திங்கள், மே 30

தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? - ஆதவன் தீட்சண்யா


(‘மண்ணில் இந்தக் காதலன்றி’ என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது போன்றோ, வேலையில்லாத பட்டதாரியில் வில்லப்பொடியனிடம் தனுஷ் பேசுவது போன்றோ மூச்சுவிடாமல் கீழ்காணும் பத்தியை வாசிக்கவும்)
சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தணும்னு தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை சொல்லி, தேர்தலை எந்தெந்தக் கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகுது- யார் யாரோடு கூட்டு சேர்ந்து யாரை எதிர்க்க / ஆதரிக்கப் போறாங்கன்னு குறிசொல்லி, எந்தக்கூட்டணி பலமா இருக்கு? பலமா தெரியற கூட்டணியோட பலவீனம் என்ன, பலவீனமா தெரியற கூட்டணியோட பலம் என்னன்னு விலாவாரியா விளங்கவைக்கிற டிவி விவாதங்களை அன்றாடம் அலசிப் பார்த்து, வாக்காளர்களை வென்றெடுக்க கையாள வேண்டிய பிரச்சார உத்திய நான் ஆதரிக்கிற கூட்டணிக்கு தெரிவித்து அதைப்பற்றி நல்லவிதமா நாலுவார்த்தையும் மற்ற கூட்டணி ஆளுங்க வைக்கிற விமர்சனம் அவதூறுகளுக்கெல்லாம் பொளேர்னு பதிலடியும் எழுதி, தளி ராமச்சந்திரன் தொடர்பான கேள்விக்கு மழுப்பலா பதில் சொல்லி, வைகோ பேசியதையும் விஜயகாந்த் பேசாததையும் கூட்டணிதர்மத்துக்காக(?) சகிச்சுக்கிட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும்வரை தொகுதிவாரியா கண்காணிச்சு எங்கே யார் ஜெயிக்கப்போறாங்கன்னு ஞாபகம் வச்சிக்கிட்டு, அஞ்சுப்பைசாவுக்கு பெறுமானமில்லேன்னாலும் அலட்டலா வெளியாகும் தேர்தல் அறிக்கைகளைப் படிக்காமலே படிச்சி விளங்கிக்கிட்ட பாவனையோட ஆதரிச்சும் எதிர்த்தும் அபிப்ராயம் தெரிவிச்சு, பொதுக்கூட்டத்துக்கு வர்ற சனங்களை ஓட்டாக நம்பி ஏமாறப்போகிறவர்களின் முகத்தின் விகாரத்தை அச்சமில்லாம கற்பனை செய்து, நடுநிலையாளர்னு சொல்லுறவங்க போட்ட நாடகத்தை நக்கலடிச்சு, பணப்பட்டுவாடாவை தடுக்காத தேர்தல் ஆணையத்திற்கு எதிரா கண்டனம் முழங்கி, தேர்தலுக்கு முந்தின கருத்துக் கணிப்புகளோட உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி, பணப்பரிவர்த்தனையைத் தடுக்கப்போவதாக கடைசி சிலநாட்களில் பறக்கும் படை நடத்திய ஜோடனைகளை ஸாரி சோதனைகளை குற்றம்சாட்டி, பிடிபட்ட கண்டய்னர்ல 570 கோடிதான் இருக்குமா - அதுக்கு எதுக்கு மூணு கண்டெய்னர்- மூணு கண்டெய்னருக்கும் மொத்தம் எத்தனை சக்கரம்- யாருக்காக யார் கொடுத்தனுப்பினதுன்னு அடுக்கடுக்கா ச்சும்மா அஸ்திரமாட்டம் கேள்வி எழுப்பி, அரவக்குறிச்சியும் தஞ்சாவூரும் மட்டுமல்ல தமிழ்நாட்டுத்தேர்தலையே தள்ளி வைக்குமளவுக்கு நடந்திருக்கும் முறைகேடுகளைப் பட்டியலிட்டு, கள்ள ஓட்டு விழாமல் தடுக்க வாக்குச்சாவடிக்குள் பலப்படுத்த வேண்டிய பாதுகாப்பு - கண்காணிப்புகளோட போதாமையைச் சுட்டிக்காட்டி, வாக்குப்பதிவு முடிந்தும் முடியாமலிருக்கறப்பவே வெளியாகப்போகும் ஏழெட்டு எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள்ல யார்யாருக்கு எவ்வளவு  இடங்கள் கிடைக்கும்னு கணிப்பது-ன்னு ராப்பகலா ஓய்வொழிச்சல் இல்லாமல் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து ‘ஓட்டுப்போடவாவது பூத்துக்கு வருவீங்களா இல்லே அதையும் ஃபேஸ்புக்கிலியே போட்டுருவீங்களா?’ன்னு கேட்டார். அடடா தேர்தல் வந்தே வந்திடுச்சா, பூத்தை மூடுறதுக்குள்ள ஓட்டுப் போடணுமேன்னு கம்ப்யூட்டரையும் மத்ததையும் மூடிப்புட்டு ஓடுறப்பதான், வூட்ல இருக்குற மீனாக்கிட்டயும் தீட்சண்யாக்கிட்டயும் கூட எங்கக் கூட்டணிக்கு ஓட்டுப்போடச் சொல்லி கேட்கவேயில்லைங்கிற விசயம்  ஞாபகம் வந்துச்சு. உட்கார்ந்த்தைவிட்டு டிகூராஎல்லாமே நாவிரும்றாப்ல டக்கும்னு மிதப்புல கிடந்தைப் பற்றி இனி யோசிச்சு என்ன பண்ண?

