வியாழன், அக்டோபர் 30

நரியூரிலிருந்து புலியூருக்கு... ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு - ஆதவன் தீட்சண்யா




எவரொருவரது குடியுரிமையினையும் தன்னிச்சையாக மாற்றிவிடவோ மறுத்துவிடவோ கூடாதுஎன்கிறது உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம். ஆனால், இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை அவர்களது கருத்தறியாமலே தீர்மானிக்கப் பட்டது. 1964ஆம் ஆண்டு இதே அக்டோபர் 30ஆம் நாளில்தான் அந்த அநீதிஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம்என்னும் பெயரால் இழைக்கப்பட்டது.

பிரிட்டனும் பிரான்சும் இந்தியாவை ஆண்ட காலத்தில் தமது காலனி நாடுகளுக்கு இந்தியர்களை ஒப்பந்தக்கூலிகளாக வாரிச்சென்றன. சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட அடிமை வணிகத்திற்கு மாற்றாக ஐரோப்பிய முதலாளிகள் உருவாக்கிய இந்த ஒப்பந்தக்கூலிமுறைக்கு பெரிதும் பலியானவர்கள் தமிழர்கள். 1796- 1815க்குள்ளாக முழு இலங்கையையும் பிரிட்டன் கைப்பற்றியது. அதன் முதல் கவர்னரான பிரடெரிக் நார்த் (1798), ஓர் அரசாங்கத்தை நிறுவிடும் தொடக்கநிலைப் பணிகளுக்காக தமிழர்களை அங்கு அழைத்துப்போனார். 1821ல் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போன பயோனியர் ஃபோர்ஸ் படையின் அநேகரும் தமிழர்கள். அங்கு மலைகளைச் சரித்தும் காடுகளை அழித்தும் தார்ச்சாலைகள் மற்றும் ரயில்பாதைகளை அமைத்ததும் பாலங்கள், பாசனத்திட்டங்களை உருவாக்கியதும் இவர்கள்தான்.

1824ல் அங்கு பிரிட்டிஷார் காபித்தோட்டங்களை அமைத்தனர். அது தொடர்பான வேலைகளுக்காக அந்தந்த பருவத்தில் தமிழகத் தொழிலாளர்களை அழைத்துப்போய் திருப்பியனுப்பினர். ஒருவகையான பெருங்கொள்ளை நோயினால் அங்கு காபி அழிந்ததும் பிரிட்டிஷார் தேயிலை, சின்கோனா, ரப்பர், தென்னை விளைவிப்புக்கு மாறினர். இவை தொடர் பராமரிப்பை கோருவதால் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்து உழைக்கும் விதமாக தொழிலாளர்கள் குடும்பங்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள்தான் இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்கள். இவர்களில் சிறுபகுதியினர் ஊரில் வாழும் சாதியரில் அடிநிலையினர், பெருவீதமானோர் ஊரிலிருந்து ஒதுங்கி வாழும் சேரியர். தமிழ்ச்சமூகம் இவர்களுக்கு வழங்கியிருந்த இந்த இடம்தான் இவர்களை புலம்பெயர்த்திக் கொண்டு போவதற்கு ஏதுவாய் அமைந்தது.

துண்டுச்சீட்டு மற்றும் கங்காணி முறையில் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் தனுஷ்கோடியிலிருந்து மன்னாருக்கும், தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கும் கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் அதுகாறும் மனிதக்காலடியே பட்டிராத மலைக்காடுகளுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தனர். புறப்பட்டவர்களில் பாதிப்பேராவது கடலிலும் காட்டிலும் நோயிலும் செத்தழிந்தார்கள். லயன்வீடு எனப்படும் சிறு கொட்டிலே வசிப்பிடம். சூரியன் உதிப்பதிலிருந்து அஸ்தமிக்கும் வரை வேலைநேரம். அவர்களது உற்பத்தியின் அளவைக் குறைத்தும் வாங்கும் தொகையைக் கூட்டியும் கள்ளக்கணக்கு எழுதப்பட்டதால் தீராது வளர்ந்தன கடனும் வட்டியும். முதலாளிகளுக்கும் கங்காணிகளுக்கும் சற்றும் குறையாமல் அட்டைகள் அவர்களது ரத்தம் குடித்தன. தப்பிப்போக முடியாதபடி முள்வேலி. தப்பியோடி சிக்கிக்கொண்டாலோ கொடிய தண்டனைகள். மனிதவுரிமை காக்கவே பிறப்பெடுத்தாற்போன்று பீற்றிக்கொள்கிற பிரிட்டிஷார் தொழிலாளர்களது மனவுறுதியைக் குலைப்பதற்காக நடத்திய சித்ரவதைகள் மனித மாண்புகளுக்குப் புறம்பானவை.

