ஒன்றுகூட உள்ளூர் மக்களின் உழைப்பையும் ஆற்றலையும் உள்வாங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தன்மையையோ நோக்கத்தையோ கொண்டிருக்கவில்லை. மாவட்டத்தின் அப்போதைய சராசரி எழுத்தறிவே 29 சதவீதம் என்றிருந்த நிலையில் அதன் கட்டக்கடைசியான ஒசூர் பகுதியிலிருந்து இந்த நவீனத் தொழிற்சாலைகளுக்கு தேவைப்பட்ட கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதியோடு தயார்நிலையில் யாரிருப்பார்கள்? தங்களது மண்ணை விழுங்கி உருப்பெற்றுள்ள இத்தொழிற்பேட்டை தங்களுக்கானவை அல்ல என்கிற கடும்பாடத்தை உள்ளூர் மக்கள் எடுத்தயெடுப்பிலேயே விளங்கிக்கொண்டார்கள். தோட்டக்காரர், துப்புரவுப் பணியாளர் அல்லது காவலர் போன்ற கடைநிலை ஊழியங்கள்தான் அவர்களில் சிலருக்கு கிடைத்தன.  

2.  ஓசூர் தொழில்மயமானபோது, அங்கு தொழிலாளர்களாக புலம்பெயர்ந்தவர்கள் நிலை எப்படி இருந்தது? பிறகு அங்கே மாறிய சமூக, சாதிய சூழ்நிலைகள் பற்றி சொல்லுங்கள்?

எவ்வளவுதான் அதிநவீன இயந்திரமாயினும் மனிதக்கரங்கள் தான் அவற்றை தொட்டு உயிர்ப்பிக்கின்றன என்கிற பார்வை இங்கு மங்கலாகக்கூட அரசாங்கத்திற்கு கிடையாது. அதனால்தான், தொழிற்சாலைகளை அமைத்துக்கொள்ளத் தேவையான மூலதனம், இடம், தண்ணீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து, வரிவிலக்கு, சட்டப்பாதுகாப்பு என அனைத்தையும் முதலாளிகளுக்கு வழங்கிவிட்டு, அவற்றில் பணியாற்ற வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படைத்தேவைகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது.  நாடு முழுவதுமிருந்து இங்கு வந்து குமிந்த தொழிலாளர்கள் தங்குமிடம் கழிப்பறை தண்ணீர் உணவு என்று ஒவ்வொன்றுக்கும் அலைய வேண்டியிருந்தது. முதலாவதாக, இங்கு நிலவிய தட்பவெப்பம் அவர்களில் பலருக்கும் புதிது. ஜூனில் தொடங்கி நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி கடைசிவரை பனி. அதிகாலையில் பகல் வேலைக்கு (டே ஷிஃப்ட்) கிளம்பினாலும் இரவுப்பணிக்குப் போய் திரும்புவதாயிருந்தாலும் வருடத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் குளிரால் நடுங்க வேண்டியிருந்தது. 1984ல் நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி (ஹீட்டர்) பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். வீட்டிலும் வெளியிலும் குளிர்கால ஆடைகளோடு நடமாட வேண்டியிருந்தது. ஏப்ரல் மே மாதங்களில் கூட மின்விசிறியின் தேவை உணரப்படாத காலமது. வெயிலடிக்கும், ஆனால் உறைக்காது, வியர்வையே வராது. எளிதில் களைப்படைய - ஆனால் ஒருவிதமான மந்தத்தன்மையை உருவாக்குவதாக இருந்தது இந்தத் தட்பவெப்பம். 

