புதன், ஏப்ரல் 24

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch

னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்கும் அதே மதிப்பு என நாம் ஏற்றுக்கொண்ட சமத்துவ அடிப்படையை ஒருவருக்கு ஒரு வாக்கு என்கிற உரிமையின் மூலம் உறுதிப்படுத்தும் இந்தத் தருணம் உண்மையில் கொண்டாட்டத்திற்குரியதுதான். இதன் பொருள், தமக்கிடையே சமமான, தமது அன்றாட வாழ்வில் சக மனிதருடன் சமத்துவத்தால் பிணைக்கப்பட்ட வாழ்க்கைமுறையினை கைக்கொண்டுள்ள குடிமக்கள், வாக்குரிமையிலும் சமத்துவத்தைப் பேணுகின்றனர் என்பதாகும். ஆனால் இந்த 75 ஆண்டுகால ஜனநாயகக் குடியரசு, வாக்குரிமையைத் தவிர வேறெதிலும் சமத்துவத்தைக் கொண்டு வரவில்லை என்பதற்கு இங்கு நிகழ்ந்துவரும் சாதிய வன்கொடுமைகள் கொடுஞ்சான்றுகளாய் உள்ளன. 

உடலையும் மனதையும் காயப்படுத்துகிற எந்தவொரு செயலுமே வன்கொடுமைதான் என வரையறுக்கும் பட்டியல் சாதிகள், பழங்குடிகள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் அதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளையும் மீறப்படும்போது வழங்கப்பட வேண்டிய தண்டனைகளையும் தெரிவிக்கிறது. சாதியவாதிகளை வன்கொடுமை நிகழ்த்தும் குற்ற மனப்பான்மையிலிருந்து விடுவித்து அவர்களை மனிதாயப்படுத்தாமல், வன்கொடுமையின் வரையறையையும் தண்டனையின் கடுமையையும் மாற்றியமைப்பதனால் மட்டும் விரும்பத்தக்க எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது. தவிரவும் சட்டவரம்புக்குள் பிடிபடாத பல வடிவங்களில் தீண்டாமை அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்படுவதை உணர்த்தும் சில அண்மைய நிகழ்வுகளை இங்கே பரிசீலிப்போம். 

**

டவுன், காலனி என்கிற சொற்கள் ஒருவரது மனதுக்குள் நவீனமான நிலப்பரப்பு ஒன்றின் வரைபடத்தை விரிக்கக்கூடும். ஆனால் அரூரைப் பொறுத்தவரை இந்த டவுன் என்பது சாதி இந்துக்களின் வசிப்பிடத்தையும் காலனி என்பது பட்டியல் சாதியினரின் வசிப்பிடத்தையும் குறிக்கிறது. 1883 ஆம் ஆண்டு வெளியான மேனுவல் ஆஃப் சேலம் டிஸ்ட்ரிக்ட் என்ற ஆவணம் வாணியாற்றின் மேற்குக்கரையில் அரூரும் கிழக்குக்கரையில் பறைச்சேரியும் இருப்பதாக குறிப்பிடுவதை கணக்கில் கொண்டால்கூட குறைந்தபட்சம் இந்த வசிப்பிட பாகுபாடு சுமார் 150 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது எனலாம். இந்தப் பறைச்சேரி அரிஜன காலனி என்றாகி பின்னாளில் அம்பேத்கர் நகர் என்று பெயர் சூட்டிக்கொண்டாலும் இன்னமும் வெகுமக்கள் மனதிலும் மொழியிலும் அது காலனி என்றே பதிந்திருப்பதால் ஒவ்வாமையும் வெறுப்பும் நீடிக்கிறது. எனவே சேரி, காலனி, அம்பேத்கர் நகர் என்று தமது வசிப்பிடத்தைச் சொல்வதனால் உண்டாகும் புறக்கணிப்பு, பாதுகாப்பின்மை, அவமதிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் வழியாக “12வது வார்டு” என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. முகவரியில் வார்டு எண்ணைக் குறிப்பிடும் இந்த விசித்திர முடிவுக்குப் பின்னேயுள்ள உளவியலை எழுதினால் அது ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டு கதையைவிட பெரிதாக இருக்கும்.    

மக்களிடையே நிலவும் பாகுபாட்டிலிருந்துதான் வசிப்பிடப் பாகுபாடும் உருவாகிறது.  எல்லா இந்திய/ தமிழக ஊர்களைப் போலவே அரூரிலும் மாநில/ ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்விக்கூடங்கள், நீதிமன்றங்கள், நிதிநிறுவனங்கள், வணிக மையங்கள், தொழிலமைப்புகள், மருத்துவமனைகள், பேருந்துநிலையம், வாரச்சந்தை, டாஸ்மாக் ஆகிய அனைத்துமே டவுன் பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. நகரமயமாக்கம் எல்லா பகுதிகளையும் உள்ளிழுத்துப் போட்டுக்கொண்டு வளரும் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. பேருந்து நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள காலனியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் பள்ளிக்கூடம் ஒன்றைத்தவிர வேறு எந்தவொரு அரசு நிறுவனமும் (தனியாருடையதும்) கிடையாது. அரூர் அரசுக் கலைக்கல்லூரியைக் கட்டிக்கொள்ளத் தேவையான நிலத்தை பட்டியல் சாதியினர் தானமாக கொடுக்க முன்வந்த போதும்கூட போயும்போயும் காலனியாட்கள் இடத்திலா கட்டுவது, அங்கு பிள்ளைகளால் மன ஒருமையோடு படிக்கமுடியாது, பாதுகாப்பு இருக்காது என்றெல்லாம் அவதூறு கிளப்பி கல்லூரியை சாதி இந்துக்கள் தங்கள் பகுதிக்கு கடத்திப்போக அரசும் உடந்தையாக இருந்து. 

நகர உருவாக்கத்தையும் விரிவாக்கத்தையும் திட்டமிடக்கூடியவர்களாக பெரும்பாலும் சாதி இந்துக்களே இருப்பதால், அவர்களது மனதில் சாதி இந்துக்கள் மட்டுமே மக்கள், அவர்கள் வசிக்கும் டவுன் பகுதியை மட்டுமே வாழத்தகுந்த அனைத்தையும் கொண்டதாக வளப்படுத்தினால் போதும் என்கிற கருத்து ஆழப்பதிந்துள்ளது. எனவே, எல்லா கட்டமைப்புகளையும் தாங்கள் மனத்தடையற்று எளிதில் அணுகுவதற்குத் தோதாக தங்களுடைய வசிப்பிடத்தைச் சுற்றியே உருவாக்கிக் கொள்வதோடு அவற்றை தமக்கு மட்டுமேயானதாகவும் அல்லது அவற்றின்மீது தமக்கு முன்னுரிமை இருப்பதாகவும் கருதிக்கொள்கின்றனர். இந்தத் தடைகளுக்கிடையே காலனி அடைந்துவரும் மாற்றங்களை இவர்கள் கவனிப்பதில்லை, கவனித்தாலும் ஏற்கமுடிவதில்லை. 