இந்தக் கொடுமைகளுக்கு தாக்குப்பிடிக்கும் போராட்டத்திலேயே நூறாண்டுகளாக மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியத் தமிழர்களில் இந்தியாவின் திசையைக்கூட அறிந்திராத புதிய தலைமுறையினர் உருவாகிவிட்டிருந்தனர். ஆனாலும் அவர்களை இலங்கைச்சமூகம் வெளியேதான் நிறுத்திவைத்திருந்தது. இலங்கையின் அரசுப் பணிகளில் ஓரளவு இந்தியர் வசமிருந்தது. இலங்கைச்சந்தையும் இந்திய வர்த்தகர்களின் ஆக்கிரமிப்பிலிருந்தது. தமிழகத்தின் வட்டிக்கடைக்காரர்களோ அதீதமான வட்டிக்கு கடன் கொடுத்து அதற்கீடாக சிங்களவர்களின் வருமானத்தையும் சொத்துக்களையும் அபகரித்துவந்தனர். சிங்களவர்களிடையே இந்திய எதிர்ப்பு மனோபாவம் உருத்திரள்வதற்கான காரணங்கள் இவையென்றாலும் அதற்கு வடிகாலாகச் சிக்கியவர்கள் அதிகாரமற்ற தோட்டத் தொழிலாளர்கள்.  முதலாம் உலகப்போருக்குப் பிந்தைய பொருளாதாரப் பெருமந்தத்தால் அங்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு இந்தியத் தொழிலாளர்களின் பெருக்கமே காரணம் என்கிற திசைதிருப்பலும் இதற்கு உதவியது.

கல்வி, சொத்து அடிப்படையிலிருந்த வாக்குரிமையை, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அங்கு வசிக்கும் வயதுவந்தோர் அனைவருக்குமானதாக டொனமூர் கமிஷன் பரிந்துரைத்தது. தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு வழிவகுத்தது என்கிற வகையில் இப்பரிந்துரை முன்பிருந்ததைவிட ஜனநாயகத்தன்மை கொண்டது. ஆனால்தோட்டக்காட்டான்களிடம் இலங்கையை சிக்கவைக்கும் இந்தப் பரிந்துரையைஇலங்கை மேட்டுக்குடியினர் ஏற்காததால் தகுதிபெற்ற மூன்றுலட்சம் இந்தியத் தொழிலாளர்களில் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். 1931 பொதுத்தேர்தலிலிருந்து பங்கெடுத்த இவர்களிடையே இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்தவும், பிரதிநிதிகளைக் குறைக்கவும்  இவர்களது வாக்குரிமையை பறிக்கும் முயற்சி முனைப்படைந்தது. 

4.2.1948 அன்று சுதந்திரமடைந்த இலங்கையில் எதிரும்புதிருமாக எண்ணற்ற கட்சிகள் இருந்தாலும் தோட்டத்தொழிலாளர்களை வெளியேற்றும் விசயத்தில் அவை ஒரே கட்சிதான். அங்கு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், இந்திய பாகிஸ்தானிய வசிப்போர் (குடியுரிமை) சட்டம், பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றோராகவும்  சட்டவிரோதக் குடியேறிகளாகவும் மாற்றிவிட்டன. இதன் தொடர்ச்சியில் உருவான நேரு - கொத்லாவல ஒப்பந்தப்படி (1954) குடியுரிமை கோரிய  விண்ணப்பங்களோ சாரமற்றக் காரணங்களின் பேரில் இலங்கையால் நிராகரிக்கப்பட்டன. இவர்களனைவரையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடும் கெடுநோக்கத்தை சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து செய்துவந்த நச்சரிப்பில் ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் உருவானது.