அடுத்தது, இவர்கள் அவ்வளவு பேரையும் தங்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான எண்ணிக்கையில் இப்பகுதியில் வீடுகள் இல்லை. ஒசூர் பகுதி மக்கள் தமக்கென கட்டி வாழ்ந்துவந்த பூர்வீக வீடுகளில் ஒரு பகுதியை ஒதுக்கி தொழிலாளர்களுக்கு வாடகைக்கு கொடுத்தார்கள். தேவையின் தீவிரத்தை ஒருவாறு யூகித்துக்கொண்ட சிலர் வாடகைக்கு விடுவதற்கென்றே அவசரடியாக வீடு போன்றவற்றை கட்டினார்கள். தொழிலாளர்களில் பலரும் படித்து முடித்தக் கையோடு வேலைக்கு கிளம்பி வந்தவர்கள். அவர்களுக்கு தனியாக அறையோ வீடோ தேவைப்படவில்லை அல்லது கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க அவ்வாறு எடுத்து தங்குமளவுக்கு அப்போது அவர்களது வருமானமில்லை. எனவே அவர்கள் சின்னஞ்சிறு அறையைக் கூட நாலைந்து பேராக பகிர்ந்துகொண்டார்கள். வீடு என்றால் பத்து பதினைந்து பேர் வரை கூட நிறைந்திருப்பார்கள்.

சாதி மதம் வட்டாரம் என்பதெல்லாம் அவரவர்களுக்குள் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவை அவர்கள் பிறரோடு கலந்து ஓரிடத்தில் வாழ்வதற்கு தடையாக இருக்கவில்லை. முன்பின் தெரியாத ஊரில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்துகொள்ளும் பக்குவத்திற்கு அவர்கள் அனிச்சையாக வந்த சேர்ந்தார்கள். பணி நேரத்தில் சில ஆலைகள் உணவு வழங்கினாலும் ஒருவேளையாவது வெளியில் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம், ஆனால் போதுமான உணவகங்கள் கிடையாது. நிரந்தரமாக கடையில் சாப்பிடுவதற்கு அவர்களது வருமானமும் ஒத்துழைக்கவில்லை. எனவே கூட்டாக சமைத்து உண்டார்கள். சாப்பாட்டில் அவர்கள் எதையும் விலக்கிவைத்ததில்லை. சம்பளம் வாங்கும் வாரத்தில் ஆட்டுக்கறியில் தொடங்கி கோழி மீன் பன்றி என்றாகி மாதக்கடைசியில் மாட்டிறைச்சி வாங்கி சமைத்துண்பது என்பதாக இருந்தது அவர்களது தெரிவு.

வாழிடம் பணியிடம் சார்ந்து தொழிலாளிகளிடம் முகிழ்த்துவந்த உணர்வு வர்க்க உணர்வாக மாறவேண்டிய கட்டாயத்தை தொழிற்சாலை நிர்வாகங்கள் உருவாக்கிவந்தன. புதிதாக தொடங்கப்பட்டவை என்று முதல் பத்தாண்டுகளுக்கு வரிமான வரி கட்டுவதிலிருந்தும், பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை கடைபிடிப்பதிலிருந்தும் தொழிற்சாலைகள்  விலக்கு பெற்றிருந்தன. இதனால் வேலை நேரம், ஊதிய மாற்றம், போனஸ், மருத்துவச் சிகிச்சை, விபத்துக் காப்பீடு, பணி நிரந்தரம், விடுமுறை, வாராந்திர ஓய்வு போன்றவற்றை நிர்வாகங்கள் மறுத்துவந்தன. சலுகைக்காலம் முடிந்தப்பின்னும் கூட நிர்வாகங்கள் இந்த நிலையை நீட்டித்து வந்தன. சங்கம் வைப்பதற்கும்கூட அனுமதிக்காத போக்கு. குறைந்தக்கூலியில் அதிக உழைப்பைப் பெற்றுவிட வேண்டும் என்கிற லாபவெறிக்கும், செலுத்திய உழைப்புக்கு நியாமானதொரு ஊதியத்தைப் பெற்றுவிட வேண்டும் என்கிற இயல்பெண்ணத்திற்கும் இடையேயான மோதல் பல்வேறு தொழிற்சாலைகளில் அமைதியின்மையை உருவாக்கியது. மக்கள்தொகைப் பெருக்கம், கடும் வாடகை, விலைவாசி, உழைப்புச்சுரண்டல், குறைந்தக் கூலி  என்பதான பல்முனைத் தாக்குதலை எதிர்த்துப் போராடும்படியான நெருக்கடிக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