அரூர் சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து தனித்தொகுதியாக இருந்துவந்த போதும் அதனால் இங்கு பட்டியல் சாதியினரின் பொருளியல் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றமேதும் நிகழவில்லை. அடிப்படை வாழ்வாதாரமான நிலம் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. தொழிலும் வணிகமும்கூட கிடையாது. சூழலை விளங்கிக்கொண்டு தகவமைத்துக் கொள்ளும் முனைப்பு மேலெழுகிறது. விவசாயக்கூலிகளாக இருந்த அவர்களில் ஒருபகுதியினர் கட்டுமானத்தொழிலாளர்களாகி காலப்போக்கில் கட்டுமானத்தொழிலை வசப்படுத்துகின்றனர். 

சாதியம் தங்களுக்கு மறுத்ததையெல்லாம் கல்வியறிவினால் பெற்று விடுவது என்கிற புரிதலுடன் கல்விப்பரம்பலும் அதிகரிக்கிறது. கலை அறிவியல் பட்டதாரிகளும், தொழிற்கல்வி பெற்றோரும் பெருகுகின்றனர். படித்த இளைஞர்கள் ஒருகட்டத்தில் அரசுப்பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். அவர்களது தயாரிப்பின் தீவிரம் இலக்கை அடைவதிலான ஒருவகை பித்தநிலை என்றுகூட சொல்லிவிடுமளவுக்கானது. ஒவ்வொரு தேர்விலும் இந்தக் காலனியிலிருந்து சிலர் பணி நியமனம் பெறுவதைப் பார்த்து சாதி இந்துக்களும்கூட இவர்களிடம் பாடம் கேட்க வரும் நிலை உருவாகி இன்றளவும் நீடிக்கிறது.

 இன்று காலனியாட்கள் மாநில/ ஒன்றிய/ பொதுத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், அறிவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், வழக்கறிஞர்கள் என பல மட்டங்களில் நிறைந்திருப்பதற்குப் பின்னால் உள்ள வரலாற்று வைராக்கியம் ஆய்வுக்குரியது. கட்டுமானத் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் ஈறாக காலனியாட்கள் இன்று பல்லாயிரம் பேரை நிர்வகிக்கும் திறனாளர்களாக வெளிப்பட்டுள்ளனர். ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பு அன்னாடங் காய்ச்சிகளாக இருந்தவர்களின் சந்ததியினரான இவர்களது மாதச் சம்பாத்தியத்தின் கூட்டுத்தொகை சில கோடிகளை எட்டுமளவுக்கானது இவர்களிது பெரும் எண்ணிக்கை. தம் வருமானத்தை, வருங்காலத் தலைமுறையினரை இன்னும் மேம்பட்ட வாழ்க்கைத்தரத்திற்கு உயர்த்துவதற்கான மூலதனமாக செலவழிக்கின்றனர். இப்படியானவர்கள் வாழும் காலனியை “திருடர்களின் பதுங்கிடமாக” அவதூறு செய்து சிறுமைப்படுத்தும் ஓர் அவல நிகழ்வு சமீபத்தில் நடந்தது.

தருமபுரி மாவட்டத்தின் மலைப்பகுதி ஊர்களான சிட்லிங், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, கோவில்தலமான தீர்த்தமலை, அரூர் அம்பேத்கர் நகர் மற்றும் ஆற்றோர வீதி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களின் மக்கள் எளிதாக வந்துபோக ஏதுவாக பழைய பேருந்து நிலையத்தின் வடக்குப் புறத்தில் நுழைவுவழி விடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இப்பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்” கீழ் 3.62கோடி ரூபாயில் கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையத்தில் நுழையவும் வெளியேறவும் மேற்கில் மட்டுமே வழிவிடப்பட்டுள்ளது. முன்பு வடக்குப்புறத்தில் இருந்த வழி புதிய கட்டுமானத்தில் இல்லை. காலனியாட்கள் பஸ்ஸ்டான்டில் செல்போன்களைத் திருடிக்கொண்டு தப்பியோடி விடுவதைத் தடுக்கவே வடக்குப்புறத்திலோ பக்கவாட்டிலோ வழிவிடவில்லை என்று பேரூராட்சி நிர்வாகத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். எல்லா சாதியிலும் சிலர் திருடர்களாக இருக்கும்நிலையில் ஒட்டுமொத்தப் பழியையும் காலனிக்காரர்கள் மீது சுமத்துகிறார்கள். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. நடத்திய அமைதிப் (?) பேச்சுவார்த்தையின் போது, இந்த அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியவேண்டும் என்று கோரியதும், தாங்கள் அவ்வாறாக ஒருபோதும் சொல்லவில்லை என்று மாய்மாலம் பேசி பின்வாங்கினர். வழக்கிலிருந்து தப்பிக்க பின்வாங்கியவர்கள் காலனிக்காரர்கள்மீது வைத்திருக்கும் மதிப்பீட்டை மாற்றிக்கொண்டார்களா இல்லையா என்பதை எந்தச் சட்டத்தினால் கண்டறிவது? 

**

அரூர் வட்டம் போளையம்பள்ளியைச் சேர்ந்த பட்டியல் சாதிப் பெண்கள் மாரப்பநாயக்கன்பட்டியில் கொள்ளுக்காய் பிடுங்கும் வேலைக்குப் போகின்றனர். அங்கு இவர்களுக்கு நிலத்துக்காரர்கள் கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுப்பதை அவ்வழியே சென்ற இளைஞர் ஒருவர் செல்போனில் படம்பிடித்து தனது நண்பருக்கு அனுப்புகிறார். முகநூலில் பார்த்தபோது மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கிய அந்தக் காணொலியையும் அது பற்றிய விவரத்தையும் கோட்டாட்சியருக்கு அனுப்பிவைக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உடனடியாக தெரிவிக்கிறார். இதனிடையே ஊடகங்களிலும் இச்செய்தி பரவி அழுத்தம்கூடிய நிலையில் மறுநாள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து சிறையிலடைக்கிறது காவல்துறை. இதுவரை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். 

கொட்டாங்குச்சியில் டீ கொடுத்ததில் என்ன தப்பு, இதற்கெல்லாமா கேஸ்,  டீ கொடுத்த நல்லெண்ணத்தைப் பார்க்காமல் இப்படி குற்றம் கண்டுபிடிப்பது தகுமா, இப்ப ஜெயில்ல தள்ளிட்டு நாளப்பின்னைக்கு அவங்க முகத்துல எப்படி முழிப்பீங்க, அவங்கள பகைச்சிக்கிட்டு இங்க வாழமுடியுமா, இந்த மாதிரி சட்டமெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா அவங்க இப்படி செய்திருப்பாங்களா, உங்களுக்கு வேலையும் கொடுத்து கூலியும் கொடுத்து, டீயும் கொடுத்து இப்ப நாங்க ஜெயில்லயும் இருக்கனுமா? - என்பதான கேள்விகள் கிளம்பின. இந்தக் கேள்விகளின் சாராம்சத்துடன் சாதியகங்காரத்தையும் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார். 

குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பினர் விவசாயக்குடியினர். மாட்டுக்குத் தாளியில் தினீ வைக்கவும், நாய்க்கு தட்டில் சோறு வைக்கவும் தெரிந்து வைத்திருக்கிற அவர்கள், பட்டியல் சாதிப் பெண்களுக்கு கொட்டாங் குச்சியில் தேனீர் தருகிறார்கள் என்றால் அவர்கள் இந்தப்பெண்களை தமக்கு சமமானவர்களாக கருதவேயில்லை என்பதனால்தானே?  மனிதர்களைத்தான் மனிதர்கள் சமமாக நடத்தமுடியும் என்று குதர்க்கமாக கேட்கிறவர்களிடம் நாம் கேட்கவேண்டியது: இருவரில் யார் மனிதர்? 

**

அரூர் வட்டம் நவலையைச் சேர்ந்த மு.பாஞ்சாலை (59) பட்டியல் சமூகத்தவர். நவலை பஸ்நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்துவரும் இவர் அரூரில் மாட்டிறைச்சி வாங்கிவந்து மாலையில் பொரித்து விற்பதுண்டு. 

சம்பவத்தன்று மூடியிடப்பட்ட தூக்குவாளியுடன் அரசுப்பேருந்தில் ஏறிய  பாஞ்சாலையை பார்த்த நடத்துநர் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. நகரத்துக்கு வெளியே மோபிரிப்பட்டி வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது வண்டியை நிறுத்திய நடத்துனர், மாட்டுக்கறியை பேருந்தில் எடுத்துவருவது சட்டவிரோதம் என்று பொய்சொல்லி பேருந்திலிருந்து இறங்கச்சொல்லி நிர்ப்பந்தித்துள்ளார். பாஞ்சாலை எடுத்துவந்த தூக்குவாளி மூடியிடப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கிறதென்று நடத்துனருக்குத் தெரியாது. ஒருவேளை பாஞ்சாலை இத்தனை நாட்களும் மாட்டுக்கறியே எடுத்துவந்திருந்தாலும் அன்றைக்கு தூக்குவாளியில் மாட்டுக்கறிதான் இருந்ததா என்பதும் தெரியாது. அப்படியே இருந்தாலும் அதில் நடத்துனருக்கு என்ன பிரச்னை? ஆனாலும், நவலையைச் சேர்ந்த - சுக்கா விற்கின்ற அந்தப் பெண்ணின் தூக்குவாளியில் மாட்டுக்கறியைத் தவிர வேறெதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பது அவரது முன்னனுமானம். 

நடுக்காட்டில் 15நிமிடங்கள் நிறுத்தி மல்லுகட்டுவதற்கு பதிலாக அடுத்த நிறுத்தத்திலாவது இறக்கிவிடும்படி பாஞ்சாலை கோரியதை நடத்துநர் ஏற்கவில்லை. அந்த உச்சிவெயிலில், ஒதுங்க ஒரு மரம் செடிகூட இல்லாத நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தால்தான் அடுத்த பஸ்நிறுத்தம் என்று தெரிந்தே பாஞ்சாலையை பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளார். அவமானத்தில் குன்றிப்போன பாஞ்சாலை தன் நிலையை எண்ணி கலங்கியபடியே இறங்கிய அந்த கணம் எவ்வளவு கொடூரமானது? இருதய நோயாளியான தனக்கு பதற்றத்தினாலும் உடல் சோர்வினாலும் ஏதேனும் ஆகியிருந்தால் மகன் அநாதையாகிருப்பானே என்று சொல்லும்போது அவரது குரல் தளுதளுக்கிறது. 

அன்று மாலை அதேவழித்தடத்தில் திரும்பிவந்த அந்தப் பேருந்தை நவலையில் நிறுத்தி மக்கள் நியாயம் கேட்கிறார்கள். எகத்தாளமான பதிலே வருகிறது. மறுநாள் அரூர் பணிமனையில் மேலாளரிடம் முறையிடுகிறார்கள். அவர் நடத்துநரின் செயலை நியாயப்படுத்துகிறார். இந்தக் கொடுமை வெளியே தெரியாமலே போய்விடுமோ என்கிற பதைபதைப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும் அரூர் கோட்டாட்சியருக்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கிறோம்.  துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அடுத்த ஆறாவது நிமிடத்தில் அமைச்சர் பதிலளிக்கிறார். மிகவும் துரிதமாக நடவடிக்கை எடுத்து நடத்துனரை மட்டுமல்லாது உடந்தையாக இருந்தவர் என்ற அடிப்படையில் ஓட்டுநரையும் பணியிடை நீக்கம் செய்து அந்த உத்தரவின் நகலை அமைச்சர் அனுப்பிவைக்கிறார். கூடவே, பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம்,  தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்கு பதியப்படுகிறது. ஓரிரு நாட்களில் ஓட்டுநர் கைதாகிறார். தலைமறைவாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரிய மனுமீது பெற்ற வழிகாட்டுதலுடன் தருமபுரி சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த நடத்துனரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பாஞ்சாலை விசயம் சமூக ஊடகங்களிலிருந்து சர்வதேச ஊடகங்கள் வரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

“மாட்டுக்கறி எடுத்துனு வர்ற இவளுக்கு ஒரு பாடம் புகட்டணும்கிற முடிவோட தான் அந்த கண்டக்டர் நடுவாந்தடத்துல என்னை இறக்கி விட்டிருக்கான். அப்படி செஞ்சதுக்கு அவனுக்கொரு காரணம் இருந்ததை புரிஞ்சிக்க முடியுது. ஆனா பஸ்சுல இருந்த அம்பதறுபது பேர்ல ஒருத்தர்கூட வாய் திறக்காம இருந்ததை நெனைக்கிறப்ப தான் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கலங்கினார். ஒவ்வொரு தவறு இழைக்கப்படும்போதும், அந்தத் தவறினால் பாதிக்கப்படுபவர் யாராக இருப்பினும் அவருக்கு மற்றவர்கள் உதவுவதே பொதுமக்கள் மனசாட்சி என்றும் அது ஜனநாயகம் நீடிப்பதற்கு அவசியமானது என்றும் அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தியதைத்தான் பாஞ்சாலை தனது சக பயணிகளிடம் எதிர்பார்த்திருக்கிறார்.  மாஞ்சோலை தொழிலாளர்கள் 17பேர் தாமிரபரணியில் சுட்டுக் கொல்லப்பட்ட நாளின் மாலையிலும் எவ்வித உறுத்தலுமின்றி திருநெல்வேலிக்காரர்கள் அல்வாவும் மிக்சரும் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக ச.தமிழ்ச்செல்வன் புதுவிசையில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. 

வன்கொடுமை வெளியே தெரிந்துவிட்டாலோ புகார் கொடுத்து விட்டாலோ பஞ்சாயத்துப் பேசி ஏதோவொரு தொகையைப் பெற்றுக் கொண்டு புகார் தராமல் விடுவதையோ புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதையோ பார்த்துப் பழகிப்போன மக்கள், தன்னையும் அவ்வாறே பார்ப்பது பாஞ்சாலைக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. “காசு பணம் இல்லன்னா உழைச்சு சம்பாதிச்சிக்கலாம், மானம் மரியாதை இல்லன்னா…?” அவர் முடிக்காமல் விட்ட இந்தக்கேள்வியை யோசிப்போம். 