தேர்தல்ல எங்கக் கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்கல. கிடைக்காதுன்னு முன்னமே சொன்னப்ப அவநம்பிக்கைவாதின்னு தோழர்கள் சிலர்ட்ட திட்டு வாங்கினேன். நான் அவநம்பிக்கையில சொல்லல, கள நிலவரத்தைத்தான் சொன்னேன். விடுங்க, தோழர்கள் திட்டுறதெல்லாம் ஒரு திட்டா?  போட்டியிட்ட எல்லாருமே யோக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களாயிருந்தாலும் 232 பேரைத்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஜெயிச்சவங்களையெல்லாம் ஏதோ தியாகிகள்னோ தொண்டால் பொழுதளந்த தூயவர்கள்னோ மக்கள் தேர்ந்தெடுக்கல. தோத்துப் போனவங்களையெல்லாம் துரோகிகள், பொது வாழ்க்கைக்கே லாயக்கில்லாதவங்கன்னும் மக்கள் தீர்ப்பளிக்கல. தேர்தலுக்கு அப்பாலும் சேர்ந்து வேலை செய்ய எத்தனையோ களங்கள் இருக்கு. ஆனாலும் தேர்தலுக்காக ஒருத்தருக்கொருத்தர் எதிரிகளாட்டம் அடிச்சுப்புரண்டு அவதூறு பேசி அவமரியாதை பண்ணிக்கிட்ட நண்பர்கள் பலபேர் இன்னும் மூஞ்சத் திருப்பி முதுகுகாட்டி நின்னுக்கிட்டிருக்க, தேர்தல் முடிஞ்சக்கையோட செயலலிதாவும் சுடாலினும் அக்கா தம்பியாயிட்டாங்க. ( பாவம், ஸ்டாலினுக்கு வாய்த் கோரிளெல்லாம் சிறைசென்று மீண்செம்மல்ளாவே இருக்காங்க.) போகிறப்போக்கைப் பார்த்தா அண்ணா அறிவாலயத்துல அதிமுகவுக்கு ஒரு கிளை அலுவலகமும் போயஸ் தோட்டத்துல திமுகவுக்கு ஒரு கிளை அலுவலகமும் திறந்து ஏ டீமும் நாங்கதான், பீ ( அதாவது இங்கிலீஷ் பீ ) டீமும் நாங்கதான்னு சொல்லிருவாங்க போல.

சரி ஆனது ஆச்சு போனது போச்சுன்னு மனசைத் தேத்திக்கிட்டு உஸ்ஸோன்னு தலைசாய்ச்சு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்னா இந்தா உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுதுன்றாங்க. அதுக்கும் இதேமாதிரி மல்லுக்கட்டி மாரடிச்சா மக்கியாநாளே கூட்டுறவு சொசைட்டிக்கு தேர்தல் அறிவிப்பாங்க. கூட்டுறவே நாட்டுயர்வுன்னு நம்மக்கிட்ட சொல்லிட்டு ஆளுங்கட்சியே அம்புட்டயும் அமுக்கியெடுத்துக்கும்னு தெரிஞ்சாலும் நாம் சும்மா இருப்பமா? மெம்பராகவே விடாத சொசைட்டித் தேர்தலுக்கும் மெனக்கெடுவோம். அப்பறமென்ன அடுத்து அஞ்சாறு மாசத்துல நாடாளுமன்றத் தேர்தல். வூட்ல தெருவுல ஊர்ல ஒழிக்கமாட்டாம திமுதிமுன்னு வளர்ந்து நிக்கிற வகுப்புவாதத்தை தேர்தல்ல முறியடிக்கிற கடமை நம்மை ஊஊன்னு ஊளையிட்டு அழைக்கும். இப்படி ஒன்னு மாத்தி இன்னொன்னுன்னு தொடர்ந்து தேர்தல் வேலை பார்ப்பதையே அரசியல் வேலையா சுருக்கிக்கிட்டுப் போனால், வர்க்க அரசியலுக்கும் சாதியொழிப்பு அரசியலுக்குமான வேலையை எப்போதான் செய்யறதுன்னு எக்கச்சக்க கவலையாயிடுது. சரி தேர்தல்ல பங்கெடுக்குற கட்சியில இருக்கிறதால தான் நமக்கிந்த உளைச்சல், தேர்தல்பாதையை நிராகரிச்சு டைரக்டா ஆயுதப் புரட்சி மூலமா அதிகாரத்தைக் கைப்பற்ற போறதா சொல்றவங்க என்ன செய்யறாங்கன்னு எட்டிப் பார்த்தா அங்கே இதுக்கு மேல ஏறுமாறு. பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவது இருக்கட்டும் ஒரு பஞ்சாயத்து ஆபிஸையாவது இன்னையவரைக்கும் கைப்பத்தியிருக்காங்களான்னு பார்த்தா அதுவுமில்ல.