யாரையும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பியனுப்பக்கூடாது என்கிற நிலைப்பாடு கொண்டிருந்த நேரு 1964ல் காலமானதையடுத்து இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி  பொறுப்பேற்றார். சீனாவுடனான எல்லைப்போருக்குப் பிறகு, அண்டை நாடுகளை தனக்குச் சாதகமாக திரட்டிக் கொள்ளும் தேவையும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்த காலமது. எனவே வம்சாவளித்தமிழர்களின் குடியுரிமை மீது ஓர் இறுதி முடிவுக்கு இந்தியாவை நெட்டித்தள்ள உகந்த தருணம் எனக் கணித்து அக்டோபர் 22 அன்று டெல்லி வந்திறங்கினார் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ. இலங்கைத்தரப்பு உண்மையில் சிங்களத்தரப்பே. ஆனால் சாஸ்திரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங்கும் சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களையோ தமிழ்நாட்டின் தலைவர்களையோ கூட்டிப்போகவில்லை, கலந்தாலோசிக்கவுமில்லை. இந்தியக் குழுவில் சென்னையிலிருந்து முதல்வரது பிரதிநிதியாக பங்கெடுத்த ஒரே தமிழரான வி.ராமையா வாய் திறக்கவேயில்லை.

இலங்கையில் நாடற்றவர்களான 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், மூன்று லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. உயிரும் உணர்வும்மிக்க மனிதர்கள் வெறும் எண்களாக பங்கிடப்பட்டனர். (இந்த 1.5 லட்சம் பேரை இருநாடுகளும் சமமாக பங்கிட்டுக் கொள்ளும் ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தம் 1974ல் கையெழுத்தாகியது). 

1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அவர்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூக்கூறாக பிரித்து வீசியது.  அவர்கள் இலங்கையில் உழைத்து ஈட்டியவற்றை இழந்துவரச் செய்தது. 150 ஆண்டுகளாக தொடர்பற்றுப் போன தாயகத்திற்குத் திரும்பி அநாதைகளாக தவிக்கச் செய்தது. புதிய சூழலுக்குள் பொருந்தவியலாத உளவியல் சிக்கலுக்கும் ஆட்படுத்தியது.  மறுவாழ்வுக்கான உதவித்தொகையையும் சுயதொழிலுக்கான கடனையும் பெறுவதற்கு மல்லுக்கட்டி மனவுறுதி குலைந்த அவர்களை மீண்டும் தோட்டத்தொழில் தேடி நீலகிரி கொடைக்கானல் வால்பாறை கர்நாடகா கேரளா என்று அலைய வைத்தது. இலங்கையில் தமிழர்கள் என்கிற பாகுபாட்டுக்கு ஆளானவர்களை இங்கு சிலோன்காரர்கள் என்கிற பாகுபாட்டுக்கு ஆளாக்கியது.

ஒப்பந்தப்படியும், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டும் தாயகம் திரும்பிய அந்த தமிழர்களின் வாழ்க்கை அப்படியொன்றும் மெச்சத்தக்கதாக இல்லை. நரியூரிலிருந்து புலியூருக்கு வந்து சிக்கிக்கொண்டதாக அவர்கள் மருகிக்கிடக்கிறார்கள். நாடற்றோர் என்னும் அவலம் தீர்க்கப்பட்டிருந்தாலும் இருநாடுகளிலும் அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவது தொடர்கிறது. டாலரோ பவுண்ட்ஸோ இல்லாத- லேபர் டஸ்ட் என்கிற மட்டரகமான தூளில் தயாரித்த தேநீரை தருவதற்கு மட்டுமே சாத்தியப்பட்ட - பெரும்பாலும் தலித்துகளாகிய அந்தத் தமிழர்களுக்காக இங்கு குரலெழும்பாமல் இருப்பதில் அதிசயமென்ன?
நன்றி: தீக்கதிர் நாளிதழ், 30.10.2014


சனி, அக்டோபர் 11

காஸாவிற்கான மௌனம் - மஹ்மூத் தார்விஷ்

காலஞ்சென்ற பாலஸ்தீனக் கவிஞர்  மஹ்மூத் தார்விஷ்  அரபு மொழியில் எழுதிய ‘திரும்பி வந்தவனின் திகைப்பு' (The Returnee’s Perplexity) என்னும் ஆக்கத்திலுள்ள  வசன கவிதை போன்ற  இந்தப் பகுதி, ஸினான் அண்டூனால் (Sinan Antoon) ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆங்கில மொழியாக்கத்தின் வழி தமிழாக்கம்:  வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை


காஸா தனது பகைவர்களுக்கு அருகாமையிலும் உறவினர்களிடமிருந்து வெகுதொலைவிலும் உள்ளது. அதற்குக் காரணம், காஸா வெடிக்கும்போதெல்லாம் அது தீவாவதும் அது வெடிப்பது ஒருபோதும் நின்றுவிடாததும்தான். பகைவனின் முகத்தைப் பிறாண்டி, அவனது கனவுகளை கலைத்து, காலத்துடன் அவன் செய்துகொண்ட சமரசத்தைக் காலத்தால் நிறுத்தியது.