** 

அரூர் பகுதியில் இப்படி அடுத்தடுத்து வன்கொடுமைகள் நடப்பதால் “வன்கொடுமை தடுப்புச்சட்டம் என்ன சொல்கிறது” என்கிற தலைப்பில் கருத்தரங்ம் நடத்தினோம். பங்கெடுத்த 200 பேரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். தோழர் ப.பா.மோகனின் உரையினால் புரிதல் பெற்ற அவர்கள் பட்டியல் சமூகத்தவர் புழக்கத்தில் உள்ள ஏரி ஆகிகிரமிப்பு, பஞ்சமி நில அபகரிப்பு, விசிக ஒன்றியச் செயலாளர் மீது தாக்குதல் – வழக்கு என தங்கள் பகுதியில் நடந்த தீண்டாமை நிகழ்வுகளை விவரித்தார்கள். இனி எங்கு தீண்டாமை வெளிப்பட்டாலும் சட்டத்தின் முன் துணிச்சலுடன் நிறுத்துவோம் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.  

இந்தக் கருத்தரங்கம் உருவாக்கிய தாக்கத்தை தணிப்பதற்காகவோ அல்லது வன்கொடுமைகள் நடந்த இடங்களில் செய்து தீர்க்கவேண்டிய சடங்காகவோ அடுத்த சில நாட்களிலேயே தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவும் இணைந்து  போளையம்பள்ளியில் “மாபெரும் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு விழா” ஒன்றை திடீரென நடத்தின. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கவிருப்பதாக அழைப்பிதழில் இருந்தாலும் அவர்கள் வரவில்லை. பந்தல், மைக்செட், மதிய உணவுக்கான சமையல் ஆகியவற்றை ஏற்பாடு செய்தவர்கள், வன்கொடுமைக்காளான போளையம்பள்ளி செல்வி உள்ளிட்ட பெண்களுக்கோ நவலை பாஞ்சாலைக்கோ கூட தகவல் தரவில்லை என்பதிலிருந்தே இவ்விழாவின் நோக்கம் சந்தேகத்திற்குரியதாகிறது. இப்பகுதியின் பட்டியல் சமூகத்தவரல்லாத சாதி இந்துக்கள் ஒரு சிலர் வந்திருந்தபோதிலும் அவர்கள் நிகழ்வில் ஒன்றாமல் இருந்தனர். 

விழாவுக்கு தலைமை வகித்த சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக்கண்காணிப்பாளர் இங்கு ஒரு சின்ன சம்பவம் நடந்துவிட்டது என்று ஆரம்பித்து உபதேங்களாக உளறிக்கொட்டியதைப் பார்க்கும்போதே இவர் வன்கொடுமை புகார்களை கையாளும் லட்சணம் பல்லிளித்தது. புள்ளியியல் துறை உதவி இயக்குநரும், அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளரும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து பேசியிருக்காவிட்டால் ஏதோவொரு நலத்திட்ட விளக்க முகாம் போல இவ்விழா முடிந்திருக்கும். தாங்கள் எதிர்கொள்ளும் தீண்டாமைப் பிரச்னைகளைப் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பட்டியல் சமூகத்தவர்கள் கோரியபோதும் ஒருவரைக்கூட பேச அனுமதிக்காமல் தேசியகீதம் போட்டு பதற்றமாக நிகழ்வை முடித்தார்கள். பிரச்னைகளை எழுத்துப்பூர்வமாக  கொடுத்தபோது, இது மனுவாங்கும் முகாமல்ல என்று ஆதிதிராவிடர் நல அலுவலர் உட்பட அனைவருமே வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டனர். எனில் இந்த விழா எதற்காக நடந்தது? 

**

தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று சொன்னால் பரிகாரம் செய்து விட்டு தொடர்ந்து பாவம் செய்வார்கள் என்பதனால்தான் தீண்டாமை ஒரு குற்றம் என்று வரையறுத்து அதற்குரிய தண்டனைகளையும் கடுமையாக்கினோம். ஆனால் அதனாலேயே யாருக்கும் நீதி கிடைத்து விடுவதில்லை. தம்மீது குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளதை  பொதுவெளியில் சொல்வது, புகார் தருவது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவது, குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்வது, பிணையில் வருவதற்கான அவர்களது தகிடுதத்தங்களை முறியடிப்பது, இறுதிவரை வழக்காடி தண்டனை பெற்றுத்தருவது என  ஒவ்வொரு கட்டத்தைக் கடப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதல்ல. உதவியும் தோழமையும் சட்ட அறிவுடன் தலையிடும் வழிகாட்டுதலும் கிடைக்குமானால் அஞ்சாமல் தளராமல் உறுதியுடன் போராடுவோம் என்பதை செல்விகளும் பாஞ்சாலைகளும் உணர்த்துகிறார்கள். உணரும் நுட்பம் நமக்குத் தேவை.   

 நன்றி: நீலம், ஏப்ரல் 2024 இதழ்

 


திங்கள், ஜனவரி 22

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்


ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புதிய ராம் மந்திர் விரிவாக்கத்திற்காக ஆகஸ்ட் 2020 இல் இடிக்கப்பட்டது. படம்: The Wire

இராமன் அயோத்தியில் பிறந்ததாக சொல்லகிறார்கள். அயோத்தியில் அவர் விளையாடினார், இளைஞராக இருந்தபோது சுற்றித் திரிந்தார், இங்கிருந்து தான் வனவாசம் சென்றார், பிறகு திரும்ப வந்து நாட்டை ஆண்டார்... அவரின் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நினைவுபடுத்தும் வகையில் அயோத்தியில் பல கோயில்கள் உள்ளன. அவர் விளையாடிய இடத்தில் குலேலா மந்திர். அவர் படித்த இடத்தில் வசிட்ட மந்திர். அவர் ஆட்சி புரிந்ததாக சொல்லப்படும் இடத்திலும் ஒரு கோயில் உள்ளது. அவர் உணவு உட்கொண்ட இடம் சீதையின் சமையலறை என்று அழைக்கப்படுகிறது. பரதன் தங்கிய இடத்தில் ஒரு கோயில். அனுமனுக்கு கோயில்... சுமித்திரைக்கு, தசரதனுக்கு... இப்படி 400, 500 ஆண்டுகால கோயில்கள் நகரெங்கும். இந்த கோயில்கள் அனைத்தும் முஸ்லிம்களால், முகலாயர்களால் இந்துஸ்தானம் ஆளப்பட்டக் காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டவை.