இனிமே கவுன்சிலர் தேர்தலுக்கே கன்டெய்னர்ல பணம் இறங்கும்கிற நிலைமையில, நம்மைத் தோற்கடிக்கிறதுக்காகவே ஆதிக்கச்சாதிக்காரர்கள் மொத்தப்பேரும் ஈயும்பீயுமா ஒண்ணு சேர்ந்திருக்கிற நிலையில இனிமேல் தேர்தல்ல நம்மால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு கம்யூனிஸ்ட் கட்சிகளோ அம்பேத்கரிய இயக்கங்களோ சோர்வடையறதுக்கு ஒண்ணுமில்லை. ‘திராவிட’ என்கிற சொல்லை பேர்ல வச்சிருக்கிற கட்சிகள்ல அந்த சொல்லோட வரலாறும் அரசியலும் தெரியாமலே இப்போது இருக்கிற பலபேருக்கும், தங்கள் சாதியோட வரலாறு தெரியாமலே ஆண்ட பரம்பரை பெருமிதம் பேசுகிற கட்சிகள்ல அங்கம் வகிக்கிறவங்களுக்கும் தேர்தல்தான் முதலும் முற்றுமான அரசியல் வேலை. ஆனா வர்க்க அரசியலையும் சாதியொழிப்பு அரசியலையும் உள்வாங்கி அதுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளிலோ அம்பேத்கரிய இயக்கங்களிலோ இருக்கிறவங்களுக்கு அன்னாடம் நடத்துற ஆயிரமாயிரம் போராட்டங்கள்ல தேர்தல் போராட்டமும் ஒண்ணுங்குற புரிதல் இருக்கும். அந்தப் புரிதல் இந்தக் கட்சிகள்ல இருக்கிற எல்லாருக்கும் இருக்கா? இல்லேன்னா அதுக்கு காரணம் என்னங்கிறதும் இதோடு சம்பந்தப்பட்ட கேள்விங்கதான்.  

நாம் தீண்டாமைச்சுவரை இடிக்க உத்தபுரத்துக்கு ஓடணும், தருமபுரிக்கு ஓடி நெருப்பை அணைக்கணும், ரயில் ரோட்டுல பொணமாக் கிடக்குற நம்ம வீட்டுப் பையன்களை ஒப்பாரியும் ஓலமுமா தூக்கிக்கிட்டுப் போய் புதைக்கணும், அவங்களை கொன்னவங்க சுமத்துற அபாண்டங்களுக்கு பதில் சொல்லணும், பெற்ற பிள்ளைகளை சாதி ஆணவத்துல கொல்லுறவங்களுக்கு எதிரா கோர்ட்டுல வழக்காடணும், புருசனைக் கொல்லக் கொடுத்துட்டு கலங்கி நிற்கிற கௌசல்யாக்களுக்கு ஆறுதல் சொல்லணும், தேர் எரியறப்ப கடவுளையும் காப்பத்தணும். அழுகை அங்கலாய்ப்போட அன்னாடம் எழவு வூட்லியே இருந்துட்டு தேர்தல் வந்ததும் கண்ணைத் தொடைச்சும் தொடைக்காமா ஓடிப்போய் போட்டியிட்டா என்ன கிடைக்குமோ அதுதான் கிடைச்சிருக்கு.