அரசு ஊழியர்களைப் போல மாற்றல் வாங்கிக்கொண்டு வேறெங்கும் போய்விடுவதற்கான வாய்ப்பேதும் தொழிலாளர்களுக்கு இல்லை. இங்குதான் இனி வாழ்க்கை என்றான பிறகு இடர்ப்பாடுகளையும் குறைபாடுகளையும் பெரிதுபடுத்தி புகாரிட்டுக்கொண்டிருப்பதை விட, இப்பகுதியை வாழத் தகுந்ததாக மாற்றிக்கொள்வது அவசியமாயிருந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் தொழிலாளர்கள் நடத்தியப் போராட்டங்கள் அவர்களது சொந்தவாழ்க்கையில் மட்டுமல்லாது ஒசூர் பகுதியிலும் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கின.

18-20 வயதில் வேலைக்குச் சேர்ந்து கூட்டாக ஓரிடத்தைப் பகிர்ந்துகொண்ட தொழிலாளர்கள் அடுத்துவந்த சில ஆண்டுகளில் திருமணத்தை நோக்கி நகர்ந்த போது தனித்தனி வீடுகள் தேவைப்பட்டன. அவர்களுக்கு வாடகைக்கு விடவும் விற்கவும் புதிதுபுதிதாக குடியிருப்புப் பகுதிகள் உருவாகின. பூர்வீகத்திலிருந்த சொத்து எதையேனும் விற்றோ அல்லது கடன்பட்டோ இங்கு சொந்த வீடுகளைக் கட்டினார்கள். தொடக்க ஆண்டுகளில் அரிதாக ஒன்றிரண்டு நிறுவனங்களில் மட்டுமே சில பெண்கள் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்பட்டார்கள். திருமணமாகி இங்கு வந்தப் பெண்களில் ஒருபகுதியினர் குடும்பச்செலவுக்கு ஒத்தாசை என்கிற அளவில் தத்தமது கல்விக்கேற்ப சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அதுவரை ஆண்களின் தொழிற்பேட்டை என்றிருந்த ஒசூரின் முகம் இருபாலருக்குமானதாக மாறத்தொடங்கியது. தொழிலாளர்கள் தமது வருமானத்தை சுண்டுவிசையாக வைத்து மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், திரையரங்குகள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வாகன விற்பனை நிலையங்கள் போன்றவற்றை இங்கு வரவைத்தார்கள். அதுவரை இப்பகுதிக்கு பெரிதும் அறிமுகமாகியிருக்காத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொழுதுபோக்குகள், கலைவடிவங்கள், தெய்வங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், உணவுவகைகள் ஆகியவற்றை கொண்டுவந்து சேர்த்தவர்களும் தொழிலாளர்கள்தான். 


தனிப்பையன்களாக இருந்தவரையிலும் யாவரோடும் கலந்துண்டு வாழ்ந்த தொழிலாளர்களை திருமணம் மீண்டும் அவரவரது சொந்த சாதிக்குள் கொண்டு போய் திணித்தது. ஒண்ணும் மண்ணுமாய் உருண்டுபுரண்ட நட்பும் தோழமையும் முடிவுக்கு வந்தன. பொது இடங்களில் அல்லது பணித்தளத்தில் மட்டுமே  சந்தித்துக்கொள்கிறவர்களாக நண்பர்கள் மாறினர். எத்தனை பேர் வந்தாலும் ஏற்று இடமளிக்கும் விசாலத்தை சின்னஞ்சிறு அறைகள் கொண்டிருக்க, பென்னம்பெரிய தனித்த வீடுகளோ சொந்த சாதி மட்டுமே புழங்கும் இடமாக சுருங்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் தான் வெவ்வேறு தொழிற்சாலைகளில் சிதறுண்டிருக்கும் தத்தமது சாதியினரை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கும் சாதிய அமைப்புகள் உருவாகின. ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகிவந்த தொழிலாளி என்கிற நவீன அடையாளத்தை சாதியம் என்கிற நச்சுணர்வு காத்திருந்து காவு கொண்டது. இதே காலக்கட்டத்தில் நாடு தழுவிய அளவில் அஞ்சத்தக்கவிதமாக வளர்ந்தவந்த மதவாதத்தில் கரைவதற்கு அது தொழிலாளர்களை தகவமைத்தது.