என்ன விநோதம் இது? முஸ்லிம்கள் எப்படி கோயில்களை கட்ட அனுமதித்தனர்? அவர்கள் கோயில்களை அழித்ததாக அல்லவா சொல்கிறார்கள்! அவர்களின் கண்களுக்கு முன் இத்தனை கோயில்கள் கட்டப்பட்ட போது அவர்கள் சும்மா இருந்தார்களா? ஏதும் செய்யவில்லையா? என்னமாதிரியான ஆட்சியாளர்கள் அவர்கள் - கோயில்கள் கட்ட இடம் கொடுத்துக்கொண்டே இருந்தார்களே... அது பொய்யான செய்தியாகதான் இருக்கவேண்டும். குலேலா மந்திர் முஸ்லிம் மன்னன் கொடுத்த இடத்தில் உள்ளது என்பது பொய்யாகத்தான் இருக்கவேண்டும்.  திகம்பர அக்காடாவில் உள்ள ஏடுகள் அவர்கள் 500 பீகா அளவிலான நிலத்தை வழங்கினார்கள் என்று குறிப்பிடுகின்றன. அதுவும் பொய்யோ என்னவோ? நிம்ரோ அக்காடா உள்ள இடம் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நவாப் சிராஜ் உத் தவுலாவால் வழங்கப்பட்டது என்ற செய்தி எப்படி உண்மையாக இருக்கமுடியும்? பாபர், அவர் கட்டியதாக சொல்லப்படும் மசூதி - இவை மட்டுமே உண்மை.

அப்படி என்றால் இராமாயணம் பாடிய துளசிதாசரும் உண்மையைச் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது. பாபர், கோயிலை இடித்து மசூதி கட்டிய ஆண்டு 1528 தான் என்பார்கள். அந்த ஆண்டு துளசி உயிருடன் இருந்தார். அவர் பிறந்தது 1511இல். இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் அதைப் பற்றி குறிப்பிட்டிருப்பார் தானே?. பாபர் இராமன் பிறந்த இடத்தை அழித்ததாக சொல்லப்படும் காலக்கட்டத்தில்தான், "நான் யாசித்து உண்ணுகிறேன், மசூதியில் படுத்து உறங்குகிறேன்" என்று துளசி பாடினார். இதற்குப் பிறகே இராமசரித்திரமனஸ் காவியத்தை எழுதினார். இராமருக்கான கோயில் இடிக்கப்பட்டு, அதன் சிதிலங்களின் மீது மசூதி எழுப்பப்பட்ட நிகழ்வு அவருக்கு ஏன் வருத்தம் அளிக்கவில்லை? அவர் இது குறித்து எங்காவது எழுதியிருக்க வேண்டுமே? ஏன் செய்யவில்லை?

அயோத்தியில் உண்மை, பொய் ஆகிய சொற்களுக்கும் பொருள் இல்லாமல் போய்விட்டது.

5 தலைமுறைகளாக முஸ்லிம்கள் இங்கு பூந்தோட்டங்களை வளர்த்துள்ளனர். இந்தப் பூக்கள் கோயில்களில் - கடவுளருக்காக, இராமனுக்காக... யாருக்குத் தெரியும், எப்போதிலிருந்து என்று! ஆனால் காலங்காலமாக முஸ்லிம்கள் சன்னியாசிகளுக்கு, அடியார்களுக்கு, இராமனின் பக்தர்களுக்கு செருப்புகளைத் தைத்துக் கொடுத்துள்ளனர்.

சுந்தர பவனம் கோயிலை 40 ஆண்டுகளாக முஸ்லிம்கள்தான் பராமரித்து வந்தனர். 1949ஆம் ஆண்டு முன்னு மியான் இந்தப் பொறுப்பை ஏற்றார். டிசம்பர் 23, 1992 வரையில் தனது கடமையை நிறைவேற்றினார். கோயிலுக்குப் போதுமான பக்தர்கள் வராத சமயங்களில், வழிபாட்டு பாடல்கள் பாடப்பட்ட போது அங்குள்ள தாளவாத்தியங்களை இசைக்கத் தயங்காத அவர், அயோத்தியில் எது பொய், எது உண்மை என்பது குறித்து யோசித்திருப்பாரோ?

அயோத்தியில் அகர்வால் சமுதாயத்தினர் கோயில் கட்ட முற்பட்ட போது அவர்கள் கொணர்ந்த செங்கற்கள் ஒவ்வொன்றிலும் 786 எண் பொறிக்கப்பட்டிருந்தது. அவற்றை வழங்கியவர் ராஜா ஹூசைன் அலி கான். இந்த உண்மையை என்னவென்று சொல்வது? அகர்வால் மக்களுக்கு என்ன பித்து பிடித்திருந்ததா? அல்லது ஹூசைன் அலி கான்தான் சித்தம் தப்பியிருந்தாரா? ஒரு கோயில் கட்ட அவர் ஏன் செங்கற்களை இலவசமாக வழங்கினார்?

வழிபாட்டில் இணைந்த கரங்களை இந்து, முஸ்லிம் என்று பிரிக்க இயலாது, அவர்கள் அனைவருமே கடவுளை வழிபட வந்தவர்கள். 786 என்ற அந்த எண் இந்தக் கோயிலை அனைவருக்குமானதாக ஆக்கியது.

டிசம்பர் 6, 1992 மட்டும்தான் உண்மையா?

டிசம்பர் 6, 1992க்குப் பிறகு அயோத்தியின்  கோயில்கள் அனைத்தும் அரசின் கட்டுபாட்டுக்குள் வந்தன. அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. கோயில்களில் தீபாராதனை செய்ய இயலாமல் போனது. மக்கள் கோயில்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டனர். 

பாபர் மசூதியின் மீது ஏறி இராமனை தமது கைப்பிடிக்குள் கொண்டுவர விரும்பியவர்களின் ஆணவத்தைப் பார்த்து மூடிய கதவுகளுக்கு பின்னால் இருந்த கடவுளர்கள் அவர்களைச் சபித்தார்களா?

அயோத்தியின் பழைய கோயில்களில் இரத்தவாடை அடிக்கிறதோ? இராமனின் பெயரில், பாரதத்தின் பெயரில் சிந்தப்பட்ட இரத்த வாடை அடிக்கிறதோ?

ஒரு நகரம் ஒரு பிரச்சனையாக உருமாற்றப்பட்ட கதைதான் அயோத்தி,

ஒரு நாகரிகத்தின் மரணம் பற்றிய கதைதான் அயோத்தி.



இந்தி மொழியாக்கம் - நிவேதிதா மேனன்.
ஆங்கிலம் வழித் தமிழில் - வ. கீதா

வெள்ளி, ஜனவரி 19

பி.பள்ளிப்பட்டியும் கு.அண்ணாமலையும் - ஆதவன் தீட்சண்யா

அரசியல் காளான் அண்ணாமலை தருமபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டி தேவாலயத்தில்  செய்த அத்துமீறல் குறித்த இக்கட்டுரையின் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் இன்றைய (19.01.2024) தீக்கதிர் நாளேட்டில் வெளியாகியுள்ளது. 