ஏனெனில் காஸா வேறானது.
ஏனெனில் காஸாவில் காலம் நடுநிலையான ஒன்று அல்ல.

மக்களை அமைதியாக சிந்திக்கக் கட்டாயப்படுத்துவதல்ல, மாறாக கொந்தளிப்பை, நிஜத்துடன் அவர்கள் முட்டி மோதுவதைக் கட்டாயப்படுத்துவதாகும்.

காஸாவின் காலம் குழந்தைகளைக் கைப்பிடித்து அழைத்து குழந்தைப்பருவத்திலிருந்து வயோதிகத்துக்குக் கூட்டிச்செல்லும் காலம் அல்ல. மாறாக, அவர்கள் பகைவனை முதன்முதலில் எதிர்கொள்ளும் போது அவர்களை வயது வந்தவர்களாக்கிவிடும் காலமாகும்.

காஸாவின் காலம் பொழுதுபோக்குவதற்கானதல்ல- எரியும் நடுப்பகல் மீது சீறியெழுவதற்கானதாகும். ஏனெனில் காஸாவின் மதிப்பீடுகள் வேறானவை, வேறானவை, வேறானவையே.

ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் எந்தளவுக்கு எதிர்ப்பைக் காட்டுகின்றனர் என்பதில்தான் அவர்களுக்கான ஒரே மதிப்பீடு அடங்கியுள்ளது. அங்குள்ள ஒரே போட்டி இதுதான். இந்தக் குரூரமான, ஆனால் மாண்பான மதிப்பீடு காஸாவுக்கு நன்கு தெரிந்த, அதற்குப் பழக்கமான ஒன்று. இதை அது புத்தககங்களிலிருந்தோ, அவசரம் அவசரமாகக் கூட்டப்பட்ட பள்ளிக்கூடக் கருத்தரங்குகளிலிருந்தோ, உரத்த பிரச்சாரத்துக்கான மைக்குகளிலிருந்தோ, பாடல்களிலிருந்தோ கற்றுக் கொள்ளவில்லை. இதை அது அனுபவத்திலிருந்து மட்டுமே, விளம்பரத்துக்கோ காட்சிப் பெருமைக்காகவோ செய்யப்படாத உழைப்பின் மூலமே கற்றுக்கொண்டது.

காஸாவுக்குத் தொண்டை இல்லை. அதன் சருமத்தின் துளைகள்தான் பேசுகின்றன- வியர்வை, இரத்தம் ஆகியவற்றின் மொழியில். இதனால்தான் பகைவன் அதை வெறுக்கிறான், சாகடிக்க வேண்டும் என்றிருக்கிறான், அதற்கெதிராக குற்றம் புரியும் அளவுக்கு அதைக் கண்டு அச்சப்படுகிறான், அதை கடலில், பாலைவனத்தில், இரத்தத்தில் மூழ்கடித்துவிட முயற்சி செய்கிறான். இதனால்தான் அதன் உறவினர்களும் நண்பர்களும் காஸாவைக் காதலிக்கின்றனர், செல்லமாக, அசூயையுடன், ஏன் சில நேரங்களில் பயத்துடனும் கூட. ஏனெனில் காஸாதான்  எல்லோருக்குமான பாடம், மூர்க்கத்தனமாகக் கற்பிக்கப்படும் பாடம், நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் ஒருங்கே ஒளிரும் ஆதர்சம்.
 
காஸா, நகரங்களில் மிக அழகான நகரமல்ல.
அதன் கடற்கரை, அராபிய நகரங்களின் கடற்கரைகளைக் காட்டிலும் கூடுதலான நீல நிறமுடையதல்ல.
மத்தியத்தரைக் கடற்கரைகளில் விளையும் ஆரஞ்சுப்பழங்களின் வரிசையில் இதன் பழங்கள் ஒன்றும் அத்தனை வடிவானவை அல்ல. 
காஸா, நகரங்களில் மிக வளமான நகரமல்ல.