3. 90களில் உலகமயமாதலின் தாக்கம் ஒசூரை எப்படி பாதித்தது?

தொழில் நகரம் என்கிற அடையாளத்தை உலகமயமும் புதிய தொழிற்கொள்கையும் போக்கடித்தன.

* பெங்களூருக்கு அருகாமை, இதமான பருவநிலை, ஏறுமுகமான நிலமதிப்பு ஆகியவற்றுக்காக இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கறுப்புப்பணத்தால் வாங்கி கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் சொந்தமண் மீதிருந்த பாத்யதையை முற்றுமுழுதாக இழக்கத் தொடங்கினர்.

* கட்டற்றச் சந்தை உலகளாவிய வாய்ப்புகளை நல்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனவலு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைக்கு ஒசூர் நிறுவனங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. விற்பனைத்தேக்கம், உற்பத்திக்குறைப்பு, ஆட்குறைப்பு, கதவடைப்பு, ஆலைமூடல் என நெருக்கடி மூண்டது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இயந்திரங்களைக் கொண்ட தொழிற்சாலைகளை திறந்துப் போட்டுவிட்டு தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. புதிய தொழிற்பேட்டைக்குரிய சலுகைக்காலம் முடிவடைந்தபடியால் இதேபோன்ற சலுகை கிடைக்கின்ற வேறு இடத்துக்கு சில நிறுவனங்கள் ஓடிப்போயின. கடனையும் லாபத்தையும் வேறு துறைகளுக்கு திருப்பிவிட்டு நஷ்டக்கணக்கு காட்டிவந்த நிறுவனங்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன.     

* பல உற்பத்திப்பிரிவுகளை மூடிவிட்டு ‘அவுட் சோர்சிங்’ முறைக்கு சென்றதால் அந்தந்த ஆலைமட்டத்தில் ஆட்குறைப்பு நடந்தது.

* வீட்டு உபயோகப் பொருட்களும் அதிக ஓடுதிறன் கொண்ட வாகனங்களும் இறக்குமதியாகப் போவதாய் கிளம்பிய வதந்திக்கே உள்ளூர் வியாபாரமும் தொழிலும் சுருண்டு விழுந்தன. ‘இந்தியர்களின் உடல்வாகு, மனோநிலை, சாலைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுதேசி பைக்குகளையே வாங்குங்கள்’ என்று அநாமதேய துண்டறிக்கை மூலம் கெஞ்சும் நிலைக்கு தொழிற்சாலைகள் கீழிறங்கின. 

 4. சிறுதொழில் நிறுவனங்களின் நிலை என்னவாகியது?

* உதிரி பாகங்களை உள்ளூர் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்தே அதுகாறும் கொள்முதல் செய்துவந்த பெருநிறுவனங்கள் ‘திறந்தச்சந்தையில் தரமிக்கப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதாய்’ அறிவித்தன. இதனால் உற்பத்திச்செலவை விடவும் குறைந்த விலைக்கு கொடுத்தாவது பெருநிறுவனங்களின் ஆர்டரைப் பெறவேண்டியிருந்தது. அதற்குரிய தொகை இழுத்தடித்தே கொடுக்கப்பட்டதால் கடனும் வட்டியும் சிறு-குறு தொழில் முனைவோரை நெறித்து தொழிலை நடத்தவிடாமல் விரட்டின. கடன்தொல்லையால் நடந்த தற்கொலைகளும் காணாமல் போதலும் உலகமயத்திற்கென கொடுக்கப்பட்ட பலிகள்தான்.

5. தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் பற்றி சொல்லுங்கள்?

* குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற பெரும் செலவினங்களை எதிர்கொள்ளும் வயதில் தொழிலாளிகள் வேலையிழந்தனர். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பினர்.  சிலர் இடம்பெயர்ந்து எங்கோ சென்று மறைந்தார்கள். முன்பு சீருடை அணிந்து மிடுக்காக தொழிற்சாலைக்கு சென்றுவந்த பலர் தள்ளுவண்டி வியாபாரம், நடைபாதைக் கடை, சைக்கிளில் தேநீர் விற்பது, நிலத்தரகு என முன்பின் அறிந்திராத தொழில்களில் உதிரிகளாகி அலைந்தார்கள். ஆட்குறைப்பின் மூலம் வெளித்தள்ளப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் அதே நிறுவனத்தில் குறைந்தக்கூலிக்கு தற்காலிகங்களாகினர். தற்காலிகங்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளர்களின்  உரிமைகள் மறுக்கப்பட்டன.

* கடைவீதிகள் வெறிச்சோடிப் போயின. ‘வாடகைக்கு’ ‘விற்பனைக்கு’ என்கிற அட்டைகள் தொங்கும் வீடுகள் பெருகின. சொத்துகள் கைமாறின. வெளியேறுகிறவர்களுக்கான ஒருவழிப்பாதையானது ஒசூர். 

6. தொழிற்சங்கங்கள் சிறப்பாக செயல்பட்ட பொற்காலச்சூழல் ஒசூரில் இருந்துள்ளது. அதில் எப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன?

உலகமயத் தாக்குதலால் தொழிற்சங்கங்கள் பேதலித்துப் போயின. ஆட்குறைப்பை தடுக்கவியலாமல் எண்ணிக்கை குறித்த பேரங்களில் அவை ஈடுபட்டன. வேலையில் நீடிப்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலையிழந்து தற்காலிகமாக வந்தவர்கள் எனத் தொழிலாளர்கள் சிதைக்கப்படுவதை தொழிற்சங்கங்களால் தடுக்க முடியவில்லை. சுமங்கலித் திட்டம் போன்றவற்றால் நிரந்தரமாக தற்காலிகமாக்கப்பட்டோரை திரட்டும் வழியறியாது அவர்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்கும் நிலைக்குச் சென்றன.

தொழிலாளர்களின் ஊதியம், வருங்கால வைப்புநிதியைக் கூட தராமல் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நிர்வாகங்கள் ஓடிப்போயின. இயந்திரங்களை எடுத்துப் போகவாவது நிர்வாகத்தினர் வருவார்கள், பிடித்துக்கொள்ளலாம் என்று மூடப்பட்ட ஒரு பஞ்சாலையின் வாயிலில் கொட்டைகைப் போட்டு காத்திருந்த தொழிலாளர்கள் ஒருகட்டத்தில் பொழுதைப்போக்க சீட்டாடத் தொடங்கினார்கள். மாதக்கணக்காகியும் யாருமே வராத நிலையில் அவர்கள் சீட்டாடுவதற்காகவே அங்கு  கூடுகிறவர்களாக மாறினர். மரபான போராட்டங்களில் நம்பிக்கையிழந்த சிலர் செல்போன் கோபுரங்களில் ஏறி தீக்குளிக்கவும், சாலை மறியல் செய்யவும் தலைப்பட்டனர்.
 
7. இதிலிருந்து ஒசூர் மீளவேயில்லையா?

பேரழிவின் முதல் அலை ஓய்வதற்குள் உலகப் பொருளாதார நெருக்கடியும் மின்வெட்டும் அடுத்தடுத்த அலைகளாகி வீழ்த்தின. நெருக்கடியால் பாதிக்கப்படாத நிறுவனங்கள்கூட வாரத்தில் நான்குநாள் ஓய்வு என்கிற தந்திரத்தைக் கையாண்டன. மனஉளைச்சலிலும் அச்சத்திலும் தொழிலாளர்கள் தூக்கமிழந்து அகாலங்களில் உலாத்தத் தொடங்கினர். தொழிற்சங்க நிர்வாகிகள் முறைவைத்து ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு அவர்களை வீடுகளுக்கு கொண்டு சேர்த்தனர்.  

பசியாற ஏதுமற்ற நிலையில் தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலமாக ஒசூர் பகுதி மறுபடியும் தன்னிடம் மிச்சமிருந்த நிலப்பரப்பை விற்றுக்கொள்ளத் தொடங்கியது. இம்முறை பெரும் கட்டுமான நிறுவனங்கள் வந்திறங்கின. பெங்களூரின் மென்பொருள் பணியாளர்கள் ஒசூரில் பெருமளவு குடியேறி தூங்கியெழுந்துப் போகத் தொடங்கினர்.