 



17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேந்தமங்கலம் வழியாக சேலம் வந்த மறைப்பணியாளர் இராபர்ட் டி நொபுலி அம்மாவட்டத்திற்கு கிறிஸ்தவத்தைக் கொண்டுவந்து சேர்த்தாகமேனுவல் ஆஃப் சேலம் டிஸ்ட்ரிக்ட்என்கிற ஆவணம் தெரிவிக்கிறது. சற்றொப்ப அப்போதேஅதாவது 1633ஆம் ஆண்டிலிருந்தே தனிப்பங்காக செயல்படத் தொடங்கிய கோவிலூருடன் (அறியப்படாத கிறிஸ்தவம், நிவேதிதா லூயிஸ்)  பின்னாட்களில் பி.பள்ளிப்பட்டி நெருங்கிய தொடர்பினைத் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ சன்றொன்றின்படியே பார்த்தாலும்கூட 1750ஆம் ஆண்டிலிருந்தே அங்கு கத்தோலிக்கர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வகையில் தொன்மையான கிறிஸ்தவ ஊர்களில் பள்ளிப்பட்டியும் ஒன்று. ஆனால் இங்கு பரவத்தொடங்கி ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாகியும் இன்னமும் தலித்துகளைத் தவிர வேறு சாதியினர் எவரும் கிறிஸ்தவத்தை தழுவவில்லை.  என்றாலும் இங்குள்ள தூய கார்மேல் அன்னை ஆலயம் இப்பகுதியின் பல்சமயத்தவரது வணக்கத்தலமாகும். அருட்தந்தை சார்லஸ் டெவின் அவர்களால் 1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புனித மேரி பள்ளி, இப்பகுதியில் சாதிமத பேதமற்று எல்லா மக்களுக்குமாக கல்விப்பரம்பலை மேற்கொண்டுவருகிறது. 

பள்ளிப்பட்டியின் முகப்பு போல உயர்ந்து நிற்கும் மல்லிகார்ஜூன மலையில் புனித லூர்து மேரியின் சிலை ஒன்று 1958ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. மலையின் உச்சியிலிருந்து அடிவாரம் வரைஇயேசு பாடுகளின் 14 நிலைகள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மசபியேல் மலை புனித லூர்து அன்னை கெபி என்றழைக்கப்படும் இவ்வழிபாட்டுத்தலத்தின் பகுதியாக மலையடிவாரத்தில் திறந்தவெளியில் மாதா சுருவம் நிறுவப்பட்டுள்ளது. மாதா சுருவத்தையொட்டி தெற்கு நோக்கி நெடுஞ்சாலை வரைக்குமாக அழகுற நீள்வடிவில் கட்டப்பட்டுள்ளது புனித லூர்து அன்னை திருத்தலம். 

பள்ளிப்பட்டியில் (ஊருக்குள்) இருக்கும் தூய கார்மேல் அன்னை ஆலயம்,  மசபியேல் மலை புனித லூர்து அன்னை கெபி, மாதா சொரூபம், புனித லூர்து அன்னை திருத்தலம் ஆகியவை சாதி மத பாலின பேதமின்றி எவரும் வந்து வணங்கிச்செல்லும் தலங்களாகும். அதிலும் தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தமான பாஸ்கோ திருவிழா சமயத்தில் கெபியின் பெருந்திடல் கொள்ளாத அளவுக்கு பன்மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து குவிகின்றனர் (பள்ளிநாட்களில் ஒருமுறை வாடகை சைக்கிளேறி வந்து விடியவிடிய பார்த்த அனுபவமுண்டு). இவர்களெல்லாம் வெகு இயல்பாக வந்து வழிபட்டுச் சென்றுகொண்டிருக்கையில் அரசியல் காளான் அண்ணாமலை ஜனவரி 8 ஆம் தேதி இங்கு வந்தது மட்டும் ஏன் சர்ச்சைக்குள்ளானது? மாதாவுக்கு மாலையணிவிக்கக்கூடாது என அவர் தடுக்கப்பட்டது ஏன்?  - விசாரித்தறிய ஜனவரி 10 ஆம் தேதி பி.பள்ளிப்பட்டிக்குச் சென்றிருந்த என்னுடன் சமூக நல்லிணக்க மேடை சிசுபாலன், சிபிஐஎம் மாவட்டச்செயலாளர் குமார், யாசட் செயலாளர் வழக்குரைஞர் ராகுல் ஆகியோரும் வந்திருந்தனர். பள்ளிப்பட்டியில்சம்பவம்செய்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரிடமும் உரையாடினோம். உணர்ச்சிவயப்படுகிறவர்களாக அல்லாது நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர்களாகவும் எதிர்வினை ஆற்றக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர் அந்த இளைஞர்கள். அத்துமீறி தாண்டும் ஆட்டுக்குட்டிக்கு என்ன செய்வார்களோ அதையே தான் அண்ணாமலைக்கும் செய்து அனுப்பியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.  

**

கெபியையொட்டியும் திடலைச் சுற்றியும் 1960ஆம் ஆண்டு முதல் லூர்துபுரம் என்கிற குடியிருப்புப் பகுதி உருவாகி வளர்ந்து தற்போது தனி வார்டு என்கிற அளவுக்கு விரிவடைந்துள்ளது. இங்கு (தலித்) கிறிஸ்தவர்களன்றி  வேறு மதத்தவர் எவரும் வசிக்கவில்லை. இவர்களில் ஒருவர்கூட பாஜகவில் இல்லை. ஆனாலும் 7.1.2024 அன்று மாலை அப்பகுதியின் நெடுஞ்சாலை நெடுக பாஜக கொடிகள் வெளியூர் ஆட்களால் கட்டப்பட்டிருக்கின்றன. மதச்சிறுபான்மையினருக்கும் தலித் விடுதலைக்கும் எதிராக வெறுப்பை விதைத்துவரும் பாஜகவின் கொடியை அம்மக்களது வாழ்விடத்தில் ஊன்றியதே ஆத்திரமூட்டும் நடவடிக்கைதான்.  என் மண் (மூளை!), என் மக்கள் என்று எப்பவாவது ஏதாச்சுமொரு ஊரின் ஒரு தெருமுக்கில் கார்விட்டு இறங்கி நாலடி நடப்பதை நடைபயணம் என்று கேலிக்கூத்தாடிக் கொண்டிருக்கும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை 08.01.2024 மாலை அவ்வழியாக அரூர் செல்வதாகவும், லூர்துபுரத்தில் இறங்கி மாதா சிலைக்கு மாலை அணிவிக்கப்போவதாகவும் செய்தி கிடைக்கிறது. சொந்த ஆதாயங்களுக்காக ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கும் தாவி அரசியல் பாதுகாப்பை பெற்றுவந்த உள்ளூர்க்காரர் ஒருவர்தான்ஆமாம் ஒரே ஒருவர் தான் - இப்போது அதே காரணங்களுக்காக  அண்ணாமலையுடன் சகவாசம் வைத்துக்கொண்டு இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பதாக கிடைத்த தகவல் அப்பகுதி மக்களிடையே சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

எட்டாம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் கார்களில் வந்திறங்கிய அண்ணாமலை கும்பலுக்கு மாதாவை வணங்குவதுதான் நோக்கமென்றால் ஆரவாரமில்லாமல் திடலுக்குள் நுழைந்து தேவாலயத்தின் பின்புறம் திறந்தவெளியில் உள்ள மாதாவை வணங்கிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் மாதாவிடம் வருவதற்கு தேவாலயத்திற்குள் நுழைந்து பலிபீடத்தையொட்டிய வாயிலை தேர்வுசெய்துள்ளனர். அதுவும் அங்கொரு பிரச்னையில்லை. பின் எதற்காக லூர்துபுரத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஊர்மக்களும் திரண்டுவந்து அண்ணாமலை மாதாவுக்கு அணிவிக்கக்கூடாதென்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்? மணிப்பூர் உள்ளிட்டு நாடுமுழுதும் சிறுபான்மையினர் மீது வெறுப்பினைப் பரப்பி மக்கள் ஒற்றுமையைச் சிதைத்து பிரிவினையை உண்டாக்கி வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் அண்ணாமலை கும்பலுக்கு மாதாவை வணங்கும் அருகதை இல்லை என்பதை உணர்த்தவே இந்த எதிர்ப்பு.