அது, நகரங்களில் மிக நேர்த்தியானதோ, மிகப்பெரியதோ அல்ல; ஆனால் ஒரு தாய்நாடு முழுவதற்குமேயான வரலாறுக்குச் சமமானது. ஏனெனில் பகைவனின் கண்ணுக்கு அது மற்ற நகரங்களைக் காட்டிலும் விகாரமானது, ஏழ்மையானது, துயரமிக்கது, தீயது. ஏனெனில் நம் அனைவரைக் காட்டிலும் பகைவனின் மனநிலையை, அவனது கொகுசை பாதிக்கவல்லது அது மட்டுமே. ஏனெனில் அவனைப் பொறுத்தவரை அது அவனை துரத்தும் ஒரு கெட்டக் கனவு. ஏனெனில் அது... கண்ணிவெடி ஆரஞ்சுகள், குழந்தைப்பருவமற்ற குழந்தைகள், வயோதிகமற்ற வயதானவர்கள், வேட்கையற்ற பெண்கள். இதனால்தான் எல்லா நகரங்களைக் காட்டிலும் அது மிக அழகானது, தூய்மையானது, வளமானது, எல்லா நகரங்களைக் காட்டிலும் காதலிக்கத்தக்கது.


நாம் காஸாவின் கவிதைகளை தேடிச் செல்வோமேயானால் அதற்கு அநீதி செய்தவராகிறோம், எனவே நாம் காஸாவின் அழகைச் சிதைக்காமல் இருப்போம். கவிதைகளைக் கொண்டு நாம் பகைவனை வெற்றிகொள்ள முயற்சி செய்து, நம்மை நாமே நம்பி, பாடுவதற்கு நம்மைப் பகைவன் அனுமதித்தைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரத்தில் அது கவிதைகளற்றதாய் இருப்பதுதான் அதற்கு அழதைத் தருகிறது. பிறகு நமது உதடுகளிலிருந்து கவிதைகள் வடிந்து வறண்டபோது, நகரங்களை, கோட்டைகளை, தெருக்களைப் பகைவன் கட்டி முடித்திருந்ததைக் கண்டோம். காஸாவை ஒரு தொன்மமாக மாற்றினால், நாம் அதற்கு அநீதி செய்பவராவோம். ஏனெனில், அது பகைவனை எதிர்த்து நிற்கின்ற ஒரு சிறிய ஏழ்மையான நகரமே தவிர வேறல்ல என்பதைக் கண்டறியும்போது நாம் அதை வெறுப்போம்.

இதை ஒரு தொன்மமாக்கியது எது என்று நாம் வியந்து நிற்கையில் அதற்கு அநீதி செய்பவராகிறோம். நமக்கு மானம், மரியாதை இருக்குமேயானால், நமது நிலைக்கண்ணாடிகள் அனைத்தையும் உடைத்துப் போட்டு நமக்கு எதிராக நாமே கிளர்ந்தெழ மறுப்போமேயானால். நாம் அழவோ, அதை சபிக்கவோ செய்வோம். காஸாவை நாம் போற்றிப்புகழ்ந்தாலும் அது அநீதிதான். ஏனெனில் அதை மோகித்து அதில் மயங்கினால் நாம் காத்திருப்பின் எல்லைக்குச் சென்றுவிடுவோம். காஸாவோ நம்மை தேடி வராது. காஸா நம்மை விடுவிக்காது. காஸாவிடம் குதிரைகளோ, ஆகாய விமானங்களோ, மந்திரக் கோல்களோ, தலைநகர அலுவலகங்களோ இல்லை. காஸா, நாம் அதற்கு ஏற்றிச்சொல்லும் பண்புகளிலிருந்து தன்னைத்தானே விடுதலை செய்துகொள்ளும்; அதேவேளை நமது மொழியை அதனுடைய காஸாக்களிடமிருந்து விடுதலை செய்யும். நாம் அதை - ஒரு கனவில் - சந்திக்கும்போது, அது நம்மை அடையாளம் கண்டுகொள்ளாது. ஏனெனில் காஸா நெருப்பிலிருந்து பிறந்தது; நாமோ காத்திருப்பிலிருந்தும், இழந்த வீடுகளுக்கான புலம்பல்களிலிருந்தும் பிறந்தவர்கள்.