8. இன்றைய தொழிற்பேட்டை எப்படியுள்ளது?

மூடிக்கிடப்பவற்றையும் சேர்த்து 2015 டிசம்பர் வரை 811 தொழிற்சாலைகள் பதிவு செய்துகொண்டுள்ளன. 5000 தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கணக்குக் காட்டும் ஒரு வாகனத் தொழிற்சாலையில் 647 பேர் மட்டுமே நிரந்தரம். பிறவற்றிலும் இதே நிலைதான். எனில் ஒசூர்பகுதி தொழிலாளர்கள் எனக் காட்டப்படும் 90195 பேரில் 85 சதமானவர்கள் தற்காலிகங்களே. பதிவுபெற்ற 900 ஒப்பந்ததாரர்களால் ‘சப்ளை’ செய்யப்படும் இவர்களில் பெரும்பாலோர் முறையான படிப்போ பயிற்சியோ அற்ற வடமாநில இளைஞர்கள். சட்டத்திற்குட்பட்ட கொத்தடிமைகளாக இறக்கிவிடப்பட்டுள்ள இவர்கள்தான் இன்றைக்கு  ஒசூரின் இயங்குச்சக்தி. நடைபாதை வியாபாரத்தில் இந்தியும் ஒரு பரிவர்த்தனை மொழியாக மாறியிருப்பதன் மூலம் இவர்களுக்கான ஒசூர் ஒன்று இங்கு உருவாகிவிட்டதை உணர முடிகிறது.

9. ஒசூரின் வளர்ச்சி?

‘இங்கு ஜூனிலிருந்து நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனி. வருடத்தின் பெரும்பகுதி குளிர்காலம்தான். எங்கள் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். கோடை வெயில்கூட உறைக்காது வியர்க்காது’ என்பதெல்லாம் பழங்கதை. மழைமோடத்தின் குளிரில் நடுங்கவேண்டிய இந்த ஐப்பசியில் அதிகபட்ச வேகத்தில் சுழலும் மின்விசிறியின் கீழே அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதே இப்போதைய ஒசூர். 

ஊரை குளுமையில் ஆழ்த்திய ஏரிகளைத் தூர்த்தது யார்? ஆயிரம் அடிக்கு கீழேயும் நிலத்தடி நீர் ஏன் கிடைப்பதில்லை? தொல்லியல் சான்றுகள் நிறைந்த மலைகள் வரலாற்றுப் பிரக்ஞையற்று யாருக்காக பாளம்பாளமாக வெட்டப்படுகின்றன? குடும்ப உறவுகளுக்கிடையே வன்முறையும்  கொலையும் அதிகரித்துவருவதில் நிலத்தின் பங்குண்டா? நிலக்கொள்ளையர்கள் ஊரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் பொருந்தியவர்களாக மாறுவது எங்ஙனம்? அடுத்த பத்தாண்டுகளில் ஒசூர் எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கிற அமைப்புகளோ ஆளுமைகளோ இல்லாமல் போனது ஏன்? ஒசூர் பகுதியை தமது வாழிடமாக தேர்ந்துள்ள வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ள மக்களை ஒரு சமூகமாக ஒன்றிணைக்கும் சாத்தியமுண்டா? கற்பிதங்களின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சாதிய மதவாத அமைப்புகளின் செல்வாக்கை தடுத்திடத்  தேவையான அணுகுமுறை என்ன?  என்கிற கேள்விகளை எழுப்பிக்கொள்ளவும் சக்தியற்று ஒசூர் திணறிக்கொண்டிருக்கிறது. உழைப்புச்சக்தியை விற்று கண்ணியமாக வாழ்வதற்கான வழிகள் அடைபட்டுவரும் ஒரு சமூகம் சந்திக்க வேண்டிய வீழ்ச்சியைத்தான் ஒசூரும் இப்போது சந்தித்துவருகிறது என்பது சமாதானமல்ல, உண்மை.


24.10.16



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...