பள்ளிப்பட்டி மக்களது இந்த எதிர்ப்பில் பொதிந்துள்ள உண்மையை எதிர்கொள்ளும் அரசியல் திராணியற்ற அண்ணாமலை, கோவிலை அரசியலாக்க வேண்டாம், கோவில் எல்லோருக்கும் பொது என்றார். இப்படி சிதம்பரம், ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் போய் வாதாடுவாரா என்பது ஒருபுறமிருக்க, திமுககாரன் மாதிரி பேசாதீர்கள், மணிப்பூரைப் பற்றி பேசும் நீங்கள் இலங்கையில் நம் தமிழ்மக்கள் கொல்லப்பட்ட போது என்ன செய்தீர்கள் என்று அடுத்த திசைதிருப்பலை ஆரம்பித்தார். (சரி, காங்கிரசும் திமுகவும் செய்யத்தவறியதை அடுத்த பத்தாண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு எடப்பாடியுடன் சேர்ந்து ஏதாச்சும் செய்திருக்கலாமே என்று கேட்டால் அதற்கு என்ன உளறுவாரோ!) ஆனால் இளைஞர்கள் தாங்கள் எல்லாவற்றையும் படித்தறிந்து சுய அறிவோடு இருப்பதாகவும், தங்களது கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுமாறும் வற்புறுத்தவே, ஆத்திரமடைந்த அண்ணாமலை 10 ஆயிரம் பேரை திரட்டிவர்றேன் தடுத்துப் பார் என்று முண்டா தட்டியதுடன் எல்லா ஊரையும் கூட்டுங்ணே என்று மிரட்ட ஆரம்பித்தார். இந்தாள் பேச்சைக்கேட்டு இவரது நிழல்கூட வராது என்பது தெரிந்திருந்தும் இப்படி பேச காரணம், பி.பள்ளிப்பட்டியில் நிலவும் மத நல்லிணக்க உணர்வில் கோடாலி போடுவதும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மற்ற ஊர்களைத் தூண்டிவிடுவதும்தான். கடைசியில், போலிஸ் துணையுடன் மாதாவுக்கு மாலையணிவித்துவிட்டு ஓடிய அண்ணாமலைக்கு உண்மையில் பக்தி இருக்குமானால் வழியில் பாப்பிரெட்டிப்பட்டி பழனி முருகனுக்கோ இருளப்பட்டி காணியம்மனுக்கோ மாலையணிவிப்பதாக ஏன் அடம்பிடிக்கவில்லை? அவ்வளவு ஏன், அரூரில் அவர் பேசிய இடத்திலேயே இருந்த அண்ணல் அம்பேத்கர் சிலையின் பக்கம் திரும்பவேயில்லை. அதற்கும் தைரியம் வேண்டுமல்லவா?

நாங்கள் விசாரித்தவரை, அண்ணாமலைக்காக ஊர்ப்புள்ளி ஒருவர்  பங்குத் தந்தையிடம் பேசி அனுமதி பெற்றதாக தெரிகிறது. ஆனால், பள்ளிப்பட்டியில் இறங்குவதோ மாதாவுக்கு மாலையணிவிப்பதோ அண்ணாமலையின் பயணத்திட்டத்தில் இல்லையென்றும், ஆத்திரமூட்டி சீர்குலைவு வேலை செய்வதற்காகவே அவர் திடீரென இங்கு இறங்கியதாகவும் ஊர்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனுமதி பெற்று வந்தாரா இல்லையா என்பதல்ல, சிறுபான்மை மக்களின், கிறிஸ்தவர்களின் எதிரியான அண்ணாமலை மாதா சுருவத்துக்கு மாலையணிவிப்பது நியாயமா என்பதுதான் தங்களது கேள்வி என்கின்றனர்.

அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் எத்தகைய சிறுபான்மை/ கிறிஸ்தவ வெறுப்பில் நொதித்தவர்கள் என்பதற்கு கேரவன் இதழில் வெளியான அசீமானந்தா என்கிற சங் பயங்கரவாதியின் நேர்காணலில் உள்ள ஒரு விசயம், போதுமான விளக்கமாக இருக்கமுடியும்அந்தமானில் 2004 சுனாமி நிவாரண முகாம் ஒன்றில் தங்கியிருந்த ஒரு கிறிஸ்தவப்பெண் தனது குழந்தைக்குப் பால் வேண்டும் என்று அசீமானந்தாவின் ஆட்கள் நடத்திய முகாமுக்கு வந்து கேட்டிருக்கிறாள். அந்த ஆட்கள் மறுத்துவிட்டனர்.  மூன்று நாட்களாக எந்த உணவும் கிடைக்காத அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் பாலாவது தராவிட்டால் குழந்தை இறந்துவிடும் என்று அந்தப் பெண் கெஞ்சியிருக்கிறாள். அதன்பின் அந்த ஆட்கள் அசீமானந்தாவிடம் சென்று கேட்கும்படி சொல்லவே அவள் அந்த சுவாமிஜியை சந்தித்துக் கேட்டபோது, அவன் கிறிஸ்தவளான உனது குழந்தைக்கு இங்கே பால் கிடைக்காது என்று மறுத்து அவளை விரட்டியிருக்கிறான்.

ஒரு பச்சிளம் குழதைக்குப் பால் வார்க்கவும்கூட மனமிளகாத அசீமானந்தாவும் அண்ணாமலையும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் தான். “சேவை என்ற முகமூடியை அணிந்துகொண்டு இந்தச் சாத்தான்கள் ஆதிவாசிகளைச் சுரண்டுகிறார்கள். பொய்களும், ஏமாற்றுதல்களுமே அவர்களது மதம்என்று அசீமானந்தா சொன்ன இந்த அபாண்டக் குற்றச்சாட்டை நீங்கள் அண்ணாமலையிடமும் கேட்கலாம். மைக்கேல்பட்டி மாணவி படிப்புச்சுமையின் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கட்டாய மதமாற்றத் துன்புறுத்தலால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என்று இந்த அண்ணாமலை பொய்ச்செய்தி பரப்பி நூற்றாண்டுக்கும் மேலான அந்தப் பள்ளியின் கல்விப்பணிக்கு களங்கம் கற்பித்தார். அத்துடன் மதமாற்றம் தமிழகத்திலே வேகமாக பரவும் ஒரு விஷச்செடி, இங்கே உடனடியாக மதமாற்ற தடைச்சட்டம் தேவை என்று கூப்பாடு போட்டதை பள்ளிப்பட்டி மக்கள் நினைவுபடுத்துகின்றனர். மதமாற்ற ஆபத்து என்னும் இவர்களது கூப்பாட்டிற்கு அப்பால், 1951ஆம் ஆண்டுமுதல் இப்போதுவரையிலும்கூட நாட்டின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.3% என்பதைச் சுற்றித்தான் இருக்கிறது