வெள்ளாமை அழிஞ்சாலும் விலைவாசி ஒசந்தாலும் நம்மை விட்டா போராட யார் இருக்காங்க. தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், பெண்கள், மதச்சிறுபான்மையினர்னு சமூகத்தோட எந்த அடுக்கு பாதிச்சாலும் அதுக்காகப் போராடி களத்திலிருந்தோ கைதாகி சிறையிலிருந்தோ வந்து தேர்தலில் போட்டியிடறோம். இப்படியெல்லாம் போராடுறதாலேயே சனங்க நமக்கு ஓட்டுப் போட்டுருவாங்கன்னு எதிர்பார்க்க முடியுமா? தங்களுக்காக போராடிக்கிட்டிருக்கிற இவங்களையும் ஜெயிக்க வச்சு சட்டமன்றத்துக்கு அனுப்பிட்டா நமக்காகப் போராட யாருமே இல்லாமப் போயிடுவாங்கன்ற தற்காப்பு உத்தியில் சனங்க நம்மைத் தோற்கடிச்சிட்டதாகவும் அப்பாவித்தனமா நினைச்சிக்க வேண்டியதில்லை. தலித், இடதுசாரி கட்சிகளோட பிரதிநிதிகள் இல்லைங்கிறதுக்காக தமிழ்நாடு சட்டமன்றம் அப்படியே இடிஞ்சு விழுந்துடும்னோ பாராளுமன்ற ஜனநாயகமே பாழாகிப்பூடும்னோ நாம கவலைப்படத் தேவையில்லை. அப்படியே விழுந்தாலும் அதனால் மக்களுக்கு என்ன கெடுதல் நேர்ந்துவிடும்?

இயற்கைவளத்தைக் கொள்ளையடிக்கவும் பொதுச்சொத்துகளை வளைச்சுப் போடவும் மக்கள்விரோதத் திட்டங்களை செயலாக்கவும் கூட்டாளிகளா இருக்கிற கட்சிகளை சட்டமன்றத்துக்கு உள்ளே வச்சு  முடக்கியிருக்கிற மக்கள், அந்தக் கட்சிகளை கண்காணிக்கிற பொறுப்பையும் போராட்டக்களமா மாத்தவேண்டிய பரந்த பொதுவெளியவும் நமக்குதான் கொடுத்திருக்காங்கன்னுதான் நான் புரிஞ்சிக்கிறேன்.  கம்யூனிஸ்ட்டுங்க முதல் ஆறுமாசம் திட்டம் போடுவாங்க, திட்டமிட்டபடி ஏன் எதுவும் நடக்கலேன்னு மீதி ஆறுமாசம் பரிசீலனை செய்வாங்கன்னு சொல்லப்படும் பொய்க்குற்றச்சாட்டுக்கு பொருத்தமான பதிலை நம்மோட தொடர்செயல்பாடுகளே தரமுடியும்கிறது என்னோட நம்பிக்கை.     

30.05.2016


ஞாயிறு, மே 29

காலடி நிலமும் கைமாறும் காலம் - ஆதவன் தீட்சண்யா



முகப்போவியம்: அன்புத்தோழன் கார்த்தி
சந்தியா பதிப்பகம் வெளியிடவிருக்கும் 
"மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்" என்கிற 
எனது நான்காவது கவிதைத்தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை

ஒளிச்சுடரும் நட்சத்திரங்களையும் சூரியச்சந்திரர்களையும் தொலைத்துவிட்டு குண்டுபல்லுக்கு அலையும் இங்கே பகலும் இரவைப்போலவே இருளடைந்து கொண்டிருக்கிறது. வேளைதோறும் வீடுவீடாய் புகுந்திடும் கும்பலொன்று குடலையுருவிச் சோதிக்கிறது. அறுத்தெடுத்த நாவுகளைக் கோத்து மாலையாகச் சூடிக்கொள்கிறது. மனிதத்தலைகளை மட்டையாலடித்து விளையாடிக் கொண்டிருக்கும் அக்கும்பல் மாய்கிற உயிர்களை முதலாவது விக்கெட் இரண்டாவது விக்கெட் என்று கொண்டாடிக் களிக்கிறது. அது பெண்களை வல்லாங்கு செய்து விட்டு பிறப்புறுப்பில் கரும்புக்கட்டைகளை செருகிப் போகிறது. கபடங்களறியாது தூங்கும் குழந்தைகளை படுக்கையிலேயே தீயிட்டுப் பொசுக்குகிறது. காதலர்களை ஊர்நடுவே வெட்டி வீழ்த்துகிறது. இந்தக் கும்பலால் தண்டவாளத்தில் வீசப்படும் பிணங்களைக் கண்டு பயத்தில் நடுங்கும் ரயில்கள் தடதடத்து ஓடுகின்றன.  