காஸாவுக்குரிய தனிச்சிறப்பான சூழ்நிலைமைகளும், அதற்கேவுரிய புரட்சிகர மரபுகளும் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதன் இரகசியம் ஒரு புதிரல்ல. அதன் எதிர்ப்பு வலுவான இணைப்புகளால் ஆனது, மக்களாதரவு பெற்றது, தனக்கு என்ன வேண்டும் என்று அதற்குத் தெரியும் (தனது ஆடைகளிலிருந்து பகைவனை தூக்கி எறியவே அது விரும்புகிறது). எதிர்ப்புக்கும் மக்களுக்கும் உள்ள உறவு எலும்புகளுக்கும் சதைக்குமான உறவு, ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவல்ல. காஸாவில் வெளிப்படும் எதிர்ப்பு தொழிலாகவோ, ஒரு நிறுவனமாகவோ மாறவில்லை. 


காஸா யாருடைய வழிகாட்டுதலையும் ஏற்கவில்லை, யாருடைய கையெழுத்தையும் அதிகார முத்திரையையும் நம்பி தனது விதியை ஒப்படைக்கவில்லை.

அதன் பெயர், படம், பேச்சுத்திறன் ஆகியன பிறருக்குத் தெரியுமா தெரியாதா என்பதைப் பற்றி அது அவ்வளவாக கவலைப்படுவதில்லை. ஊடகங்களுக்கான உள்ளுரையாக தான் இருக்கக்கூடும் என்பதை நம்பவுமில்லை. காமிராக்களுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளவுமில்லை, தனக்கு  நிரந்தரமாக சிரித்த முகத்தை அளிக்கவல்ல அரிதாரத்தையும் அணியவில்லை.

அவற்றை அது விரும்பவில்லை, நாமும்தான்.

இதனால்தான் காஸா வியாபாரிகளுக்கு உகந்ததல்ல. வியாபாரத்துக்கானதுமல்ல. அதனாலேயே அராபியர்களுக்கு அது ஈடுஇணையற்ற அறப்பொக்கிஷம்.

காஸாவின் அழகே இதுதான் - நமது குரல்கள் அதனை எட்டுவதில்லை. அதை எதுவும் திசை திருப்புவதில்லை. பகைவனின் முகத்திலிருந்து அதனுடைய முஷ்டியை எதுவும் அகற்றி விடுவதில்லை. அது முடியாத காரியம் - நாம் நிலவின் கிழக்கிலோ அல்லது புதன் கிரகத்தின் மேற்கிலோ (அப்பகுதி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு) இனி நிறுவக்கூடிய பாலஸ்தீன அரசின் அனைத்து வடிவங்களால்கூட அது முடியாத காரியம். வேண்டாம் என்று விலக்கி வைக்கப்படுதலின் பெயரில் காஸாவுக்கு அபார விசுவாசம் - பசியும் விலக்கி வைக்கப்படுதலும், தாகமும் விலக்கி வைக்கப்படுதலும், இடப்பெயர்வும் விலக்கி வைக்கப்படுதலும், சித்திரவதையும் விலக்கிவைக்கப்படுதலும், முற்றுகையும் விலக்கி வைக்கப்படுதலும், மரணமும் விலக்கிவைக்கப்படுதலும்.
 

பகைவர்கள் காஸாவை வெற்றிகொள்ளலாம் (பொங்கு கடல் ஒரு தீவை வெல்லக்கூடும்... அதன் மரங்களை அவர்கள் வெட்டி வீழ்த்தக்கூடும்).

அவர்கள் அதன் எலும்புகளை நொறுக்கக்கூடும்.

அதன் குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உடல்களுக்குள் அவர்கள் டாங்கிகளை பொருத்தக்கூடும். அதைக் கடலில், மண்ணில், இரத்தத்தில் தூக்கி எறியக்கூடும். 

ஆனால் அது பொய்களைச் திரும்பத்திரும்பச் சொல்லி படையெடுத்து வருவோருக்கு இசைவு தராது.

அது தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும்.

அது மரணமுமல்ல, தற்கொலையுமல்ல. தனக்கு வாழத் தகுதியுண்டு என்பதற்கான அறிவிப்பு. அது தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும்.

அது மரணமுமல்ல, தற்கொலையுமல்ல. தனக்கு வாழத் தகுதியுண்டு என்பதற்கான அறிவிப்பு.

                                                                                                                 - புதுவிசை - 42வது இதழ்



இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...