இந்துமதத்தின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்க வேறு மதங்களைத் தழுவுவதைத் தடுக்க சங் கும்பல் எந்த எல்லைக்கும் செல்வார்கள். பாதிரி ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் எரித்துக் கொன்றதைக்கூட மதமாற்றத் தடுப்பு நடவடிக்கை என்று அவர்களால் நியாயப்படுத்த முடியும். பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டங்கள், யார் மீது வேண்டுமானாலும் கட்டாய மதமாற்ற முயற்சி துன்புறுத்தல் என்று பொய்வழக்குப் போடுவதற்கான கெடுவாய்ப்பினை வழங்குகிறது. கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் சமூகப்பணிசார் நிறுவனங்களை முடக்குவதற்கு இந்தச் சட்டங்கள் போதுமானவை அதேபோல பசுவதைத் தடுப்புச்சட்டங்கள், லவ் ஜிகாத் ஆகியவை கிறிஸ்தவர்களையும் தாக்கும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

தேவாலயங்களையும் அவற்றின் சொத்துகளையும் அடித்துப் பிடுங்கும் அட்டூழியத்துக்கும் குறைவில்லை. அதன் உச்சமாக, டாமனில் 400 ஆண்டுகால தொன்மையான அன்னை அங்கஸ்டியாஸ் தேவாலயத்தை இடித்துவிட்டு அவ்விடத்தில் கால்பந்தாட்ட மைதானத்தை அமைக்கப் போவதாக நிர்வாகரீதியாக சங்கிகள் செய்த முயற்சி கடும் கண்டனத்திற்குள்ளான பிறகே கைவிடப்பட்டது

 “முதலில் முஸ்லிம்கள் பிறகு கிறித்துவர்கள்என்று தமது தாக்கிலக்கைச் சுட்டும் முழக்கம் ஒன்று சங் கும்பலிடையே புழக்கத்திலுண்டு. ஆனால் முன் பின் என்றில்லாமல் அவர்கள் இரு மதத்தவர் மீதுமே தொடர் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். தேவாலயங்களை எரிப்பது, வழிபாடுகளைத் தடுப்பது, பொது இடங்களில் அவமதிப்பது, கிறிஸ்தவ நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்குவது, கன்னியாஸ்திரிகளை துன்புறுத்துவது, தொழில்/ வணிக நடவடிக்கைகளிலிருந்து வெளியேற்றுவது, பாதிரிமார்களை பாவாடைகள் என இழித்துரைப்பது, ஸ்டேன்ஸ் சாமி போன்றவர்களை சிறையிலடைத்துக் கொல்வது என்று கிறிஸ்தவர்கள் மீதான அவர்களது தாக்குதல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன. 2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களிலேயே கிறிஸ்தவர்கள் மீது 525 தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும் மணிப்பூர் தாக்குதல்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் கூடுமெனவும்யுனைடெட் கிரிஸ்டியன் ஃபோரம்என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டதுடன் குடியரசுத்தலைவரையும் சந்தித்து முறையிட்டுள்ளது. பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கையை விடவும் அச்சத்தினாலும் காவல்துறையின் உதாசினத்தினாலும் பதிவாகாத வழக்குகளின் எண்ணிக்கை பன்மடங்காகும் என்கிறது மற்றோர் ஆய்வு.  மணிப்பூரில் 36 மணிநேரத்தில் 249 கிறிஸ்தவ தேவாலயங்கள்  எரிக்கப்பட்டதாக இம்பால் ஆர்ச் பிஷப் தெரிவித்த கவலையை இந்தியன் எக்ஸ்பிரஸ் (18 ஜூன் 2023) இதழ் வெளியிட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்கள் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களில் முன்னிலை வகிப்பதாக கூறும் Evangelical Fellowship of India என்ற அமைப்பின் அறிக்கை, சமீபத்திய ஆண்டுகளில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் (சாதியத்தாலும்) அதிகரித்துவரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருக்கிறது என்று அபாயமணியை ஒலிக்கச் செய்திருக்கிறது. இந்த நிலைமைக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பில்லையா? அகண்ட பாரதம் என்கிற இந்து ராஷ்ட்ராவுக்காக துறவியர் கூட்டம்  உருவாக்கியுள்ள அரசியல் சாசன வரைவு, இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளதை அண்ணாமலை ஏற்கிறாரா எதிர்க்கிறாரா?

கடந்த 2023 ஏப்ரலில் ஈஸ்டரின்போது டெல்லி சேக்ரட் ஹார்ட் கதிட்ரல் தேவாலயத்திற்கு பிரதமர் வந்ததை நல்லிணக்க சமிக்ஞையாக கருதி நிலைமை சீராகும் என்று கிறிஸ்தவ மதத்தலைவர்கள் தெரிவித்த நம்பிக்கை பொய்த்துப் போனது. கிறிஸ்தவர்கள் மீது பரப்பப்படும் வெறுப்புக்கும் அதிகரிக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக பேசுங்கள் என்று அரசியல் சாசன உயர் பொறுப்புகளை வகித்த 93 ஆளுமைகள் மன்றாடிய பிறகும்கூட வாய்திறக்க மறுத்தவர் மோடி. 2023 டிசம்பர் 25 அன்று, தான் அளிக்கும் கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்க வருமாறு மோடி விடுத்த அழைப்பினை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதத் தலைவர்கள் நிராகரித்துவிட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காராணம், இயேசுவையும் கிறிஸ்தவ சமூகம் நாட்டுக்கு ஆற்றும் பணிகளையும் கிறிஸ்தவர்களிடையே போற்றிப் பேசும் மோடி, தனது ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ சமூகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக எதுவும் பேச மறுக்கிறார் என்பதுதான். இவ்விசயத்தில் மோடியின் அமைதி, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கும் உரிமைபறிப்புக்கும் அவர் தரும் ஒப்புதலாகவும் உந்துதலாகவுமே அவரது ஆதரவாளர்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியமைத்ததுமேகர் வாப்ஸி’ (தாய் மதத்திற்கு திரும்புதல்) என்று சிறுபான்மையினர் மீதான தாக்குதலைத் தொடங்கியவர்கள் இப்போதுவரை நானாவித வடிவங்களில் தாக்குகிறார்கள். மோடியின் சேவகன் அண்ணாமலையின் அத்துமீறலும் மிரட்டலும் அதிலொன்று என்பதற்குமப்பால் அதில் வேறொரு வெங்காயமுமில்லை என்பதை பள்ளிப்பட்டி மக்கள் அறிந்தேயிருக்கிறார்கள்.  இப்போது நீங்களும் அறியக்கடவீர்.

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...