அண்டைநாட்டினை நோக்கி குறிபார்த்திருக்கும் ராணுவத்தைக் காட்டி நம் கவனம் திசைதிருப்பப்படுகிறது. எதிரிகள் ஆகாயமார்க்கமாக வந்து நம் தலைமீது இறங்குகிறார்கள். கையில் ஆயுதம் ஏதும் இல்லாத அவர்கள் நம் உயிரணுவின் மூலகம் வரைக்கும் தமக்கேற்றபடி மாற்றியமைக்கிறார்கள். பின்பு அகலத் திறந்திருக்கும் நம் கண்முன்னே அவர்கள் எவ்வித பதற்றமுமின்றி சாவகாசமாக நம் உடைமைகளைக் களவெடுக்கிறார்கள். நிலம் நீர் காற்று ஆகாயம் அனைத்தையும் அவர்களுக்கு கைமாற்றித் தரும் முறியில் நாம் முழு சுவாதீனத்துடன் கைச்சாத்திடுகிறோம். ஓய்ந்த வேளைகளில் இந்த தேசத்தின் மீதான நமது பற்றினை இன்னும் சற்றுநேரத்தில் பக்தியாக உருமாற்றுவது எப்படியென உபதேசம் செய்கிறோம்.

நிழலுக்கும் திறை செலுத்தும் இவ்வாழ்வு குறித்த புகார்கள்  எதுவுமின்றி அன்றாடங்களைக் கழிக்கிற எனது நண்பர்களில் சிலர், நான் நினைத்துக் கொண்டிருப்பதுபோல இந்தச் சமூகம் அப்படியொன்றும் கொடுங்குற்றமானதல்ல என்று எனக்கு ஓயாமல் அறிவுரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வந்துகொண்டிருக்கும் செய்திகளோ உங்கள் கூற்றை பொய்ப்பிக்கின்றனவே என்று நான் கேட்டால், எந்தவொரு சமூகத்திலும் எல்லாக் காலத்திலும் நிகழக்கூடிய குற்றங்களே இங்கும் நிகழ்வதாக சமாதானப்படுத்தும் அவர்கள் அவையெல்லாம் ஏதோ அனுமதிக்கப்பட்டவை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவ்வளவு பெரிய சமூகத்தில் இந்தளவுக்குகூட குற்றங்கள் நடக்காதா என்று கேட்பதன்  மூலம் அவர்கள் எண்ணிக்கைரீதியிலான ஓர் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற ஆசையை சூசகமாக வெளிப்படுத்துகிறார்கள். கொடுங் குற்றங்களுக்கான மறுவிளக்கத்தை வரையறுக்கத் துணிந்திருக்கும் அவர்களிடம் எனது முறையீடெல்லாம் ஒன்றே ஒன்றுதான்- ஏன் குற்றங்கள் எப்போதும் எம்மீதே நிகழ்த்தப்படுகின்றன?

வியாபாரக்கருவியான தராசு நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்ததின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை, அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது. ஒருபால் கோடாமையற்று ஓரவஞ்சனைகளால் அழுகிக் கொண்டிருக்கும் அந்த மனதை அம்பலப்படுத்த இப்போதும் கவிதைகளே எனக்கு உயிர்த்துணை.

25.05.2016








சனி, மே 28

நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - ஆதவன் தீட்சண்யா


முகப்போவியம்: அன்புத்தோழன் கார்த்தி

சந்தியா பதிப்பகம் வெளியிடவிருக்கும் 
எனது நான்காவது சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை. 
 

துஷ்டக்கதைகள் 

காணும் யாவிலும் கதைகள் கொழித்திருந்தும், கண்ணுற்று எழுதுவதுதான் அரிதாகிப் போகிறது எனக்கு. இதை எழுதிவிட வேண்டும் அதை விட வேண்டும் என்று முதலில் பரபரப்பதும் பின் எழுதத்தக்கவையா இவையென யோசித்து கைவிடுவதுமாக வாசகர்களுக்கு என்னாலான நன்மை செய்கிறவனாயிருக்கிறேன். வாசகர்களின் கண்ணில் பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதித்தொலைக்கும் அவசியமும் இல்லைதானே? ஆகவே, ஆமை ஆமைகளோடும் முயல் முயல்களோடும்  போட்டியிட்டால் போதுமானது என்கிற மனப்படிவில் என் சுபாவத்திற்கு இசைந்ததென உணரும் கதையை மட்டும் எப்போதாவது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு அற்புதமான உலகத்தில் / தேசத்தில் / ஊரில்/ குடும்பத்தில் நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று மனிதர்களை குற்றவாளிகளாக்கி அவர்களை நல்வழிப்படுத்தும் ‘நீதிபோதனை’க் கதையொன்றை நான் எழுதாமலிருக்கக் காரணம் அவை அப்படியொன்றும் அற்புதமானவையல்ல என்பதுதான். அடக்கஒடுக்கமாக, அன்பு மழை பொழிந்து, காதலால் கசிந்துருகி கருணையால் நெக்குருகி, ஓடியாடி சம்பாதித்து குழந்தைக் குட்டிகளைக் காப்பாற்றுகிற குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் ஏற்கனவே தமிழ்க்கதைப் பரப்பெங்கும் மலிந்து உலவுவதால் அந்த புளித்தமாவு தோசையை சுடவேண்டாம் என்றும் ஒதுங்கி விடுகிறேன். நம்மையொத்த சாமானிய மனிதர்களை எதிரெதிர் பண்புநலன் கொண்ட கதாபாத்திரங்களாக்கி முட்டி மோதவிட்டு  மூக்கைச் சிந்தி நாக்கைத் துருத்தி நவரசங்களோடும் கூடிய கதையொன்றை இதுவரை நான் எழுதாமல் போனதற்கான காரணத்தை பின்னாளில் எப்போதேனும் நானோ நீங்களோ கண்டுணரக்கூடும். வாசகரின் ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் மனிதாயப் பண்புகளை கிளர்த்திவிடும் சிலிர்ப்புடன் கூடியதொரு கதையை என் வாழ்நாளில் எழுதவே முடியாதென்று ஆணித்தரமாக நம்புகிறேன். படிக்கத் தொடங்கியதும் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர்மல்கி விடுமானால் மீதிக்கதையை எப்படி படிப்பார்கள் என்று வாசகர்கள் மீதுள்ள அக்கறையினாலேயே நான் அவ்வாறான கதைகள் எழுதுவதை தவிர்த்துவிடுகிறேன்.

துக்கத்தில் தோய்த்து ஆளை அப்படியே உலுக்கிவிடுகிற, கொண்டாட்டத்தில் திளைக்க வைக்கிற அல்லது கோபத்தில் துடிக்க வைக்கிற கதைகளை வாசிப்பவர்களுக்கு என் கதையின் ஓரெழுத்து கூட உவப்பாய் இல்லாததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அமரத்துவம் வாய்ந்த மகத்தான வரிகளைத் தேடியலையும் அதிமேன்மை ரசனையாளராக, வாழ்வின் உன்னதங்களையும் நெகிழ்ச்சியான தருணங்களையும் கண்டு துய்ப்பவராக காட்டிக்கொள்ள விழையும் எவராலும் தீண்ட முடியாதவையாக என் கதைகள் இருக்கவேண்டுமென நெஞ்சார விரும்புகிறேன். ஒரு கதையிலிருந்து மறுகதைக்கு அதிலிருந்து அடுத்தக்கதைக்கு என வாசிப்பின் உற்சாகத்தை வடியவிடாமல் இழுத்துச் செல்லும் போக்கானது, தெளிவதற்கு முன்பாகவே அடுத்தடுத்தும் கோப்பையை நிரப்பிக்கொடுத்து ஒருவரை நிரந்தர போதைக்குள் ஆழ்த்தி காசு பறிக்கும் சாராய வியாபாரியின் மலிவான தந்திரத்தைவிட எள்ளளவும் மேன்மையானதல்ல.

புராணம்,  இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று  எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம் பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக்கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோ விட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வதித்துத் தொடர்கிறது. எனவே நான் துஷ்டக்கதைகளை எழுதுகிறேன்- ஆறடியோ ஆறுபதடியோ தூரந்தள்ளிப் போகுமாறு ஆசாரச்சீலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனக்கான வாழ்க்கையை எவரின் பொருட்டு எவ்வாறாக வாழ கட்டுப்படுத்தப்பட்டுள்ளேன் என்கிற கேள்வி ஆன்மீகம் தொடர்பானதல்ல, அரசியல்மயமானது. என் கதைகள் இந்தக் கேள்வியிலிருந்து பிறக்கின்றன அல்லது இந்தக் கேள்வியை பிறப்பிக்கின்றன.

- புத்தர் மனிதராக பிறந்த நாள் 21.05.2016
ஒசூர்

புதன், மே 18

மோடியடிப்பொடியரின் முகநூல் மோசடிகள்- ஆதவன் தீட்சண்யா


 இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் (UPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போன்றவை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவை. பணிநியமனத்தில் நிலவும் சாதிரீதியான சாய்மானத்தையும் பாரபட்சத்தையும் தடுப்பதற்கான முதற்படியாக மத்திய மாநில அரசுகள் தத்தமக்கான தேர்வாணையங்களை அமைக்கவேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையே பிற்காலத்தில் செயல்வடிவம் பெற்றது. அரசியல் சாசன அவையில் அங்கம் வகிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் என்கிற அமைப்பை சட்டப்பூர்வமாக உருவாக்கவும் பயன்படுத்திக்கொண்டார். வயதுவரம்பு, தேர்வு எழுதும் எண்ணிக்கை ஆகியவற்றை தளர்த்தி பட்டியல் சாதியினர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடும்கூட அவரது போராட்டத்தால் கிடைத்தவையே.

1950ல் இந்த இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் உருவாகிவிட்ட போதிலும் 2006ஆம் ஆண்டுதான் அதன் போட்டித்தேர்வில் ஒரு பிற்படுத்தப்பட்டவர் - ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முத்தியாலுராஜூ ரேவு மூன்றாவது தடவையாக தேர்வெழுதி - தேசிய அளவிலான முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது. அதற்கும் பத்தாண்டுகள் கழித்தே 2016ல் பட்டியல் சாதியைச் சார்ந்த ஒருவர் - டினா டபி - தேசிய அளவிலான முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். இந்த காலஇடைவெளி, சாதியடுக்கில் இவர்கள் வகிக்கும் இடத்தை சூசகமாக தெரிவிப்பது போலிருக்கிறது.

டினா டபியின் குடும்பப் பின்புலத்தை பரிசீலித்தால் அவர் மூன்றாம் தலைமுறை படிப்பாளியாக இருக்கக்கூடுமென யூகிக்கமுடிகிறது. எடுத்தயெடுப்பில் முதல் தடவை எழுதிய தேர்விலேயே அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெறுவதற்கு இந்த குடும்பப் பின்புலம் பெரிதும் அவருக்கு உதவியிருக்கிறது. எனவே அவர் தனது சாதிக்குரிய இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசியமின்றி பொதுப்பட்டியலுக்குள் சென்றுவிட்டார். தன்னளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறாமல் அடுத்தநிலையில் இருக்கிற பட்டியல் சாதிக்காரர் ஒருவர் இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள இதன்மூலம் வழிவிட்டிருக்கிறார். இடஒதுக்கீட்டினால் குறிப்பிட்ட குடும்பங்களே ஆதாயம் அடைகின்றன என்கிற குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யானது என்பதை முத்தியாலுராஜூ ரேவு போலவே டினாவும் தன்போக்கில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அந்த சாதிப் பிள்ளைங்கெல்லாம் ஒருவேளை பாஸ் பண்ணலாம், ஆனால் மெரீட்டிலோ டாப்பராகவோ வரமுடியாது என்கிற இளக்காரப் பேச்சுக்கிடையில் தான் ஒவ்வொரு தேர்விலும் பட்டியல் சாதியினர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பலரும் பொதுப்பட்டியலுக்குரிய மதிப்பெண்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர். ஆனாலும் அவர்களை அவரவர் சாதிப்பட்டியலுக்குள் தள்ளியடைத்துவிட்டு பொதுப்பட்டியலில் உள்ள 50 சதவீத இடங்களையும் ‘உயர்த்திக்கொண்ட சாதியினர்’ தமக்குத்தாமே ஒதுக்கிக்கொள்கிற நுண்மோசடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மீறிய ஒரு தீர்மானகரமான வெற்றியை ஈட்டியுள்ளார் என்பதால்தான் டினா கொண்டாடப்படுகிறார்.

டினாவின் இந்த வெற்றியை கவனம் குவித்து படித்த, கடினமாக உழைத்த ஒரு தனிமனித முயற்சிக்கு கிட்டிய பலன் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள முடியாது.  ஏனெனில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒட்டுமொத்த கூட்டுழைப்பே அதன் எந்தவொரு தனிமனித வெற்றிக்கும் வழியமைத்துக் கொடுக்கிறது. ( இந்தக் கூட்டுழைப்பின் பலனை அனுபவிக்கும் பலர், தமது சொந்த சமூகத்திற்கு எதையும் திருப்பியளிக்காதவர்களாக,  தமக்கு கிடைக்கவிருக்கிற அதிகாரத்தைக் தமது சொந்தநலனுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறவர்களாக சுருங்கி விடுவது பேரவலம்.)

பொது வெளியில் நடமாடுவதற்கும் கல்வி உரிமை உள்ளிட்ட சமூகநீதியை மீட்டுக் கொள்வதற்குமாக தலித்துகளும் பெண்களும் இடையறாது நடத்திவரும் நெடியப் போராட்டத்தினூடான வாய்ப்புகளால்தான் டினா போன்றவர்கள் ஆற்றலோடு வெளிப்படுகின்றார்கள். அறிவும் தகுதியும் நாடாளும் திறமும் குறிப்பிட்ட சாதிகளுக்கே/ ஆண்களுக்கே உரியது என்கிற பிறப்புவாத கற்பிதத்தை எதிர்த்து கருத்தியல்தளத்திலும் களங்களிலும் நீடிக்கும் போராட்டத்திற்கு நியாயம் சேர்த்து வலுப்படுத்துகிறது டினாவின் தேர்ச்சி.

சமத்துவத்திற்காகவும் மனித மாண்புகளுக்காகவும் களமாடிய அம்பேத்கர் என்கிற வெல்லற்கரிய போராளியின் தோள்மீது ஏறி நிற்பதாலேயே தன்னால் இன்று சமுகத்தின் கண்களுக்கு உயரமாகத் தெரியமுடிகிறது என்பதை டினா அறிந்தேயிருக்கிறார். அதனாலேயே அவரை ஒரு தலித்தாக அடையாளப்படுத்தி வெளியாகும் பாராட்டுதல்களை மறுப்பின்றி ஏற்பவராகயிருக்கிறார்.

யாரோ எவரோ போல காட்டப்படாமல் டினா ஒரு தலித் என்றும் சேர்ந்தே  பரவும் செய்தி, ‘உயர்த்திக்கொண்ட சாதி’யினரால் மட்டுமே டாப்பராக வர முடியும் என்று கட்டப்பட்டிருந்த பிம்பத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் எரிச்சலடைந்த மெரீட்மினுக்கிகளாகிய மோடியடிப்பொடியர்கள், அவரை ஏன் சாதிரீதியாக அடையாளப்படுத்தவேண்டும் என்று வினோதமாக கேட்கிறார்கள். தலித்துகளால் டாப்பராக வரமுடியாது என்று தாங்கள் சொல்லிவந்த வந்த பொய் அம்பலப்படுவதை தடுக்கவே இப்படி கேட்கிறார்கள்.  இவர்கள் இதற்காகவே முகநூலில் டினா டபி பெயரில் 35 போலிக் கணக்குகளைத் தொடங்கி மோசடியான பதிவுகளை எழுதிவருகிறார்கள்.

அப்படியான பதிவுகளில் ஒன்று - ‘என்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் உண்மையில் வருத்தப்படுகிறேன். நானறிவேன், எனக்கு ஆதர்சமளிக்கக்கூடியவர் யாரென்று- அவர் நமது பிரதமர் நரேந்திரமோடிதான். நான் ஒரு எஸ்.சி என்பதாலேயே அம்பேத்கர்தான் எனது ஆதர்சம் என்று ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட வேண்டுமா? ஏன் எங்கு பார்த்தாலும் இந்த ‘ஜெய்பீம்’ வாசகங்கள்? நான் அம்பேத்கரை பெரிதும் மதிப்பவள். அவர் பின்தங்கிய பகுதியினருக்காக நிறைய செய்திருக்கிறார். தலித்துகளை முன்னேற்ற அவர் பாடுபட்டிருக்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் இடஒதுக்கீட்டை ஆதரித்தவரில்லை. நமது அரசியல் சட்டத்தால் மிகக்குறைந்த காலத்திற்கே பரிந்துரைக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை வாக்குவங்கியைத் திரட்டும் கருவியாக அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள்...’’

இந்த மோசடியைக் கண்டு மனம் வெதும்பிய டினா டபி, தனது பெயரில் 35 போலிக்கணக்குகளைத் தொடங்கி சில சமூகவிரோத சக்திகள் பரப்பிவரும் இத்தகைய அருவருக்கத்தக்க கருத்துகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தனது உண்மையான முகநூல் பக்கத்தில் விளக்கமளித்திருப்தை அகிஇந்திமாவர் ங்கம் றுதிவு செய்துள்து (https://www.facebook.com/officialaisa/photos/a.654051061305057. 1073741826.537869562923208/1107732979270194/?type=3&theater)

மோடியால் ஆகர்ஷிக்கப்பட்ட ஒருவர் போட்டோஷாப்பிலும் பொய்ச்சான்றிதழ் தயாரிப்பதிலும் கூட வல்லவராக முடியாது என்பது தொடர்ந்த அம்பலமாகி வருகிறது. ஆகவே டினா அம்பேத்கரால் ஆகர்ஷிக்கப்பட்டாரோ இல்லையோ, நிச்சயமாக மோடியால் ஆகர்ஷிக்கப்பட்டவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற உறுதிபட சொல்லலாம்.

இந்த மோடியடிப்பொடியர்கள் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் தங்களது குரூர ஆசைக்கு அம்பேத்கரையும் டினாவையும் பயன்படுத்தப் பார்த்திருக்கிறார்கள். சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டுக்குதான் பத்தாண்டு காலக்கெடுவை அரசியல் சட்டம் விதித்ததேயன்றி, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எவ்வித காலக்கெடுவையும் அது விதிக்கவேயில்லை. இந்த உண்மையை மறுப்பதற்கான ஆதாரத்தை அரசியல் சட்டத்திற்குள் போலியாக உருவாக்கும் போட்டோஷாப் வேலையை அவர்கள் இந்நேரம் தொடங்கியிருக்கக்கூடும். 










இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...